Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறந்துவிடாதீர்கள்! சாதி மத இனவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2012 | , ,

இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக 2011லிருந்து தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிநடை பெறுகிறது. தமிழ்நாட்டிலும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரிகள் ஒவ்வொருவரும் 150 முதல் 200 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வீடு வீடாக நேரில் சென்று விபரங்களை சேகரிப்பார்கள். இதற்காக பிரத்யேகமான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.


சாதி மத இன வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழகம் முழுவது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எழுத்து பூர்வமாக இல்லாமல் நேரடியாக கணினி வழியே பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் நம் சகோதர சகோதரிகள் கவனமாக இருந்து அனைத்து தகவல்களும் முறையாக பதிவேற்றம் செய்ய ஒத்துழைக்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரிகள் உங்கள் வீடுகளுக்கு வருவார்கள். கல்வி நிலை குறித்தும் கேள்விகள் கேட்கப்படுவதால் எத்தனை பேர் எழுத்தறிவு பெற்றவர்கள், பள்ளி மற்றும் உயர் கல்வியைப் பயின்றவர்கள் எத்தனை பேர் என்கிற விவரங்கள் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வரும்.

இது ரேஷன் குடும்ப அட்டை வினியோகிக்க அல்ல, நமது உரிமைகளை நிலைநாட்ட நாம் இந்திய பிரஜைகள் தான் என்று பறைசாற்றவும், நமது உரிமைகளை முறையாக பெற்றிடவும் வீட்டில் இருக்கும் அனைவரின் பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும், அவர்கள் வெளியூரில் இருந்தாலும் வெளிநாட்டிலும் இருந்தாலும் சரியே. அவர்களின் பெயர்களை அவசியம் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படும்.


இது நமது உரிமையை பெற ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1824-ம் ஆண்டில் அலகாபாத் நகரிலும், 1827-ம் ஆண்டில் பனாரஸ் நகரிலும், 1830-ம் ஆண்டில் டாக்காவிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதி காரப்பூர்வமாக முதன் முதலாக 1860-ம் ஆண்டில் தொடங்கி 1871 வரை கணக்கெடுப்பு நடந்ததாக வர லாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு 1872-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த திட்டம் வகுக்கப்பட்டது.

1931-ம் ஆண்டில் மட்டும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்த மாதிரியான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விடுதலைப் போராட்டம், நாடு பிரிவினை, மதக்கலவரம், நிலநடுக்கம் ஆகிய காலங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு நடத்த முடியாத பகுதிகளில், இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை கணிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது.

1981-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் தொகை பதிவேடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முழுமையான தகவல்கள் அழிந்து போயின! அதே ஆண்டில் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் கலவரத்தால் கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை. 1991-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்சினையால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்படப்போவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.

உலகிலேயே அதிக மக்களை ஒரே புள்ளி விவரப்பட்டியலுக்குள் கொண்டு வர செய்யப்படும் மாபெரும் முயற்சியாகும் இது.

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

கணக்கெடுக்க வருபவர்கள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அதை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் குடும்ப தலைவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. விபரம் தெரிந்த குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் பதில் சொன்னால் போதும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டப்படி பணி செய்ய மறுப்பது சட்டப்படி குற்றம். அதேபோல் கணக்கெடுப்பாளரிடம் பதில் சொல்ல மறுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மக்கள் தொகை மற்றும் மக்களின் நிலமைகள் மிகவும் அவசியமாகிறது.


இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நம் நன்மைக்காகவே, பிறந்த தாய்நாட்டில் நம் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமானால் உண்மையை சொல்ல வேண்டும். படைத்தவனே பாதுகாவலன்.


அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன் கூடியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கும். ஆகவே ஒவ்வொரு முஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.


சமுதாய இயக்க சகோதரர்களே, இதிலும் அரசியல் செய்யாமல் நம் உரிமையை மீட்டேடுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக மிக அவசியம் என்பது நன் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. நம் சமுதாயத்தில் அநேக மக்கள் வெளிநாடுகளில் உள்ளார்கள், தயவு செய்து இதில் நம் மக்களுக்கு உதவி செய்யுங்கள், குறிப்பாக படிப்பறிவு குறையுடைய குடும்பங்களுக்கும், மற்றும் பெண்கள் மட்டுமே உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கும்.


வார்டு உறுப்பினர்களே இதற்கு மட்டுமாவது காசு வாங்காமல் உதவுங்கள் உங்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்காக. உண்மை மக்கள் தொகை எவ்வளவு என்று அறிந்தால் தானே அடுத்த வார்டு தேர்தலில் நீங்கள் மீண்டும் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற முடியும்.

மறந்துவிடாதீர்கள்! மண்ணின் மைந்தர்களாகிய நம் எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

இவ்வகை விழிப்புணர்வு பதிவுகள் ஏற்கனவே அதிரைநிருபரில் பதிந்திருந்தாலும், மீண்டும் மின்னாடல் வழியாக நினைவூட்டல் செய்த சகோதரர்க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 


- அதிரைநிருபர் குழு
மேலும் தகவல்களை சகோதரர் சேக்கனா M.நிஜாம் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார் இங்கே...

அரசின் கணக்கீடு : கவனத்தில் கொள்ளவேண்டியவை ! 

இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.

சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.

இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்

1) ஷேக்,
2) சையது,
3) தக்னி முஸ்லிம்
4) அன்சார்,
5) தூதுகோலா
6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
7) மாப்பிள்ளா

என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 7 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.

இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.

பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.

எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் “இஸ்லாம்” என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 7 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.

வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சாதிவாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும்.

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும் போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்று தான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதிரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.

அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுபோல் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழி வகை செய்யப்பட்டது.

அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டைவிட்டு விட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது. மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும் என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார்.

அதனால் இந்துக்களை சாதிரீதியாக பிரித்தது போல் முஸ்லிம்களையும் சாதி ரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைமாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் “சாதி இல்லை” என்று சொல்ல வேண்டும்.

அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்ல வேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே “சாதி இல்லை” என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை, வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும்.

இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-சேக்கனா M.நிஜாம்
-source : tntj.net

10 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்ல விழிப்புணர்வு.அரசின் அதிகாரிகளின் கேள்விகளுக்கு அரண்டு விடாமல்.நம் சமுதாய பெண்மணிகள் தெளிவான பதிலை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன்.எழுத்து பிழைகள் இல்லாமலும், ஆண்களுக்கு பெண்கள் பெயர் பதியாமலும்,பெண்களுக்கு ஆண்கள் பெயர் பதியாமலும் கவனமாக பார்த்தக் கொள்ளவும்.

நம் ஊரில் விவரம் அறியாத பெண்களாக இருப்பதால்.கணக்கு எடுக்க வரும் அரசு ஊழியர்கள் கூடவே அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் சென்றால் யாருடைய பெயரும் விடுபடாமல் சரியான முறையில் கணக்கு எடுக்க தோதுவாக இருக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பயனுள்ள தகவலை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க சகோ. சேக்க்கன்னா நிஜாம் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.

சரியான தகவலை எவ்வித தவறும் இன்றி, தகவல் விடுபடுதலின்றி முறையே அரசுக்கு தெரிவிக்க வேண்டியது நம் எல்லோரின் கடமையும், பொறுப்புமாகும்.

எவ்வளவு தான் தெளிவாக தகவல்களை தெரிவித்தாலும் தப்பு,தப்பா எழுதி/பதிந்து கொண்டு சென்று விடுகிறார்கள் இதற்கென வரும் அரசு அலுவலர்கள் என்பது வேதனையான விசயமாக நடந்து கொண்டிருக்கிறது. இவை யாரும் அறியாமல் நடந்து விடுகிறதா? அல்லது வேண்டுமென்றே மக்கள் அல்லோலப்பட வேண்டுமென்ற நோக்கில் செய்யப்படுகிறதா? அல்லாஹ்வுக்கே விளங்கும்.

நான் ஆறு மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊர் வந்திருக்கும் பொழுது என் வாக்காளர் அடையாள அட்டையில் வீட்டின் முகவரி மாற்றுவ‌த‌ற்காக‌ அத‌ற்கென‌ உரிய‌ விண்ண‌ப்ப‌த்தில் த‌மிழிலும், ஆங்கில‌த்திலும் தெளிவாக‌ எழுதி ந‌ம‌தூர் அர‌சு ப‌ள்ளியில் உரிய அலுவலரிடம் முறையே ச‌ம‌ர்ப்பித்து அத‌ற்குரிய‌ ர‌சீதும் வாங்கி வ‌ந்தேன். இத்த‌னை நாட்க‌ள் காத்திருப்புக்குப்பின் ந‌ம‌து வார்டு மெம்ப‌ர் ப‌ட்டுக்கோட்டை தாலுக்கா அலுவ‌ல‌க‌த்தில் சோதித்து பார்த்தில் என் புதிய‌ அடையாள‌ அட்டை வ‌ந்திருக்கிற‌து. ஆனால் எல்லாம் சரியாக‌ விண்ண‌ப்பித்த‌ப்ப‌டி மாற்ற‌ப்ப‌ட்டு தெரு பெய‌ரை ம‌ட்டும் மாற்றாம‌ல் அப்ப‌டியே விட்டு இருக்கிறார்க‌ள். என் பொறுமைக்கும் அத‌ற்குப்பின் வ‌ந்த‌ வேத‌னைக்கும் யார் ப‌தில் சொல்லுவார்க‌ள்?

கார‌ண‌ம் என் பாஸ்போர்ட்டும் வ‌ரும் மே இறுதியில் காலாவ‌தியாகி அதை இங்கு புதுப்பிப்ப‌த‌ற்கு என் புது முக‌வ‌ரிக்குரிய‌ ஆவ‌ண‌ம் அவ‌சிய‌ம் இணைக்க‌ப்ப‌ட‌ வேண்டும். சென்னை தலைமைச்செயலக அலுவலரின் சான்று பெற்ற என் திரும‌ண‌ச்சான்றித‌ழ், அஃபிட‌விட் என‌ இர‌ண்டு மாத‌ கால‌ம் ப‌ல‌ ஆவ‌ண‌ங்க‌ள் த‌யார் செய்வ‌திலேயே ஓட்டிக்கொண்டிருக்கிறேன். நாட்க‌ளும், ப‌ண‌மும் சில‌ செல‌வு செய்ய‌ப்ப‌ட்ட‌ பின் அவைக‌ள் இன்று கைக்கு கிடைத்தும் என் வாக்காள‌ர் அடையாள‌ அட்டையில் அலுவ‌ல‌ர் செய்த‌ த‌வ‌றால் இன்னும் நிறைவு பெறாம‌ல் இழுத்த‌டிக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌து. இத‌னால் என் ப‌ய‌ண‌மும் சுண‌ங்கிக்கொண்டிருக்கிற‌து. இவைக‌ளை யாரிடம் முறையிடுவ‌து? என்ப‌தை அறியாம‌ல் விழித்து வ‌ருகிறேன்.

நாம் ந‌ம் தாய்நாட்டில் நிலவும் வேலையில்லாத்திண்டாட்ட‌த்திற்கு இட‌ம் கொடுக்காம‌ல் ந‌ம் முய‌ற்சியில் இப்ப‌டி வெளிநாடு வ‌ந்து ந‌ம் முறையான‌ ச‌ம்பாத்திய‌த்தின் மூல‌ம் அர‌சுக்கு ம‌றைமுக‌மாக‌ அந்நிய‌ச்செலாவணி கிடைக்க‌‌ கார‌ண‌மாக‌ இருந்தும் இப்ப‌டியெல்லாம் அய‌ல்நாடுக‌ளில் இருந்து கொண்டு அர‌சு அலுவ‌ல‌ர்கள் பணியில் செய்யும் பொடுபோக்கு, அல‌ட்சிய‌, அக்க‌றையின்மையால் ப‌ல‌ சொல்லாத்துய‌ரை அடைய‌ வேண்டி வ‌ருகிற‌து. என்று தான் திருந்துமோ அவர்களின் இந்த‌ பொடுபோக்குத்த‌ன்மையும், பிற‌ர் க‌ஷ்ட‌ம் அறியா நிலையும்?

எல்லாவ‌ற்றிற்கும் மக்களை அலைக்க‌ழித்துக்கொண்டிருந்தால் க‌ட‌ல் அலைக‌ளும் கூட‌ அச‌ந்து ஓய்வெடுத்துக்கொண்டுவிடும் போல் தெரிகிற‌து.

த‌வ‌றுக‌ள் ந‌ட‌ப்பு இய‌ற்கை தான். அது க‌வ‌னத்திற்கு வ‌ரும் பொழுது உட‌னே ச‌ரி செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும‌ல்ல‌வா? இல்லையா?

ம‌டிந்து ம‌ண்ணுக்குச்சென்ற‌ பின் தான் பிற‌ந்த‌ சான்றித‌ழே வ‌ழ‌ங்குவார்க‌ள் போலும்?

Muhammad abubacker ( LMS ) said...

// ம‌டிந்து ம‌ண்ணுக்குச்சென்ற‌ பின் தான் பிற‌ந்த‌ சான்றித‌ழே வ‌ழ‌ங்குவார்க‌ள் போலும்?//

நெய்னா நம்ம நாட்டை குறை சொல்லிக்கிட்டே இருந்தால்.எப்போ வல்லரசாக மாறுவது ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இங்கு பொறுத்தார் பூமி ஆள்கிறாரோ? இல்லையோ? நிச்சயம் வெறுத்துப்போவார்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பக்கரு, நம் நாடு நல்லாத்தான் ஈக்கிது நெசந்தான். சில பொறுப்பில்லாத நாதாரிகளைப்பத்தி தான் சொல்ல வந்தேன்.

என்னுடைய பார்வைக்கு என்னமோ வல்லரசு என்றால் பொருள்படுவது அப்பாவி பொதுமக்களை கொத்துக்கொத்தாக ஈவிரக்கமின்று கொன்று குவிப்பது என்பதாகவே தெரிகிறது.

வல்லரசு வேண்டுமா? வேண்டாமா? என முடிவு பண்ணிக்கிட வேண்டியது தான்.......

Muhammad abubacker ( LMS ) said...

// அப்பாவி பொதுமக்களை கொத்துக்கொத்தாக ஈவிரக்கமின்று கொன்று குவிப்பது என்பதாகவே தெரிகிறது.//

நெய்னா சரியா சொல்லி ஈக்கிறாய் கொன்று குவிப்பதில் வல்லமை + அரசு என்பதினால் வல்லரசாக போவுது என்று கனா கனவு காண்கிறார்கள் போலும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு.
பயன்படுத்துவது நமது கட்டாய பர்ளு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

குறிப்பாக நமதூர் பெண்கள் கவனிக்க வேண்டியது, கணக்கெடுப்பு செய்ய வரும் அலுவலர்களிடம் தன் பெயரை மட்டும் சொன்னால் போதும் அத்துடன் 'அம்மாள்' என்று சேர்த்து சொல்லக்கூடாது. உதாரணத்திற்கு 'சல்மா' என்ற பெயரை சல்மா அம்மாள் என்றோ, 'கதீஜா' என்ற பெயரை கதீஜா அம்மாள் (அ) ஹைஜாமா என்றோ, அபுல் ஹசன் என்ற பெயரை அவர் புனித ஹஜ் நிறைவேற்றி இருப்பதனால் ஹாஜி அபுல் ஹசன் என்றோ மரியாதை செலுத்துவதாக கருதி ஆலிம் பட்டம் பெற்றவரை அப்துல்லாஹ் என்ற பெயருடன் அப்துல்லாஹ் ஆலிம் என்றோ சொல்லக்கூடாது. எது உண்மையான பெயரோ அடைமொழி, பட்டம் இன்றி அதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

சொல்ல வேண்டிய இடத்தில் கூடுதல் தகவல்கள் சொல்லப்பட வேண்டுமேயன்றி தன் பெயரில் கூட்டல், கழித்தல் ஒரு போதும் செய்யக்கூடாது.

தவறுகள் எதுவும் ஏற்பட்டிருப்பின் அதற்குப்பிறகு பெயர் திருத்தத்திற்கு படாதபாடு பட வேண்டி வரும். அத்துட‌ன் பொன்னான‌ நேர‌த்தையும், பொருளாதார‌த்தையும் அநியாய‌மாக‌ செல‌விட‌ வேண்டி வ‌ரும். ஒரு கால‌த்தில் அப்புடியும், இப்புடியும் இருந்தாலும் கால‌ம் ஓடிய‌து அத‌னால் பெரும் பிர‌ச்சினைக‌ளை ச‌ந்திக்க‌ நேரிட‌வில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் ஒரு எழுத்துப்பிழைக்கு ஓராயிர‌ம் ரூபாயுட‌ன், அதையும் தாண்டிய‌ நேர‌த்தையும் செல‌விட‌ வேண்டி உள்ள‌து.

என‌வே அன்பான‌ என் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ளே, ச‌கோத‌ர‌ர்க‌ளே, ச‌கோத‌ரிக‌ளே, தாய்மார்க‌ளே அர‌சு ப‌தியும் அனைத்து ஆவ‌ண‌ங்க‌ளிலும் க‌வ‌ன‌மாக‌வும், எச்ச‌ரிக்கையாக‌வும் இருந்து கொள்ள‌ வேண்டுமாய் அன்புட‌ன் கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் போதுமான‌வன்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

சமுதாய கடமை என்னும் வரும்பொழுது அரசின் பதிவேட்டில் சரியாக பதிவிடாமல்/செய்யாமல் அதை தவறியதன் விளைவு/மிஞ்சுவது அலைச்சலே அல்லது அதிகாரிக்கு கொடுக்கும் வாய்கரிசி பணமே இழக்கக்கூடும்

இனியும் குட்டுப்பட வேண்டாம் இஸ்லாமிய சமூகமே
விழித்தெழு!, ஒன்றுபடு!, அரசின் திட்டங்களில் என்னுடைய இஸ்லாமிய சமூகத்துக்கும் பங்குண்டு என்பதை எடுத்துரை!

நல்லதொரு விழிப்புனர்வுமிக்க பதிவாக அளித்த "தகவல்" சேக(ரிங்க)ன்னா M.நிஜாம் காக்கா அவர்களுக்கு நன்றி

தன் கருத்தில் இன்னும் பல விழிப்புணர்வை பதிவேட்டின் முறையையும் விலாவரியாக சிறுபிள்ளைக்கு சொல்லுவதுபோல் தன் சமுதாய மக்களின் அக்கறை மற்றும் அலட்சியத்தை எடுத்து சொல்லி நமக்கெல்லாம் உரிய கடமையை கவனமாக இனிதே நிறைவேற்ற

அவர் நேரத்தை பொருட்படுத்தாமல் நமக்காக எடுத்துரைத்த அன்பு சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களுக்கும் நன்றி

Ebrahim Ansari said...

ASSALAMU ALAIKKUM.

WELDONE BROTHER SHAIKHANA M NIZAM!

VERY GOOD M S M NAINA FOR VALUABLE COMMENTS.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு