Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கஞ்சி வருதப்பா... - பகுதி : 2 of 2 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2013 | , , , , ,

"சஹ்ருக்கு சோத்தை உண்டுட்டு நிய்யத்து சொலலு"ன்னு 'ஆலி'முசா சொன்னாரு! அரகிடா என்னடான்டா 'நிய்யத்தை சொல்லிட்டு கஞ்சியே குடி"ங்ககிறார். இந்த ரெண்டு பேரும் சேர்ந்து நோம்பாளிகளைப் போட்டு ஒரே கொழப்பு கொளப்புறாங்களே!

"அடே! அரகெடா சாபு ! இந்த ஒரு 'மண்' சட்டி கஞ்சிக்கா என்னை 'தீ'மிதிக்க சொல்றீய?''

"கஞ்சி காய்ச்ச உங்க அப்பனா காசு கொடுத்தார்?. ஊரார் ஊட்டு காசிலே கஞ்சி காய்ச்சிட்டு 'தாசில் பண்றியலா?"

நீங்க அரக்கிடா வைத் தான் திண்டீங்க! நான் யார் தெரியுமா? ஒன்னையும் ஒரு கிடை ஆட்டையும் ஆடு ஓட்டுற இடயனையும் சேர்த்து ஒரே முழுங்கா முழுங்கிட்டு மலைப் பாம்பு போல  சும்மாகிடப்பேன் சாபு! 

நான் ஒரு தடவைச் சொன்னா அது ஒரு தடவை சொன்னதுதான்! சும்மா, சும்மா சொல்லிச் சொல்லி கழுத்தை அறுக்க மாட்டேன்! பெருநாள் பொறை பொறக்கட்டும் வக்கிறேன் ஒங்கலுத்துலே கத்தி''

இருந்தாலும் அரக்கடா சாபுவின் கேள்வி நாங்கள் எதிர்பார்த்தது தான். முன்கூட்டியே மனப்பாடம் செய்த நிய்யத்தை அள்ளிவிட்டேன்.

அரக்கிடாவா கொக்கா "பொய் சொல்றேடா!" என்றார். 

எனக்கு பக்கத்தில் இருந்தவன் “நெசந்தான் சாபு  அவன் நோன்புதான்’’ என்று சாட்சி சொன்னான்’. வேலிக்கு ஓணான் சாட்சி-ஓணானுக்கு வேலி சாட்சி’

‘’நான்  நம்பல! சரி  கஞ்சி தர்ரேன்  பாங்கு சொல்லித்தான் குடிக்கனும். அதுக்கு முன்னே  குடிச்சிட்டு ஓடினே நாளைக்கு  கஞ்சி தர மாட்டேன்’’ என்று எந்த எழுத்து கிறுக்கு ஏதுமில்லாமல் எங்களுக்கும், அரகிடாவுக்கும் இடையே உண்டான ’ஜென்டில் மேன்’ உடன்பாட்டின் படி சட்டி வந்தது. 

சட்டி சூடாத்தான் இருந்துச்சு! ‘சட்டி  சுட்டதடா  கை  விட்டதடா’  என்று நான் சட்டியை கை  விடவில்லை என்னை நம்பி  என்னோடு வந்த பின் அதை கை விட்டால் நான் ஒரு மனுசனா ? 

நாலு  பேர்  பார்த்தா என்ன நினைப்பார்கள்?  எந்த முகத்தோடு ஊரில் நடமாட முடியும் என்று நாலையும்  நன்றாக யோசனை  செய்து ‘ சுட்ட சட்டியை’ அப்படியே என் அரவணைப்பில் வைத்துக் கொண்டேன்.  ஒரு கண்டம் நீங்கியது. கஞ்சியை எல்லோருக்கும் கொடுத்து முடித்து விட்டு தர்ஹா  தூண் ஓரம்  நின்று அரக்கிடா   எங்களையே  உளவு பார்த்தார். ‘யாரோ  கொடுத்த காசுலே கஞ்சியை காச்சி எங்களை இந்த பாடு படுத்துறியே!’ என்று மனதுக்குள் அவரை திட்டினோம். சத்தம் போட்டு திட்டி அரக்கெடா காதில் பட்டால் கஞ்சி சட்டிக்கு ஆப்புத்தான்.

அடுத்து  கடிகாரத்தை பார்த்தோம்.  பெரிய முள்  கொடுத்த சாவிக்கு ஆக்டிவா தனது கடமையை உணர்ந்து செய்தது. சின்ன முள்ளோ  ரொம்ப சோம்பேறி. பக்கத்தில்  இருந்த ஒருவர் கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஆள். பினாங்குக்கு வாப்பா மாமா மச்சானுக்கு எழுதும் கடித்ததில் இங்கிலீஸ்லே அட்ரஷ் எழுதும் அளவுக்கு அவரிடம் சங்கதி உண்டு.

இதில் இங்கிலீஷ்  தெரிந்த வேற ஆளுகளும் இருந்தார்கள். அவர்கள் TO எழுதும் இடத்தில் அனுப்புபவரின் பெயரை போட்டு FROM எழுதும் இடத்தில் கடிதம் பெறுபவரின் பெயரை  போட்டும் அட்ரசை எழுதி கொடுத்த கடிதமெல்லாம் நாளே நாளில் வீடு வந்தது. கடிதத்தை பெற்ற தாயோ “நான் போட்ட கடித்ததை தந்தி-போல் பாவிச்சு பதில் போட்டுட்டானே!” என்று தபாலை ஆவலுடன் ஒடச்சு படிச்சு பார்த்தா ‘என்  கண்ணான  வாப்பா  காதர்  மஸ்தானுக்கு உம்மா மம்நாச்சியா எழுதும் கடிதம். யாதெனில்  இப்பவும்  நானும்  வாப்பாவும்  ராத்தாவும் தங்கச்சியும் நல்ல சுகம்.  நீ கடுதாசி  போட்டு  மூனு  மாசம் ஆச்சு! ஒரு சேதியும் தெரியலே’ தாய் மகனுக்கு  போட்ட கடிதம் தாய்க்கே திரும்ப வந்துடுச்சு. காணாமல் போன பசுமாடு ஏழு நாளைக்கு பின் கன்றை தேடி  ‘ம்மா’ ‘ம்மா’ என்று கத்திக் கொண்டு  வருவது போல!  

இந்த இடத்தில்  எனக்கு  ஒரு டவுட். நாமெல்லாம் உம்மா உடைய காக்காவையோ தம்பியையோ "மாமா"ன்னு பிரியமா கூப்பிடுறோம். கன்றுக் குட்டியும் பதிலுக்கு ‘மருமகனே மருமகனே’ன்னு கூப்பிடாமா தன் தாயை ‘மா மா மா மா’ன்னு கூப்பிடுதே! இதுலே கன்றுக் குட்டிக்கு தன்னை பெற்ற பசு மாமாவா? அல்லது  மாட்டுக்கு கன்றுக் குட்டி ‘மாமா’வான்னு தெரியாம ரொம்ப குழப்பமா இருக்கு! இதில் யார் யாருக்கு மாமா?ன்னு தெரியலே! தெரிஞ்சவுக சொல்லலாம்.

இன்னொரு  குழப்பம்!  ஆட்டுக் குட்டியும் ‘மே! மே!’ன்னு  கத்துது. சந்தேகம் வந்து காலண்டரை பார்த்தா அது அக்டோபர் மாதம் 11 தேதி போட்டு இருந்தது. விஷயம் தெரிஞ்ச ஒருவரிடம் கேட்டேன். ‘’ஆட்டுக் குட்டி ஏன் ‘ மே மே’ன்னு கத்துது?’ ‘’அதுவா! அது தொழிளார் தலைவர் வீட்டு ஆட்டுக் குட்டி! தொழிலாளர்களுக்கு ‘மே’ என்றால் ரொம்ப பிடிக்கும். எஜமான் மேலே உள்ள விசுவாசத்தை காட்ட அந்த ஆடு ’மே! மே!’ன்னு  கத்துது’’ என்றார். நல்ல ”லாஜிக்”தான்.  

இப்போ நான் மேலே விட்ட விசயத்துக்கு வருவோம். நல்லா விஷயம் வெளங்குன ஆளுபோல இருந்ததால்  மேலும் ஒரு கேள்வியை கேட்டேன் "பெரிய  முள் ஏன் வேகமா ஓடுது? சின்ன முள் ஏன்  மெதுவா ஓடுது?"ன்னு கேட்டேன். 

என்னை ஒரு மாதிரியா பார்த்த அந்த ஆசாமி சொன்னார் “பெரிய முள் 12 ல் இருந்து ஒரு சுத்து சுத்தி  திரும்பவும் 12க்கு  வந்ததும் தான்  சின்ன  முள்  மணி 3ல் இருந்து  4 மணிக்கு  வரும். 60 நிமிஷம் ஆனபிறகு தான் சின்ன முள்  3ல் இருந்து  நாளுக்கு வரும்’’ என்றார். 

“அறுபது நிமிஷம் ஆகிறதுக்கு முன்னாடி  30 நிமிசத்துலேயே சின்ன முள்  3லிருந்து 4க்கு வந்தால் பெரிய முள் சின்ன முள்ளை அடிக்குமா?’’  என்று கேட்டேன். 

‘’நீ  யாருடா?  யாரு வுட்டு பயடா?  உங்க வாப்பா பேரு என்னடா?’’ என்று என்னோடு  சண்டைக்கு  வந்துட்டார்! 

”என்னாடா? நீ என்னை வெடைக்குறியா? ஒரே குத்திலே மூஞ்சியை  ஓடச்சி புடுவேன்’’  என்று என்னை அடிக்க கிளம்பிட்டார். 

அங்கே இருந்தவங்க எல்லோரும்’’ என்ன? என்ன?  என்று  கூடிட்டாங்க. பக்கத்தில் இருந்த என் நண்பன் சொன்னான் ‘’அவன் தெரியாம கேட்டுட்டான். காக்காவுக்கு கோபம் வந்துருச்சு!  என்றான்.

அங்கே கூடியவர்களில் ஒருவர் எனக்கு வக்காலத்து வாங்கினார்.

’’இவன்  நல்ல  புள்ளைடா!  வம்பு தும்பு கெல்லாம்  போக மாட்டன்டா!” என்று சொல்லி  சமாதனம்  சொன்னவர் என்  வாப்பா பெயரை சொல்லி  அவர்  மகன் என்று  என்னை அடிக்க  வந்தவரிடம் சொன்னார்.  

“அட! இவன்  காக்கா  மகனா?  எனக்கு  தெரியாதே! மொதல்லேயே வாப்பா பெயரை சொல்லி  இருக்கப்படாதா?  சரி!  சரி! போ” என்று சொல்லி  சமாதானம்  ஆகிவிட்டார். 

பாங்கு சொல்லும் சாபு ‘ஆசு வாசமா’ ஒளு செய்துட்டு அப்படியே உட்கந்துட்டார். சட்டியிலே ஊத்துன கஞ்சி ஆறுதுலே! ஆறுன கஞ்சி பழங்கஞ்சி’ங்கிற பழமொழி  தெரியாத ஆளுகளை எல்லாம் பாங்கு சொல்லப் போட்டால் இப்படித்தான்’ கொஞ்ச நேரம் ஆனதும் நகராசத்தம் ‘டும் டும் என்று கேட்டது பாங்கொலியும் பின்னர் கேட்டது.

கஞ்சி’ சட்டியெல்லாம் காலியாக கேட்ப்பாரற்று கிடந்தது. அந்த கால கட்டத்தில் நோன்பு முப்பது நாட்களும் நோன்பு கஞ்சி காய்ச்சுவது  குறைவு. ஒரு சில வசதி படைத்தவர்கள் மட்டுமே கஞ்சி காய்ச்சுவார்கள். பினாங்கில் இருந்து யாரும் வந்தால் அவர்களின் உபயம் கஞ்சி அடுப்பு புகையும்.

கஞ்சி  இல்லாத கஞ்சிகாய்ச்சாத நாட்களில் வழக்கமாக தொழுபவர்கள்  மட்டுமே வந்து போவார்கள். மற்ற நேரங்களில் தெருவே 144 போட்டது போல் இருக்கும். நோன்பு காலங்களில் ஊமையன் ‘டி’கடை வியாபாரம் back- door வழியாக பகல்  நாலு மணி வரைக்கும் நடக்கும். நாலுக்கு மேல் front-door  வியாபாரம் ’வாடா- பட்ஜி-வடை- நோன்புக் கஞ்சி etc.etc., முதலியவை நடக்கும். Public கஞ்சி இல்லாத நாட்களில் வழக்கமாக தொழ வருபவர்களுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பணக்காரர் கேத்தலில் கஞ்சி கொண்டு வருவார். இது வேறுயாருக்கும் கிடைக்காது இந்த கஞ்சி A/c Prayer Only.

காலங்கள்  மாறின மண் வீடுகள் எல்லாம் செங்கல் வீடுகளானது. தென்னைங் கீற்று கூறைகள் ஓட்டு வீடுகள் ஆனது. கீத்து வேலிகள் எல்லாம்  காம்பவுண்ட் சுவர்கள் ஆனது கடிகாரம் இல்லாத வீடுகளில் வால்- கிளாக் அலாரம், ட்ரான்ஸ் சிஸ்டர்’ டிவி’ இப்போ computer வந்தது விட்டது. பண புழக்கம் முக்காடு போடாமல் திரிகிறது . கொழும்பு பினாங்கு சிங்கபூர் என்று சூரியன் உதிக்கும் கிழக்கை நம்பி இருந்த அதிராம்பட்டினம் போன்ற ஊர்கள் மேற்கே ‘கிப்லா’வை பார்த்ததும் சூரியன் அஸ்தமிக்கும் மேலை வானத்தில் புதிய சூரியன் தோன்றினான்.

தமிழகத்தின் முஸ்லிம் மக்களின்  வீடுகளில் மின்சார விளக்குகள் டியுப் லைட்கள் ஒளிவீசியது. ரேடியோ டிவி ஒலி-ஒளி பாரப்பின. ஆடிக்கு ஒரு தடவை – அமாவாசைக்கு ஒரு தடவை - எப்போதாவது ஒரு  அம்பாசடர் கார் அதிரைக்கு வரும். அதை துரத்திக் கொண்டு ஓடியவர்களில் நானும் ஒருவன். காரை தொடவிடாமல் AK-47 கையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை கண்ணால்  கூட  பார்க்க விடாமல் டிரைவர்  எங்களை விரட்டுவார். ஒரு அம்பாசடர்  கார் வைத்திருப்பது தங்களின் ஏகபோக  உரிமை என்றும் தோப்பு வயல் வைத்து  நிர்வாகம் செய்வதை  தங்களுக்கே அல்லாஹ் Monopoly ஆக்கிவிட்டான்’  என்று எண்ணியவர் களுக்கெல்லாம்  காலம்  என்ற பேராசிரியர்  நல்ல நல்ல பாடங்களை  போதித்து விட்டார். அடுப்பு புகையாமல் கிடந்த குச்சி வீடுகள் எல்லாம் புகை போக்கி குழாய் வைத்து மாடி வீடுகள் கட்டி விட்டார்கள். வீடுகட்ட Blue-print போடும் போதே Car-shedக்கு இடம் போட்டு வீடுகள் கட்டப்படுகிறது. ’’ எங்கள்  வீட்டில் ‘வெல்லாட்டி’ வேலை பார்த்தவர்களுக்கு எங்கள் வீட்டை விற்க மாட்டோம்’’ என்று சொன்னவர்கள் விழி பிதுங்கி  நிற்கிறார்கள்.  

‘’சூரியன்  அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை  ஆள்பவர்கள் நாங்கள்’ என்று மார்தட்டி நின்ற  ‘சாம்ராஜ்யத்தின் ராஜ குடும்பங்களில் ‘\கலப்பு திருமண வாடை’ வீசுகிறது. குலப்பெருமை பேசியவர்கள் குணிந்து நடக்கிறார்கள்.

கஞ்சி வந்து விட்டது. ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ ஆகிவிடும் ஆதலால் ஆறும் முன்னே சூட்டோடு  குடிப்போம்.   ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் குடிப்போம்! "ஒற்றுமை என்னும் கையிற்றை  பற்றி பிடுத்துக் கொள்ளுங்கள்’’. ஒற்றுமை இன்றில் நம் அனைவருக்கும் தாழ்வே! 

மீண்டும் சந்திக்க  எல்லாம்  வல்ல  அல்லாஹ்  அருள் புரிவானாக! ஆமீன்.

அதிரைநிருபர் வாசகர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களுக்கும் என் மனங்கனிந்த ஈதுல்பிதர் வாழ்த்துகள்.

S.முஹம்மது பாரூக்
அதிராம்பட்டினம்

13 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

I wish you all a very happy and prosperous Eid Mubarak !!!

May Allah accept our fasting and good deeds in the holy month of Ramadan and shower His extended mercy on all of us.

MaAsssalamah
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.


Unknown said...

ஜனாப் பாரூக் காக்கா,

நாளை தான் Saudi அரேபியாவில் பெருநாள் எங்களுக்கு. ஆனால் உங்கள் இந்த பதிவை கண்ணில் பதியவைத்ததில் இன்றே பெருநாள் கொண்டாடியது போன்று ஒரு சந்தோசம்.

என்ன ஒரு அருமையான நகைச்சுவை கலந்த நினைவலைகள். படிக்க படிக்கை நோன்பு திறக்க குடித்த காஞ்சி சிரிப்பின் எதிரொலியால் வெளியில் கக்கிவிடுவோமோ என்று பயந்தேன். அவ்வளவு சிரிப்போ சிரிப்பு உங்களின் நகைச்சுவை சுவடுகளின் அணிவகுப்பு. அந்த கடிகாரத்தின் சின்ன முள் உங்களை இந்த பாடு படுத்தி இருக்கின்றதே.

என் கண்ணான வாப்பா காதர் மசதானுக்கு எழுதிய கடிதம் சிரிப்பின் உச்சகட்டம். மொத்தத்தில் இந்த பதிவே ஒரு கவலை மறக்க நீங்கள் கொடுத்த ரமழான் பரிசு A.N. நேயர்களுக்கு.

அபு ஆசிப்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. S. Mohammed Farook,

MashaAllah !!!

You have an art of excellent story telling skills.(Again I finished in a single breath reading)

I consider this post a specially packaged Eid gift for all of Adirai Nirubar readers.

A profound message I like and much appreciate is that

//’சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை ஆள்பவர்கள் நாங்கள்’ என்று மார்தட்டி நின்ற ‘சாம்ராஜ்யத்தின் ராஜ குடும்பங்களில் ‘கலப்பு திருமண வாடை’ வீசுகிறது. குலப்பெருமை பேசியவர்கள் குணிந்து நடக்கிறார்கள்.


கஞ்சி வந்து விட்டது. ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ ஆகிவிடும் ஆதலால் ஆறும் முன்னே சூட்டோடு குடிப்போம். ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் குடிப்போம்! "ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடுத்துக் கொள்ளுங்கள்’’. ஒற்றுமை இன்றில் நம் அனைவருக்கும் தாழ்வே! //

Take care

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

sabeer.abushahruk said...

இந்தப் பதிவின் இரண்டாம் பாகமும் நகைச்சுவை பொங்க ரொம்ப கலக்கல்.

ஆம், உண்மையிலேயே அதிரை நிருபர் வாசகர்களுக்கு ஈத் பரிசுதான் இந்த ஆக்கம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, மாமா.

குல்லு ஆம் வ அன்த்தும் பி க்ஹைர்!

KALAM SHAICK ABDUL KADER said...

கஞ்சிக் கலயத் திற்குள்
கவியும் நகையும் கலந்து
நெஞ்சில் உள்ள தையெல்லாம்
,,,நிரப்பி வழிய வழிய
வஞ்சிக் காமல் தந்து
,,,வாலி பத்தின் சேட்டை
விஞசி நிற்கும் வண்ணம்
,,விரிவாய்ச் சொன்ன ஆக்கம்!


இனிமை பொங்கும் ஈதுல்ஃபித்ர் வாழ்த்துகள்!

(வேறு)

நோதல் உறுவோர் நிலையுணர்ந்து
.. நோன்பை நோற்று வறியோருக்(கு)

ஈதல் என்னும் அறம்பேணி
... எங்கும் அமைதி தனைவேண்டி

ஈதாம் பெருநாள் இதனில்நாம்
.. இறையை எண்ணி அவன்புகழை

ஓதும் செயலால் உலகுள்ளோர்
.. உயர்வு காண வழிவகுப்போம்.

Ebrahim Ansari said...

//கொழும்பு பினாங்கு சிங்கபூர் என்று சூரியன் உதிக்கும் கிழக்கை நம்பி இருந்த அதிராம்பட்டினம் போன்ற ஊர்கள் மேற்கே ‘கிப்லா’வை பார்த்ததும் சூரியன் அஸ்தமிக்கும் மேலை வானத்தில் புதிய சூரியன் தோன்றினான்.//

அருமையான வரிகள். யதார்த்தம். நிதர்சனம்.

நகைச்சுவையுடன் எழுதப் பட்ட இந்தப் பதிவில் பல இலக்கிய வாடை அடிக்கும் வண்ண வரிகள்.

உண்மையில் இது எங்களுக்குப் பெருநாள் பரிசே.

இந்த நன்னாளில் இந்தத்தளத்தில் ஈடுபாடு உடைய அனைவரும் உங்களின் நல் சுகத்துக்காக து ஆச் செய்கிறோம்.

நோன்புக் கஞ்சியே இந்தப் பாடு படுத்திவிட்டது.

இனி அடுத்து வர இருக்கும் புத்தகம் பிறக்கிறது பிறந்து என்ன பாடு படுத்தப் போகிறதோ.


Yasir said...

நகைச்சுவையுடன் எழுதப் பட்ட இந்தப் பதிவில் பல இலக்கிய வாடை அடிக்கும் வண்ண வரிகள்.

உண்மையில் இது எங்களுக்குப் பெருநாள் பரிசே.

இந்த நன்னாளில் இந்தத்தளத்தில் ஈடுபாடு உடைய அனைவரும் உங்களின் நல் சுகத்துக்காக து ஆச் செய்கிறோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\புத்தகம் பிறக்கிறது பிறந்து என்ன பாடு படுத்தப் போகிறதோ. \\

புத்தகம் அல்ல
வித்தகச் சொத்து
தத்துவ முத்து

என்று வெளிப்படுத்திக் காட்டும் என்றே நம்புகிறேன்.

ZAKIR HUSSAIN said...

//‘’சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை ஆள்பவர்கள் நாங்கள்’ என்று மார்தட்டி நின்ற ‘சாம்ராஜ்யத்தின் ராஜ குடும்பங்களில் ‘\கலப்பு திருமண வாடை’ வீசுகிறது. குலப்பெருமை பேசியவர்கள் குணிந்து நடக்கிறார்கள்.//


இறைவனை மறந்த நிலையில் வாழும் வாழ்க்கை எதிர்காலத்தில் என்ன விதமான முடிவுகளைத்தரும் எனும் அருமையான விளக்கம்.

பூமியில் பிறந்து , கால்களை பூமியில் பதிக்காமல் நடக்க ஆசைப்படுபவர்களுக்கு சரியான வழிகாட்டல்...இது போன்ற விசயங்களை பல வருடங்கள் கண்கானித்து வந்த உங்களைப்போல் அனுபவசாலிகள் வழியாகத்தான் கற்றுக்கொள்ள முடியும்.


பணம் சம்பாதிப்பது எப்படி என்று யாரும் சொல்லிக்காட்டிவிடலாம், வாழ்வது எப்படி என்று பெரியவர்களால்தான் கற்றுக்கொடுக்க முடியும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கஞ்சி வருதப்பா- வந்து கஞ்சிக்கு டாட்டா,
பல்சுவை கருவூலம்,
அனுபவங்களின் தேன் ஊற்று,
அறியாத அரிய அருந்தொகுப்பு

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

குல்லு ஆம் வ அன்த்தும் பி க்ஹைர்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கஞ்சி வருதப்பா- வந்து கஞ்சிக்கு டாட்டா,
பல்சுவை கருவூலம்,
அனுபவங்களின் தேன் ஊற்று,
அறியாத அரிய அருந்தொகுப்பு

Anonymous said...

//என்னமோ காக்கா! பெரியவர் என்றாலே மு.க நினைவுதான்வருகிறது.//

உடன்பிறப்பே! என் மீது நீ கொண்ட பாசமும் பற்றும் நேசமும் நான் அறிவேன்'

என்னை யாரேனும் இகழ்ந்து விட்டால்'' வாளெங்கே? என் தலைனை
இகழ்ந்தவன் நாவெங்கே?'' என்று வாளோடும் 'வேல்'லோடும் போர்க்களம்
நோக்கி புலியென பாய்பாவன் நீயல்லவா!

சின்னவன் பட்டம் கேட்கிறான்!.. நான் என்ன தசரதனா? மூத்தவனை காட்டுக்கு அனுப்பி விட்டு இளயவனுக்கு பட்டம் கட்ட!?

S.மு.க]ம்மதுபாரூக் .[கோபாலபுரம்@C,I.D.காலனி] அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//S.மு.க]ம்மதுபாரூக் .[கோபாலபுரம்@C,I.D.காலனி] அதிராம்பட்டினம்//

ஹா ஹா ஹா !

இதுவல்லவா ! 'கடு'தாசி !

முரொசொலி பேப்பரை கடலை விற்க போட்டுடலாம் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு