Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று! நாளை! - தொடர் - 8 22

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2013 | , , , , , ,

அன்பான நண்பர்களே! 

அதிரைநிருபர் இணைய தளத்தின் பொன்போன்ற  வாசகர்களால் ஆர்வமுடன் படிக்கப் பட்டு வந்த இந்தத் தொடர் இடையில் ரமழான் மாதத்துக்கான அமல்களின் பொருட்டு  தொடர்ந்து எழுத இயலா சூழலால் இடையில் சில வாரங்கள் இடை  நிறுத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனித் தொடர்ந்து வெளிவர இறைவன் துணை இருப்பானாகவும். 

நேரமின்மை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அரசியல் ஒரு சாக்கடை என்று வர்ணிக்கப் படும் வரலாற்றுத் தகுதி படைத்தது என்பதால் புனித மாதத்தில் சாக்கடை பற்றியும் அதில் உழலும் புழுக்களைப் பற்றியும் எழுதி –அதை வெளியிட்டு பாவங்களை சுமந்து கொள்ள வேண்டாம் என்பதும் ஒரு காரணம். 

இதற்கு முன் அத்தியாயத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி அவருடன் இளம் வயதில் நெருங்கிப் பழகிய கவிஞர் கண்ணதாசன் கூறி இருந்த சில செய்திகளை சொல்லி முடித்து இருந்தேன். இளவயதில் நெருங்கிப் பழகிய  என்கிற வார்த்தைகளை இன்னும் இரண்டு முறை படித்துக் கொள்ளுங்கள். காரணம் இளமையில் ஒருவருடன் நெருங்கிப் பழகும் போதுதான் ஒருவரின் உண்மையான சொருபத்தை உணர முடியும்.  இதோ கண்ணதாசன் மீண்டும் ஒன்று கூறுகிறார் அதையும் கேட்டுவிட்டு இதைத்தொடரலாம். 

“அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.  “   

ஆகவே நாம் அறிவது என்ன வென்றால் ஒரு இனத்தின் தலைவர் என்று போற்றப் படுபவர் – ஒரு மொழியின் காவலன் என்று போற்றப் படுபவர் ஒரு எச்சில் கையால் காக்காய் விரட்டாத  புண்ணியவான் என்பதே. ஈகை முதலிய நல்ல தன்மைகளை தன் இயல்பிலேயே கொண்டிராதவர்  ஒரு மாபெரும் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்ததன் பின்னணியில் அவரது அறிவும் சூடசமும் ஆழமாக வேர்விட்டு இருந்தன என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும். 

எம்ஜியார் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டுப் பிரிந்த நேரத்தில் நேற்று! இன்று! நாளை! என்று ஒரு திரைப்படம் வந்தது அதில் , 

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் 
மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார், 

என்று சில  பாடல் வரிகள்  வாலியால் எழுதப் பட்டு வரும். (பார்த்தீர்களா இதனால்தான் நான் ரமழானில் இதை எழுதவில்லை)

அண்மையில் ஒரு விழாவில் கலைஞரின் செல்வப் புதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசியதாக கலைஞர் டி வி யில் காட்டினார்கள். அதில் அவர் பேசினார் “பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரே தலைவர் கலைஞர்தான்” என்று அவர் பேசினார். தன் வாப்பாவைப் பற்றி மகனுக்கு மற்றவர்களை விட நன்றாகத்தெரியும். ஸ்டாலின் பேசியது நூற்றுக்கு நூற்று உண்மை. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் மனைவி  மூலமும் துணைவி மூலமும் பெற்றெடுத்த மக்களைப் பற்றியும், அவரகளது கிளைவேர்களான  மக்களைப் பற்றியும் ஆழம் விழுதுகள் போல் தொங்கிக் கொண்டிருக்கும்  உறவுகளைப் பற்றி மட்டுமே எண்ணிக்  கவலைப் பட்டு காய் நகர்த்தக் கூடியவர்தான்  கலைஞர் என்பதை உளமார ஒப்புக் கொள்வோம்.  
  • தி முகவில் முதல் பிளவு சம்பத் திமுகவை விட்டு விலகிய  போது நிகழ்ந்தது 
  • அடுத்த பிளவு எம்ஜியார் நீக்கப் பட்டபோது நிகழ்ந்தது
  • அதன் பின் வைகோ அவர்கள் விலக்கப் பட்டபோது நிகழந்தது. 
இம்மூன்று பிளவுகளுக்கும் பின்னணியில் கலைஞரின் காய் நகர்த்தும் கைவண்ணமும், கட்டு கதைகளும், அனுதாபம் தேடும் அரிய முயற்சிகளும், தேவைப்பட்டால் அடிதடியில் இறங்க வைக்கும் சாதுரியமும் ஆட்சியில் இருத்தால் அரசு எந்திரத்தை தனது   குடும்ப நலத்துக்காக பிரயோகிக்கும் குணமும்  இருந்தன என்பதை மனசாட்சி உள்ளோர் மறுக்க இயலாது.


அண்ணாவின் காலத்தில் தன்னை தட்டிக்கேட்ட காரணத்தால் ஈ வெ கி சம்பத்தை வேலூர் பொதுக்குழுவில் அடித்து சட்டையை கிழித்து கட்சியை விட்டு விரட்டியவர், கட்சிக்காக காலமெல்லாம் உழைத்து தனது உழைப்பால் வந்த செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல் எம் ஜி யாரை கட்சியை விட்டு நீக்கியவர், கொலை செய்ய சதி என்ற குற்றச்சாட்டில் தனக்கு நிகராக வளர்ந்து வந்த வைகோவை கட்சியை விட்டுப் புறந்தள்ளியவர் தன்னை எதிர்த்த காரணத்தால் நாவலர் முதல் மதியழகன் வரை  கட்சியை விட்டு ஓட வைத்தவர், கலைஞரை அரசியல் சாணக்கியன் என்று எதிரிகளும் புகழ்வார்கள். அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் குறிப்பிடுகிறான் புல் தடுக்கி விழுந்த ஒரு மாமன்னன் அந்தப் புல்லை அகற்ற, கோடாரி மண்வெட்டி  வரை கொண்டு வர செய்து அந்தப் புல்லின் ஆணிவேரின் கடைசி நுனி  வரை தோண்டி சிதைத்து அழித்தானாம்.

இந்தப் புல்லைத் தோண்ட இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமா என்று கேட்டவருக்கு  மன்னன்  சொன்னான் “ஆம்! அரசியலிலும் எதிரி என்றும் எதிர்ப்பு என்றும் தலை எடுப்பவர்களை இப்படித்தான் வேரோடும் வேராடி மண்ணோடும் அழிக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் புல்லின் ஏதாவது ஒரு நுனி  கூட நாளை தலையெடுக்குமென்ற  வாய்ப்பைத் தானாகவே தரக்கூடாது. “இதை அரசியலின் ஆரம்பப் பாடத்திலே கருணாநிதி கற்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் தனக்கு சாதகமில்லாதவர்களை- ஒத்துவராதவர்களை ஒதுக்கி ஓரங்கட்டி ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிய சரித்திரங்களை பதிவெடுத்துப் பல சாக்கு மூட்டைகளில் கட்டலாம். 

அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஒரே ஒரு திமுக உறுப்பினரைத் தேர்ந்தேடுக்க ஒரு வாய்ப்பு வந்தபோது தனது மகள் கனிமொழியை அந்த இடத்துக்கு அறிவித்தார். கனிமொழியை விட நீண்டகாலம் அனுபவமும் ஆற்றலும் பெற்றிருந்த திருச்சி சிவாவைப் போன்றவர்களை ஏன் அறிவித்து இருக்கக் கூடாது பலர் ஐயம் எழுப்பினார்கள். காரணம் மிக எளிதானது. கருணாநிதிக்கு டில்லிப் பட்டினத்தில் தனக்கு நம்பிக்கையான ஆள்தேவை. அது தனது மகளாக இருப்பது இன்னும் சிறந்தது என்று எண்ணினார். அத்துடன் வரலாறு அவருக்கு கற்றுத் தந்த பாடங்கள் அடுத்தவரை அளவுக்கு மேலே நம்பாதே என்பதும்தான்.

டில்லிக்கு சென்ற சம்பத் மனம் மாறி காங்கிரசில் இணையும் அளவுக்குத் துணிந்தார். திமுக நாடாளுமன்றக் குழுவின் தலைவராக்கப் பட்ட நாஞ்சில் மனோகரன் கலைஞரை எதிர்த்து ஆள்காட்டி விரலை அழுத்தமாக நீட்டினார். க. இராசாராம் கலைஞரை எதிர்த்து குரல் கொடுத்தார். இரா செழியன் கருத்து மாறுபட்டார். வைகோவும் நீடிக்க இயலவில்லை. பேராசிரியர் அன்பழகனைத் தவிர டில்லி சென்ற அனைவரும் கலைஞருக்கு எதிரியான காட்சிகளை அரசியல் வரலாறு கண்டது. அதனால்தான் முன்பு ஒரு முரசொலி மாறனையும் பின்னர்  தயாநிதி  மாறனையும் அதைத்தொடர்ந்து மு. க. அழகிரியையும் டில்லி அனுப்பினார். அதே காரணம்தான் கனிமொழியின் தேர்வும். ஒருவேளை கனிமொழி ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினராக  இருந்து இருந்தால் அந்த இடம் இராசாத்தி அம்மையாருக்கோ தயாளு அம்மையாருக்கோதான் கிடைத்து இருக்கும். இந்தப் பதவியை  ஏற்க தயாளு அம்மையாரால் விமானப் பயணம் செய்ய இயலும் . 

தனது தனித்திறமைகளால் விஞ்ஞானரீதியாக  ஊழல் செய்வதில் மன்னர் என்று  சர்க்காரியா கமிஷனால் சுட்டிக் காட்டப் பட்டவர் மொரார்ஜி தேசாய்  தலைமையில் ஜனதாக் கட்சியே ஆட்சிக்கு வரும் என்று கணிக்கத்தெரிந்த திறமையால் அவருக்கு உறவுக்குக்  கை நீட்டி காரியம் சாதித்துக் கொண்டவர்.  இதனால் மருமகன் மாறனை மந்திரியாக்கி மகிழ்ச்சிகண்டவர் இந்திராகாந்தி பதவிக்கு வருவார் என்று அரசியல் ஆரூடம் கணிக்கத் தெரிந்த காரணத்தாலும்  அரசியல் ஆற்றலாலும் நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக! என்று கூறி    தஞ்சமடைந்தவர். இதனால் எம்ஜியார் ஆட்சியை கலைத்து பழிவாங்கும் படலத்தின் பரிசைத் தட்டிச்சென்றவர்   தன்னை வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியிடம் தஞ்சம் அடைந்தவர் அதே காரணத்துக்காக பி ஜே பி யிடமும் உறவாடி பதவிச் சுகம் கண்டவர் இன்றும் இதே காரணத்துக்காக முதலிரவோடு முடிந்து போன மன்மோகன் சிங்குடன் ஆன வாழ்க்கையை தாலி அறுக்காமல் தடுமாறும்  வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் . 

இவை போன்ற அனைத்து அரசியல் பின்னணியின்  அடிமரங்களில் ஆணிவேர் விட்டு இருப்பது கலைஞரின் சுய நலம் - குடும்ப நலம் மட்டுமே. இவ்வளவும் செய்தும் இந்திய  அரசியலில் ஞானி என்று அழைக்கப் படுகிறார். பிரணாப் முகர்ஜி சென்னை வந்தால் கருனாநிதிக்கு கோபாலபுரம் சென்று மாலை போடுகிறார்.

கண்ணதாசனை மீண்டும் அழைக்கிறேன். 

“கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.”

தனது தமிழ் அறிவாலும் ஆற்றலாலும் திறமையாலும் ‘சொல்வல்லான் சோர்விலான் இவனை இகல வெல்லல் யார்க்கும் அரிது’  என்று திருவள்ளுவர் கூறியதற்கொப்ப தனது திறமைகளை எல்லாம் அரசியலில் காசாக்கி உலகக் கோடீஸ்வரர்களின்  பட்டியலில் 216- ஆவது இடமும் இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில்  16- ஆவது இடமும் தனது குடும்பத்துக்குப் பெற்றுத்தந்தவர்  .

கடந்த ஆண்டு விகடன் குழுமத்தின் பத்திகையில் ஒரு பட்டியல் வந்தது அதை அப்படியே இங்கு தந்து இதை நிறைவு செய்ய விரும்புகிறேன். 

அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. 

இந்த சொத்து போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா? வேண்டும்! ஹைதராபாத் கிரிக்கெட் அணி அண்மையில் வாங்கப் பட்ட புது  வசந்தம். 

தமிழகம் அரசியல்வாதிகளின் கரங்களில் அகப்பட்ட பூமாலை . தமிழ் வாழ்க! இன்னும் தமிழகத்தை சூறையாடிய சூறையாடும் மண்ணின் மைந்தர்களின் செயல்பாடுகள் சூட்டோடும் சுவையோடும் தொடரும். 

அடுத்து திமுகவின் பெரும் பிளவு எம்ஜியார் கண்ட புதுக் கட்சி பற்றிய விபரங்கள் மற்றும் விமர்சனங்கள். 

இன்ஷா அல்லாஹ் சந்திப்போம். 
ஆக்கம் : முத்துப் பேட்டை P. பகுருதீன். B.Sc.,
உருவாக்கம் : இப்ராகிம் அன்சாரி

22 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அம்மாடியோவ் இன்னும் இதை முழுசா படிக்காமலே மசக்கமா வருதே.........இதை எழுதும் காக்காமாரா கொஞ்சம் நாம எச்சரிக்கையாத்தான் ஈக்கனும். வெளிய போவும் பொழுது ஒத்தியா போவாதிய....இவர்கள் தற்காலிக மோடி அலையில் கவிழ்ந்து போன கப்பல்கள் நம்பி அதில் ஏறி பயணம் செய்யலாம் கவிழ்க்காமல் விட மாட்டார்கள்....மோடிக்கு அமெரிக்கா விசா கொடுத்தால் என்ன? அள்ளி வச்சி குத்தினால் நமக்கென்ன என்று இருக்காமல் சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு "யாராச்சும் கட்சிக்கு தெரியாமல் மோடிக்கு எதிராக வாக்களித்தால் தெரியுஞ்செய்தி ஆம்மா??? என்று மிரட்டும் பொழுதே கண்ணிய மிகு காயிதே மில்லத் நிச்சயம் தன்னுடைய இறுதி நாட்களில் இவர் கையில் தான் இந்த சமுதாயத்தை ஒப்படைத்து சென்றிருப்பார் என ஊர்ஜிதப்படுத்தப்படாத‌ தகவல்களை மேற்கோள்காட்டி எமது டெல்லி செய்தியாள‌ர் "மொம்லாவுத்த‌ர்" கூறுவ‌தாக‌ சொல்ல‌ப‌ட்டு இங்கு ந‌ம‌க்கெல்லாம் அறிவித்துக்கொள்வ‌தாக‌ தெரிவித்துக்கொள்ள‌ப்ப‌டுகிற‌து.......வ‌ர‌ட்டுங்க‌ளா ப‌ள்ளியொட‌ம் உட்டாச்சு....இன்ஷா அல்லாஹ் அப்பொற‌ம் மேக்கொண்டு எழுதுவோம்.....

Shameed said...

சொத்து மதிப்பை பார்த்ததும் தலை சுத்துது

Shameed said...

தமிழ் வாழ்ந்துச்சோ இல்லையோ தமிழை வைத்து இவர்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் வாழப்போகின்றார்கள் என்பது உண்மை

Ebrahim Ansari said...

மோடியின் அமெரிக்க விசாவுக்கு கலைஞரின் ஆதரவு- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை. ஏன்?

ஒரு வேளை நாளை பிஜேபி துரதிஷ்டவசமாக வெற்றி பெற்றால்

உறவுக்கு கை கொடுப்போம் - உரிமைக்கு குரல் கொடுப்போம்

என்று முழங்கியும்

மறப்போம் மன்னிப்போம்

என்று இளித்தவாயர்களின் தலையில் மிளகாய் அரைத்தும் கை நீட்டிக் காப்பாற்றிக் கொள்ளத்தான்.

sabeer.abushahruk said...

யம்மோவ்.

இவ்வளவு சொத்துகளா?!

இருந்தாலும் ஒரு ஜான் வயிற்றின் கொள்ளளவு எல்லோருக்கும் சமம்தான் என்று யாராவது இவிங்களுக்குச் சொல்லுங்களேன்.

இழுத்துவிடும் மூச்சு நின்றுவிட்டால் இத்தனை ஏக்கரிலுமா இவரை புதைக்க முடியும்?

என்னே ஒரு பொதுநலம்!

Unknown said...

பகுருதீன் காக்கா, இபுறாஹீம் அன்சாரி காக்கா,

இந்த பட்டியலுக்கு சொந்தக்காரனுவோ , ஒவ்வருநாளும் காலையில், எதை திங்கப்போரானுவோ , இரண்டு இட்லி, இரண்டு வடை, ஒரு தோசை,,மிஞ்சி மிஞ்சி போன , கூடுதலா ஒரு ஊத்தப்பம் ,

இதற்குமேல் இவனுவொலுக்கு திங்க குடலில் இடமும் கிடையாது,
திங்கவும் முடியாது.

அரசியல் ஒரு சாக்கடை, ஒரு நீதி நேர்மையற்ற அயோக்கியத்தனம் கொண்டது என்று சொல்ல இதைவிட என்ன வேணும்.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைவரை - தலையிலிருந்து கால் வரை இப்படியொரு வரைவு ம்ம்மாடியோவ் !

ஐயா தலைவரே

உங்க இதயத்தில் எங்களுக்கு கொடுத்திருக்கும் இடத்தின் மொத்த மதிப்பு எவ்வளவுன்னு நீங்களே சொல்லிடுங்க !

ஏன்னா எங்காளுங்களும் ப்ளாட்டு போட்டு ஜரூரா வியாபரம் செய்யுறாங்க ஐயா !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//டெல்லி செய்தியாள‌ர் "மொம்லாவுத்த‌ர்" கூறுவ‌தாக‌ சொல்ல‌ப‌ட்டு இங்கு ந‌ம‌க்கெல்லாம் அறிவித்துக்கொள்வ‌தாக‌ தெரிவித்துக்கொள்ள‌ப்ப‌டுகிற‌து.......வ‌ர‌ட்டுங்க‌ளா ப‌ள்ளியொட‌ம் உட்டாச்சு....இன்ஷா அல்லாஹ் அப்பொற‌ம் மேக்கொண்டு எழுதுவோம்.....//

MSM(n) : ஏதேனும் ஃப்ளாஸ் நியூஸ் அலல்து ப்ளஸ் நியூஸ் இல்லையா ?

மோடி குருப் இன்னொன்று செய்திருக்கே... அமிதாப்பச்சன் அந்த பேடிக்கு ஆதரவாக பேசுவது போன்று ஒரு யூடூப் பரவ விட்டிருக்கானுங்க அதனை அமிதாப்பச்சனே மறுத்து டிவிட்டடிச்சிருக்காருன்னா !!

தலைவர் தன் மக்களுக்கு உழைத்து ஒவ்வொரு அப்பான், தாத்தா, கொல்லு தாதாவுக்கெல்லாம் முன் மாதிரியாக இருக்கிறார் !

முதல்ல குடும்பம், தெரு, ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம் அப்ப்ப்ப்ப்ப்புறமா நாடு... இப்படித்தானே படிப்படியா முன்னேறனும்... இன்னும் நம்ம தலைவரு குடும்பத்தோடுதானே இருக்காரு !

பொழைப்பத்தவங்கதான் முதல்ல நாடு, அப்புறமா, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர், தெரு அப்ப்ப்ப்புறமா வீடுன்னு இருப்பாங்க ! அதனாலதான் நாட்டுக்கா உழைத்தவங்களெல்லாம் ஊட்டுல வாங்கி கட்டிக்கிறாங்க !

சீக்கிரம் மொம்லாவுத்தர வர சொல்லவும்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

(இ.அ.)காக்கா, தலைவரின் தலையில நிறைய இருக்குன்னு எ.க.காரங்க (பொறாமையில) சொன்னப்பக் கூட நம்பல ஆனா நம்ம பகுருத்தீன் காக்கா சொன்னதும் நம்புறேன் !

adiraimansoor said...

நாம் ஓட்டு பெட்டியில் போடும் ஒவ்வொரு
ஓட்டும் நம் கண்களுக்கு வெரும்
ஓட்டாகத்தான் தெரிந்தது.
ஆனால் கலைஞனுக்கோ நாம் போடும் ஓவ்வொரு ஓட்டும் காசகத்தான் தெரிதிருக்கு. அதான் சாக்கடையில் காசு இருப்பதை அறிந்த கலைஞன். கல்லாதவர்களை காய வைத்து காய் நகர்த்தி ஓட்டு வங்கியை தக்கவைத்து
வட சென்னையில் இவ்வளவு வசூல், தென் சென்னையில் இவ்வளவு வசூல் என்று காலம் முழுதும் மகசூலானதை காசை வங்கியாக்கி அதை உலக வங்கியிடம் பேரம் பேசும் பேரன்மார்களோடு கும்மியடிக்கும் கூட்டத்தோடு நாமும் கும்மியடிக்க நமக்கு கிடைக்கபோவது என்னவோ திருவோடுதான்
அப்புரம் என்ன
கையில்லை காலில்லை ஆண்டவரேதான்.
எதுக்கும் இப்பவே ஆளுக்கு ஒரு திருஓட்டை புக் பன்னி வைத்துக்கொள்வோம். கடைசியிலே அதுவும் கிடைக்காம போயிடபோவுது.

Ebrahim Ansari said...

அடுத்து வந்தவர்களின் பட்டியலும் ஒன்றும் பாதகமில்லாமல் நிரப்பமாகவே இருக்கிறதாம். நண்பர் பகுருதீன் சொல்கிறார்.

காத்திருப்போம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்தாளுக்கு இவ்வளவு சொத்தா? இன்னும் சேர்க்கிறாரா?
அதனாலே தான் நானும் தமிழ் வாழ்க! என அப்பப்ப குரல் கொடுக்கிறேன். யாரும் சப்போட் பண்ண மாட்டங்கிரியலே!

Anonymous said...

போட்டு காட்டுன கணக்கை பாத்தா தி.மு.க [திருவாரூர் மு.கருணாநிதி] தான் முன்னேறி விட்டாரே! பிறகு ஏன் கட்சி? கலைச்சிட்டு ஊருக்கு போக வேண்டியது தானே!

அங்கே போனா எந்த வம்பு தும்பும் இல்லாமே ஜாலியா ஊர் சுத்தலா முல!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

வழக்கமாக நோன்புக் கஞ்சிக் குடித்த பின்னர் “என்றும் என் நெஞ்சில் இடமுண்டு” என்பவர் இந்த முறை கொஞ்சம் மாற்றி. “ காதர்மெய்தீன் அவர்கள் தன்க்குப் பேச குறைவான நேரத்தை எடுத்துக் கொண்டு, எனக்குப் பேச நிறைய நேரம் ஒதுக்கி விட்டார்கள்; இதைப் போலவே, எல்லாவற்றிலும் குறைவாகவே ஒதுக்கிக் கொள்வார் என்று நம்புகிறேன்” என்று பேசியிருப்பதை அறிந்துமா இன்னும் “கூட்டணியில் நமக்கு நிறைய இடங்கள் கிடைக்கும்” என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் இ.யூ.முஸ்லீம் லீக் கட்சியினர்?

இப்படிப்பட்ட வேடதாரிகளை நம்பாமல், “தனித்து நிற்போம்” என்ற முடிவுடன், எல்லா இயக்கங்கள்/முஸ்லிம் லெட்டெர் பேடுகள்\கட்சிகள் எல்லாம் சேர்ந்த ஒரு “கூட்டணி” நின்றால் ஒரு முஸ்லிம் நி|ற்கும் தொகுதியில் மற்ற முஸ்லிம் வேட்பாளரைப் போட்டியாக்காமல் விலகிக் கொண்டு ஒருவர்க்கு மட்டும் ஆதரவு என்ற நிலையில், “ஒன்றுபடுவோம்; நன்று பெறுவோம்” என்ற நிய்யத்துடன் துணிந்து நிற்போம். என்றைக்கும், நம் கண்முன்னால் அல்லாஹ்வின் வேத வாக்குறுதியின் நம்பிக்கையில் வெற்றி உண்டு என்பதற்கு “குறைவான சஹாபாக்களின் தியாகத்தால் பெரும்பான்மையன எதிரிக் கூட்டத்தை வென்ற பத்ரு களம்” நினைவில் நிற்க வேண்டும்!

“ஈகோ:
யூகோ
என்று விரட்டுங்கள்
என்றும் வெற்றி!

Anonymous said...

உடன்பிறப்பே! அண்ணாவும் நானும் நெடுஞ்செழியன் முதல் நாஞ்சில் மனோகரன் வரை ''திராவிட நாடு திராவிடருக்கே''! என்று ஒரே குரலில் கோஷமிட்டு கேட்டதை நீ அறிவாய்! நாடறியும்.

ஆரிய சூழ்சியாலும் வடபுல எகாதிபத்திய சூழ்ச்சியாலும் திராவிட நாடு மொழி வழி மாநிலமாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமே நமக்கு கிடைத்ததை நீ அறிவாய் நாடறியும்.

திரவிட நாடு கேட்ட அண்ணா முதல் எல்லோரும் போய் சேர்ந்து விட்டதாலும் எனக்கும் வயதாகிவிட்டதாலும் கிடைத்த தமிழ்நாட்டில் என் உழைப்புக்கான பங்கை நானே எடுத்க் கொண்டு முறைப்படி கணக்கை காட்டிவிட்டேன்!..

இந்த பங்கு கணக்கை ''நெஞ்சுக்கு நீதி''யாக பிரித்து எடுத்துக் கொண்டேன் என்பதை உடன் பிறப்பாகிய நீ அறிவாய்! நாடறியும்.

எனக்கு பின் நாடு மீண்டும் ஆரிய சூழ்ச்சியிலும் வடபுலத்தார் சூழ்சியிளும் சிக்காமல் இருக்க தகுந்த தளபதியாம் என் மூத்தவனுக்கு (!!???) விரைவில் முடிசூட்டு விழா நடக்கும். இதையே அழைப்பாக ஏற்றுவா! தம்பி தம்பி வா!

S.முகம்மதும்பாரூக்,(கோபாலபுரம்@C.I.D.காலனி-யிலிருந்து) அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

S.M.F. காக்கா: அதென்ன "தளபதியாம் எனது மூத்த மகன்" அப்படின்ன எங்க தளபதிக்கு வாய்ப்பு இல்லையா ?

இல்லேன்னா இன்னும் அந்தக் குழப்பம் தீரவில்லையா ?

ZAKIR HUSSAIN said...

இந்த சொத்து கணக்கை படித்த பிறகு யாரும் எலுமிச்சம்பழம் போட்டு ஒரு சர்பத் கேட்கவில்லை என்றால் எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு மயக்கம் வராது.

இது அண்ணாவின் மீது ஆணை

KALAM SHAICK ABDUL KADER said...

ஆம். அன்புச் சகோ. ஜாஹிர், உண்மையில் என்னுள்ளத்திலும் அப்படியொருப் பின்னூட்டமிட நினைத்தேன் இவ்வாறு:

”அப்பபா, கண்ணைக் கட்டுதே; மயக்கமா வருதே” என்று, ஜூம் ஆ நேரமாகி விட்டதால் வந்து எழுதலாம் என்றிருந்தேன்; அப்படியே நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள்!

KALAM SHAICK ABDUL KADER said...

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் இருக்கும் வரைக்கும் சமுதாயத்தை ஓட்டுக்காகப் பிரிக்காமலிருந்தார்கள்; ஆயினும், கள்ளுக்கடை திற்ந்த கருணாநிதியின் ஆட்சியில் முஸ்லிம் லீக் உறவில் ஒரு “லீக்” ஏற்பட்டதும் அதனால் கூட்டணி முறியும் என்ற எச்சரிக்கையும் அவர்கள் விட்டிருந்தார்கள்(அப்பொழுது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் செக்கடிப் பள்ளிக்கு அருகில் நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் பேசிய உரை இன்றும் ஏன் நினைவில் நிழலாடுகின்றது) அண்ணன் எப்ப போவார் என்று காத்திருந்த கருணாநிதியின் சூழ்ச்சிக்குப் பலியான நம் இரு சகோதரர்கள் அப்துஸ்ஸ்மத் & அப்துல்லத்தீப் இவர்களை வைத்துப் பிரிவினையை ஊக்கப்படுத்தி தாய்ச்சபையை உடைத்தார்கள்; பின்னர் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட ஓர் இயக்கம் வேண்டும் என்ற பேரவாவுடன் நாமெல்ல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் அல்லாஹ்வும் அருள் காட்டினான்; “த.மு.மு.க “ உருவானது; தஞ்சைப் பேரணியில் தமிழக நெஞ்சே குலுங்கியது! விடுவார்களா குள்ள நரிக் கூட்டம்; ஒற்றுமையை குலைத்து நம்மை அரசியல் அனாதைகளாக்குவதே அவர்களின் நாட்ட்ம! ஆளுக் கொரு பக்கமாக கூட்டணிக்கு என்று கூறு போட்டார்கள்; அன்று ஒன்றாக இருந்த இயக்கம், இன்று பலவேறு கூறுகளாய்க் கூறி கொண்டும் நாறி கொண்டும் போய் இறுதியில் சமுதாயம் யார் பக்கம் நிற்பது என்றே தெரியாமல் இன்னும் மோசமான நிலையில் சுயநலவாதிகளின் “ஈகோ” வால் சின்னாப்பின்னாப்ட்டு நிற்கின்றது. எப்பொழுதும் போல் “எடுப்பார்க் கைப்பிள்ளை” “கறிவேப்பிலை” என்ற குமுறுகின்றோமே தவிர ஒன்றுபட முயற்சிக்கவில்லை!

அதே இஃப்தாரில் நெஞ்சுக்குள் கஞ்சி இறங்கியதும் நெஞ்சுக்கு நீதி வாசிக்கின்றார்: இவ்வாறு:

“ நீங்கள் எல்லாம் ஒன்றாய் இருந்தீர்கள்; இப்பொழுது எனக்கே விருப்பமில்லாத இரண்டாக, மூன்றாக, நான்காகப் பிரிந்துபட்டுக் கிடக்கின்றீர்களே!”

இஃது என்ன ஆடு நனைகின்றது என்று.......பழமொழியை நினைவுபடுத்தினாலும்,
இயக்கங்களின் மயக்கத்தில் இன்னும் இன்னும் நாளொன்றுக்கு ரிலீஸாகும் புதுப்படம் போல ரிலீஸ் ஆக்கிக் கொண்டு சமுதாய வாக்கு வங்கியைப் பிரித்துக் கொடுக்கும் சமுதாயத் தலைகட்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லை என்று குத்திக் காட்டிப் புத்திச் சொல்கின்றாரா?

எனினும், இப்படி மேடை போட்டு நம் கஞ்சியைக் குடித்துக் கொண்டே நம் நெஞ்சில் குத்தியும் புத்தியில்லாத் தலைகட்கு அல்லாஹ் சுய புத்தியைத் தருவானாக(ஆமீன்)

இறைமறுப்பாளர்களுடன் தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி கூட்டணிக் கண்டவர்கட்கு, ஒரே மார்க்கத்தில் சிற்சில கருத்து வேறுபாடுகளால் மட்டும் வேறுபட்டிருக்கும் முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றாக ஒரு “கூட்டணி” வைக்க மனம் இல்லையா?

அல்லாஹ்விடம் சத்தியம் வாங்கி வந்த “ஷைத்தானின்” சூழ்ச்சியால் “ஈகோ” என்னும் தவிர்க்க முடியாத ஓர் உத்தி; அதனால் மாறிவிட்டது முஸ்லிம் தலைவர்களின் புத்தி!

அன்று பிரிட்டனின் ஆட்சி ஏற்படுத்திய “பிரித்தாளும் சூழ்ச்சி” இன்றும் தொடர்கின்றன: அதனாற்றான்:

இந்தியாவில் ஒன்றுபட்ட முஸ்லிம் கட்சி இல்லை
ஈராக்கில் குழுக்களிடையேயும், சுன்னி, ஷியா பிரிவினாலும் அமெரிக்க ஊடுருவி வெற்றி கண்டனர்
சிரியாவிலும் இதே உள்நாட்டு மற்றும் சுன்னி, ஷியாய் பிரிவுகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.
எகிப்திலும், ஃபிர் அவ்ன் “ போன்ற உலகாசைப்பிடித்த முஸ்லிம்களையும், இக்வான்கள் போன்ற இறையச்சம் மிக்கவர்களையும் மோத விட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர் அமெரிக்காவும்- இஸ்ரேலும்!

பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்
பிள்ளைகள் கொல்லப்படுகின்றனர்

”போர் இலக்கணம்” எல்லாம் மறுத்து மிருகத்தனமான வேட்டைகளை ஐநா என்னும் பொய்நாவும் வேடிக்கைப் பார்க்கின்றது,

இப்பொழுது, தமிழகத்தில், நம்மிடையே பழகிக் கொண்டே நரபலி மோ(ச)டிக்கு வக்காலத்து வாங்கும் மஹா நடிகர்- கலைஞரையும் மடியில் கட்டிக் கொள்கின்றோம்.

ஆக, விழித்துக் கொள்ளுங்கள் தலைவர்களே!

ஏங்குகின்றோம் நல்ல தூய ஒன்று பட்ட தலைமைக்கு!

Anonymous said...

//இல்லேனா இன்னும் அந்த குழப்பம் தீரலியா?//

அதென்னஇப்புடிகேட்டுடிய?

குழப்பம் இல்லேனா கழகம் வச்சு நடத்த முடியுமா கழகம்? சொல்லுறேன் எண்ணிக் குங்கோ!. திக-திமுக-அதிமுக-மதிமுக-தே-.மு.தி.க மற்றும் முடிசூட்டு விழாவுக்கு பின் அழ.திமுக. ஒன்றும் வரும் என்று கிளி ஜோசியன் சொன்னான்!

நான் சொல்ல வந்ததை உட்டுட்டேனே! மக்களை போட்டு கொழப்போ கொழப்புண்டு கொழப்புனாத்தான் தலைவரும் கட்சியும் நின்னு புடிக்க முடியும். இது சாணக்கியன் சொன்னதுங்க! மக்கதெளி வடஞ்சுட்டாண்டா தலைவெங்கெல்லாம் ஊறேபார்க்க ஓட வேண்டியதுதான்..

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

//அம்மாடியோவ்! இன்னும் முழுசா படிக்கலே! மசக்கமாவருதே!//

தம்பி மு.செ.மு.நெய்னா முஹம்மது!

"என்னங்க நீங்க இதைபடிச்சுட்டு மசக்கமா வருது ன்னுசொல்றிங்க!"

இங்கே அதே படிச்ச மூனு மாச மசக்கைகாரி முழுசா ஒரு புள்ளேயே பெத்துட்டாளே!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

//யாராவது பிச்சைகார்கள் காசு கேட்டால்// கண்ணதாசன் சொன்னது உண்மை!
இது கருணாநிதியின் பிறவிக் குணம். ஒருசொந்த உணர்வின் வெளிப்பாடு பறிமாறுகிறேன்.

நான் ஆரம்ப பள்ளியில் படித்தபோது ''புதையல்' படம் சூட்டிங் நடக்கிறது கருணாநிதி கோபுரத்துக்கு வருகிறார்''' என்ற செய்தி காதுக்கு எட்டியது.
நானும் மற்ற மூன்று நண்பர்களும் சேர்ந்து இரண்டு வாடகை சைக்கிள் எடுத்து மாத்தி மாத்தி சைக்கிள் மிதித்து போனோம். கருணாநிதி, N.S.இளங்கோ, டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு, தயாரிப்பாளர் கமால்
ஆகியவர்கள் படகில் வந்தார்கள்..

எங்களை பார்த்த இளங்கோ ''உங்களை பார்க்கத்தான் பையன்கள் சைக்கிளில் வந்திருக்கானுவோ'' என்று கருணாநிதியிடம் சொன்னார்.

கருணாநிதி அதைக் கண்டுக்கவே இல்லே!

[அப்போ ''உடன்பிறப்பே!'' என்ற வார்த்தையே தமிழிலில் இல்லை!?]

பிறகு நிறைய இளநீர் வெட்டி வந்தது. அவர்கள் எல்லாம் வெட்டி-வெட்டி
குடித்தார்கள். எங்களுக்கோ வெயிலில் வந்த தாகம். ''இளநிர் குடிங்க'டா'
என்று' ஒரு வார்த்தை சொல்லுவார்' என்று எதிர்பார்த்தோம்! வார்த்தை வள்ளளின் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை'

இளநீர் குடித்து விட்டு கோபுரம் எறப் போபோகும் போது இளநிர் வெட்டி கொடுத்தவனை பார்த்து இளங்கோ சொன்னார்'' பையன்களுக்கு இளநிர் வெட்டிக் கொடு ! பாவம் வெயிலில் வந்து இருக்கானுவோ!'' என்றார்'.

இளநிர் வெட்டியோ ''குடி!குடி!' என்று' அன்புடன் வெட்டி-வெட்டி கொடுத்தார்.. ஒரு வெட்டியின் இரக்க நெஞ்சு மக்கள் தலைவரிடம் இல்லை.

அன்றைக்கே என் இளநெஞ்சில் பதிந்தது ''கருணாநிதி ஒரு' ' கல் நெஞ்சு' கொண்ட ஆள்' என்று. [இவர்தான் 'நெஞ்சுக்குநீதி' எழுதினார்'] கருணாநிதியின் குணம் காட்டும் சங்ககால பட்டும் ஒன்று உண்டு [எழுதியவர் அவ்வையாராய் இருக்கலாம்]

பாடல் இதோ :-
''நூலளவே யாகுமாம் நுண் அறிவு;
நீரளவே யாகுமாம் நீராம்பல்;
தவத்தளவே யாகுமாம் தான்பெற்றசெல்வம்;
குலத்தளவே யாகுமாம் குணம்'.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு