Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பருவமறிந்து பயிரிடலாமே ! - அனுபவம் பேசுகிறது ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 21, 2012 | ,

இது ஒரு மீள்பதிவு - சென்ற வருடம் இதே நாள் அதிரைநிருபரில் பதியப்பட்ட பதிவு - பருவம் அறிந்து மீண்டும் பதிவுக்குள்.

மாணவமணிகள் பள்ளி மேல்நிலை இறுதித் (+2) தேர்வில் மதிப்பெண்கள் எப்படியிருக்குமென்றும் அல்லது இவ்வளவு நிச்சயம் பெற்றிடுவோம் என்றும் முடிவுகளால் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கும் இளசுகளே !

நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? ஒருவேளை கிடைக்கா விட்டால், என் எதிர் காலம்? சந்தேகங்கள் அலையலையாய் அடிக்கத்தான் செய்யும்!. சரி மறுபக்கம், கட்டுக்கோப்புடனிருந்த பள்ளி வாழ்க்கை நிறைவுக்குள் வந்து விட்டது. இனி, ஜாலியான கல்லூரி வாழ்க்கை என்று அடுத்த சில மாதங்களை உற்சாகக் கொண்டாட்டமாகக் கழிக்கத் திட்டமிட்டிருக்கும் பலர்.

கொஞ்சம் கவனமாக என்ன சிரத்தை எடுத்தால்(மட்டுமே) +2 வுக்குப் பிறகான எதிர் நோக்கும் காலத்துக்கு நீங்களே சிவப்புக் கம்பளம் விரித்துக்கொள்ளலாம்.

இதெல்லாத்தையும் விட மனசுக்குப் பிடித்த பாடப் பிரிவில் விருப்பமான ஒரு கல்லூரியில் சேர்ந்தாகி விட்டது. இனி, கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள். படபடப்பு, ஆர்வம், பயம், பரவசம், "இனி நான் காலேஜ் ஸ்டூடன்ட்டாக்கும்!" என்று முதல் ஆண்டின் சில மாதங்களும் ஓடிடும். அதிலும் சீனியர்களின் ராகிங் வலையில் சிக்க நேர்ந்தால், கல்லூரி வாழ்க்கையின் அவஸ்தை, அத்தியாயமாகப் பதிவாகும் கலக்கமும் உங்களிடம் இருக்கலாம்.

ஊரோடு கல்லூரி என்றிருந்தால் பரவாயில்லை ஒருவேளை விடுதி வாசம், ஆரோக்கியம் இல்லாத உணவுகள், வீட்டைப் பிரிந்து இருக்கும் தனிமை இவைகளையும் சந்திக்க நேரிடும்.

ராகிங் மூலம் நட்பு பாராட்டுவதுதான் பெரும்பாலான சீனியர்களின் நோக்கமாக இருக்கும். ஆனால், தனி மனித சுதந்திரத்தை மீறும் வகையில், உங்களுக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்யச்சொல்லும் போது தயங்காமல், இதில் எனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்து விடுவதே நல்லது. அதையும் மீறி கட்டாயப்படுத்தினால், பேராசிரியரிடமோ, கல்லூரி முதல்வரிடமோ புகார் செய்யலாம்.

தமிழ் மீடியத்தில் இருந்து ஆங்கில மீடியத்தில் படிக்க நேரும் மாணவர்களுக்கோ, ஆரம்ப காலங்களில் தவிர்க்க இயலாத சங்கடங்கள் இருக்கலாம். ஆங்கிலம் என்பது தமிழைப் போல ஒரு மொழிதான். அதை மிகச் இயல்பாகக் கற்கலாம். ஆங்கிலம் என்பது அறிவு (knowledge) அல்ல. கூடுதல் தகுதியாக ஒரு மொழிப் புலமை மட்டுமே ! ஆகவே, ஆங்கில அறிவு என்பதற்கு பதிலாக ஆங்கிலப் புலமைதான் சரி. சித்திரமும் கைப் பழக்கம் ஆங்கிலமும் 'நா'ப் பழக்கம்!

மாணவர்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் காரணமாக தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். நவநாகரிக உடைகள் அணியும் மாணவர்களைப் பார்த்து, குற்ற உணர்ச்சியால் குறுகுறுக்கத் தேவை இல்லை. வசதிக்கு ஏற்ப ஆடை அணிவதுதான் அவசியம். நாம் அணியும் உடை எந்த விதத்திலும் நமது கண்ணியத்தைக் குலைப்பதாக இருக்கக் கூடாது.

வசிப்பிடத்தைப் பலருடன் பகிர்ந்துகொள்வது போன்ற பிரச்னைகள் இரண்டொரு வாரங்களில் சரியாகிவிடும். அதனால், பயம் தேவை இல்லை. சிலர் வீட்டில் ஆறு பரோட்டா(!!) சாப்பிடுவார்கள். ஆனால், விடுதியில் மூன்று பரோட்டா (?) மேல் சாப்பிட்டால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கூச்சத்தில், கால் வயிறும் அரை வயிறுமாகச் சாப்பிடுவார்கள். உணவு விஷயத்தில் மட்டும் எங்கேயும் எப்போதும் கூச்சம் வேண்டாம்.

கல்லூரிப் பருவத்தில் பல சமயம் நீங்களே தன்னிச்சையாக பல முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். இரண்டாம் ஆண்டு விருப்பப் பாடம் துவங்கி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என்று பல விஷயங்களைப் பற்றி தீர்மானிக்க வேண்டியிருக்கும். இது பல சமயங்களில் மன உளைச்சலை உண்டாக்கி, தூக்கம் கெடுத்து, குழப்பத்தில் ஆழ்த்தும். அப்படி முடிவெடுக்க முடியாத சமயங்களில் தனிமை தவிர்த்து, பெற்றோர் அல்லது விவரம் தெரிந்த சீனியர், பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளுங்கள். நாளை நீங்களே ஒரு வழிகாட்டி ஆகலாம் !

இவைகள் எல்லாவற்றையும் விட சிறகை விரித்துப் பறக்கும் பறவைகளாகி விட்டோமே என்றில்லாமல் பெற்றோர் சொல் கேட்பதும் அவர்களின் மனங்களை குளிர வைப்பதும் கற்ற கல்வியின் பலனாகத்தான் இருக்க வேண்டும். ஆசிரியர்களை மதிப்பதும் அவர்களுக்கு உரிய மரியாதையைச் செலுத்துவதும் கற்ற கல்வியினால் கண்ட பலனாக இருக்க வேண்டும்.

சரி, இத்தனை போராட்டங்களும் ஏன் ?

கௌரவமான ஒரு வேலையைக் கைக்கொள்ளும் இலக்கை எட்டுவதற்காகத்தானே ! கல்லூரிப் பருவத்திலேயே தங்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரித்துக் கொள்வதும். கல்லூரியில் விருப்பப் பாடங்களைத் தேர்ந்து எடுப்பதில் உள்ள நிதானமும், உத்வேகமும் வேலை குறித்து முடிவு செய்வதிலும் வேண்டும்!

கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் இருந்தே எதிர்காலத்துக்கு ஏற்பத் தன்னை மெருகேற்றிக் கொள்வதில், மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் உலகத்தையே கட்டி ஆளலாம் என்று இதுவரை கற்பனைக் கோட்டை கட்டி இருந்தால், அதனை பக்கவாட்டில் வைத்து விடுங்கள் ஊறுகாயாக அதனை தொட்டுக் கொள்ளலாம். நேர்முகத் தேர்வுகளில் ஆங்கில புலமையைவிட, டெக்னிக்கல் சம்பந்தமான அறிவையும், இண்டஸ்ட்ரி தொடர்பான விழிப்பு உணர்வையும்தான் சோதிக்கிறார்கள்.

இறுதி ஆண்டில் புராஜெக்ட்களைத் தங்கள் கைப்படச் செய்து முடிப்பது, கேம்பஸ் இன்டர்வியூக்களில் உங்களுக்குக் கூடுதல் மதிப்பை அளிக்கும். விலைக்கு வாங்கும் புராஜெக்ட்கள் உங்களின் இயல்பான திறமையைக்கூட மறைத்து, எதிரான எண்ணத்தை உண்டாக்கும்.

அதிமுக்கியமாக எந்த செமஸ்டரிலும் அரியர் (இடைத் தேர்தலுக்காக காத்திருக்கும் வேட்பளாராக) இல்லாமல் இருப்பது நலம். தகுதியுடைய மாணவர்கள் அதிக அளவில் இருந்தால், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் சராசரிகளும் கணக்கில்கொள்ளப்படும். தனித் திறமைத் தகுதிகளுக்கும் அங்கீகாரம் உண்டு. தனித் திறமை கொண்டவர்கள் மற்றவர்களிடம் எளிதில் கலந்து பழகுவார்கள் என்ற எண்ணம் உதிப்பதற்கு கவிக் காக்காவின் வரிகளும் தான் ஞாபகத்திற்கு வருகிறது "கனவு மெய்ப்பட வேண்டும்".

இதற்கு மேலும் (வலுவான அனுபவமிக்க) பயி(ல்வான்)ன்றவகள் நிறைந்திருக்கும் சபையிது ஆதாலால் அவர்களின் ஆலோசனைகளும், ஆர்ப்பரிக்கும் அனுபவங்களும் கருத்தாய்வார்கள் இதனைத் தொடர்ந்தே !

மேற்சொன்னவைகள் (அனுபவப்)பட்டதும், (உணர்வுகளைச்)சுட்டதும், (இனிமையாக)நேசித்ததும் அன்றையச் சூழலில் கற்றவைகளையும் கோர்வையாக்கியிருக்கிறேன்.

- அபுஇபுறாஹிம்

7 Responses So Far:

Noor Mohamed said...

'என் இறைவா எனக்கு கல்வியை அதிகப்படுத்து என்று (நபியே) நீர் பிரார்த்தனை செய்வீராக!' (அல்குர்ஆன்: 20:114).

அன்று, கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறுவர். ஆனால், இன்று கல்வி கற்றவனுக்கு மட்டுமே வருங்காலம் வசந்த காலம்.

இப்போதெல்லாம் ஆங்காங்கே என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என பல நிகழ்வுகளை பலர் நடத்திக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட அறிவுரைகளை கூறி குழப்ப விரும்பவில்லை.

எனவே, வாழ்க்கையின் முக்கியமான காலக்கட்டத்தை கடக்கவிருக்கும் நம் பிள்ளைகள் என்ன படிக்க விரும்புகின்றனர் என்பதை கண்டறிந்து அவற்றை செயல்படுத்த அறிவுரை கூறவேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்லூரியில் நுழைய நல் வழிகாட்டி நெறிகள்! குறிப்பாக மகனுக்கு!

அதிரை சித்திக் said...

ஒரு காலம் இருந்தது கலூரிக்கு செல்லும் மாணவன் ,என்றாலே போதும் .புள்ள பெரிய படிப்பு படிக்கிறான்

எந்த குறையும் வைக்க கூடாது என்பார்கள் .இதை நன்கு உணர்ந்த பிள்ளை சமையம் பார்த்து 'உம்மா எனக்கு அவசியம் ஆயிரம் ரூபாய் வேண்டும்

எதுக்குடா தம்பி .,அதுவா .முக்கியமான பாடத்திற்கு பீஸ் கட்டனுமா .என்பான் .வசதி இருக்குதோ

இல்லையோ எப்படியாவது பணம் தோதாகிவிடும்..,,ஆனால் அந்த பணம் கூட்டாளிகளுடன்

கும்மாலமிடவே ..,கல்லூரி வாழ்கை என்றால் உல்லாசம் என்ற பொருளாகி விட்ட நிலை இருந்தது

ஆனால் தற்போதைய பிள்ளைகள் பத்தாம் வகுப்பு முடித்த உடனே

எதிர்காலத்திற்கு ஏற்ற படிப்பு என்ன என்று சிந்திக்கும் தன்மை வந்து விட்டது

பெற்றோர்களும் பிள்ளைக்கு நிகராக படித்தவராக அல்லது விவரம் தெரிந்தவராக இருப்பதால்

சற்று கவனங்கள் கூடுதலாக உள்ளது எனலாம் ...ஹாஸ்டலில் தங்கி படிக்க வைப்பதால்

வெளி உலக வாழ்க்கை அனுபவம் கிடைக்கும்,ஆனால் தகாத நடப்பு கிடைக்குமானால்

நாம் எதிர் பார்க்கும் எதிர் காலம் சீரழிந்து போகும் ..எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே ..

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ..எனவே பிள்ளையின் குணமறிந்து வெளியூர்களில்

ஹாஸ்டல்களில் தங்கி படிக்க வைக்கலாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் ...,

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

உலக கல்விகளோடு மார்க்க கல்வியையும் கற்று ஈருலகத்திலும்.தானும் தன் பெற்றோர்களும் வெற்றி பெற மாணவ மணிகள் நடந்து கொள்ளட்டும்.

நேற்று ஜும்மா பயானில் கூட அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள்.இன்று பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட கல்விக்கு முக்கியத்துவ கொடுத்து பிள்ளைகளை சீரழித்து அல்லாஹ்வின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.என்பதை ஆவேசமாக சொல்லிக் காட்டினார்கள்.

பொருள் செல்வமும் பிள்ளை செல்வமும் சோதனைக்காகவே நமக்கு தரப்பட்டுள்ளது.என்பதை ஒவ்வொருவரும் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.

சேக்கனா M. நிஜாம் said...

மானவர்களுக்கென்றே காலச்சூழலுக்கேற்றப் பதிவு !

தொடருங்கள்........................

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நல்ல பிள்ளைகள் பெற்றவருக்கும்,
பெற்றவர் நல்லவரானால் பிள்ளைகளுக்கும் பொக்கிஷமே.

உலகிலேயே பெரிய துன்பம் பிள்ளைகள்
உருப்படாது உருவாகுதல் என்பது.

குழந்தைச் செல்வம் நவீன உலகில்
குழப்பமுடைய செல்வமாம் சிலருக்கு.

வற்றாத கல்வியை ஒருவன் விற்றாலும்,
வெற்று மனிதனாகினாலும் போகாதது.

பெற்ற ஒருவரின் கல்வியால்; குடும்பமும்
உற்றவரும் பயன் பெறுவார்.

சமுதாயப் பள்ளங்கள் நிரவும் கல்வியாளன்
சமூகத்துக் கலங்கரை விளக்கமுமாகிறான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்ல காலத்திற்கேற்ற கட்டுரை காக்கா,

நம்மூர்லெ எல்லாரும் 'பருவமறிந்து பயிரிடலாமே' என்பதை தப்பாப்புரிஞ்சிக்கிட்டு நல்ல மாப்ளெ, பொண்ணை பேசி வைத்து படிப்பில் மண்ணள்ளிப்போட்டு விடுகிறார்கள். எதிர்காலத்தைப்பற்றி யோசிப்பதில்லை......

(நல்லாப்படிச்சி இருந்தா நல்ல சம்மந்தம் வரிசையிலெ வந்து நிக்கிம்ங்கிறது தெரியமாட்டிக்கிது........)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு