Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹிஜாப் 26

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2011 |

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

ஹிஜாபிற்கு இந்தியா முதல், பல நாடுகளில் எதிர்ப்பும், விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. மார்க்கம் நமக்கு ஹிஜாபை எப்படி பேணச்சொல்கிறது என்பதை இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.

ஹிஜாப் என்ற வார்த்தை திரை, பிரித்தல், பாதுகாப்பு என்ற கருத்துக்களை உள்ளடக்கியதாகும். ஹிஜாப் ஆடையோடு நின்று விடுவதில்லை, நடை, உடை, பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் சேர்ந்ததுதான் ஹிஜாப்.

ஹிஜாப் ஊருக்கு ஒன்று, வெளியூருக்கு ஒன்று, வெளிநாட்டுக்கு ஒன்று என்ற வகையில் நமது சமுதாயத்து பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள். (இங்கு விதிவிலக்கைப்பற்றி மட்டும்தான் கூறுகிறேன் அனைவரையும் கூறவில்லை).

சொந்த ஊரில் ஒழுங்காக ஹிஜாபை கடைபிடிக்கும் பெண்கள் வெளி ஊர்களிலும், வெளிநாடுகளிலும் வித்தியாசமாக கடைபிடிக்கிறார்கள். தலையில் உள்ள துணி தலையில் இருப்பதில்லை கழுத்தில் மாலைபோல் வந்து விடும். தலை முடியை மறைத்து ஹிஜாபை சரியாக போடுவது சிலருக்கு மிக பாரமாக இருப்பதை காண முடிகிறது.

தற்சமயம் புர்க்காவிற்கான தலைதுணிகள் மெல்லிய துணிகளாக வருகிறது. தலைமுடியும், தலையில் உள்ள பூக்களும் வெளியில் தெரியாவண்ணம் தலைதுணி இருப்பதே மிகச் சிறந்தது. ஆடம்பரமாகவும், நல்ல பேஷனாகவும் அணிய வேண்டும் என்பதற்காக தலையில் மெல்லிய துணிகளை தவிர்த்து நாம் அணியும் புர்க்காவும், தலைதுணியும் மறுமையில் நமக்கு வெற்றியைத்தருமா? என்பதை கவனத்தில் கொண்டு ஹிஜாப் அணிவதே சிறப்பானது. அடுத்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அணிவது நமக்கு நன்மையை பெற்றுத்தராது.

இஸ்லாம் மனிதர்கள் எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக நமக்கு கற்றுத்தந்துள்ளது. வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரிய உயர்ந்த பண்பாகும். நடை, உடை, பழக்கவழக்கங்களில் வெட்கமின்றி செயல்படுவதை தடை செய்துள்ளது.

ஒரு சதோரர் நல்ல வேலையில் இருக்கிறார். தொழுகையாளியாகவும் இருக்கிறார். நான் சில வருடங்களுக்கு முன் பார்க்கும்பொழுது புர்க்காவுடன் சென்ற இவரின் துணைவியார்; ஒரு நாள் புர்க்கா, தலைதுணி இல்லாமல் கணவரோடு வெளியில் செல்கிறார் திடீரென்று புர்க்காவுடன் செல்கிறார்.(ஒரு நாள் புர்க்கா, ஒரு நாள் புர்க்கா இல்லாமல் செல்வது இப்படித்தான் தொடர்கிறார்) என்ன கொள்கையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் விளையாட்டாக இவர்களால் பின்பற்றப்படுகிறது. இங்கு தன் மனைவியை கண்டிக்காதது யார் குற்றம், கணவர் குற்றம்தானே. ஐந்து வேளை தொழுதால் மட்டும் போதுமா?

பிற மதத்தில் இருந்து காலேஜில் படிக்கும் காலத்திலேயே இஸ்லாத்தை நன்றாக புரிந்து ஏற்றுக்கொண்ட சகோதரியை எனக்கு தெரிந்த சகோதரர் மணமுடித்து வளைகுடாவில் வாழ்ந்து வருகிறார். இந்த சகோதரி அணியும் ஹிஜாப் நமது பெண்களையே அசர வைக்கும் அளவுக்கு மிக பேணுதலாக அணிந்து செல்கிறார். இஸ்லாத்தை பல தியாகங்கள் புரிந்து ஏற்றுக்கொண்டவர்களுக்குத்தான் இஸ்லாத்தின் மதிப்பு தெரியும். பரம்பரை இஸ்லாமியர்களுக்கு உண்மையான இஸ்லாத்தை பின்பற்றுவதில் தயக்கம், அலட்சியம் இவைகளை காணமுடிகிறது. ஹிஜாபையே தயக்கத்தோடும், விளையாட்டகவும் அணியும் இவர்கள் மார்க்கத்தின் மற்ற அமல்களை சரியாக பின்பற்றுவார்களா?

வெளியூர்களிலும் சரி, வளைகுடா நாடுகளிலும் சரி, விமான நிலையத்திலும் சரி நமது இஸ்லாமிய பெண்கள் கடைபிடிக்கும் ஹிஜாப் பெயருக்காகவே இருப்பதை நான் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன். கணவர் கூடத்தான் வருகிறார்கள். புர்க்கா அணிந்திருப்பார்கள் தலைதுணி மட்டும் பெயருக்குத்தான் ஆனால் தலையில் இருக்காது. தலைமுடி, பூ முதல் அனைத்தும் வெளியில் தெரியும். இஸ்லாமிய ஆண்களுக்கு ஹிஜாபின் உண்மை காரணம் புரிந்திருக்க வேண்டும். கணவனுக்கு தெரிந்தால் அல்லவா? மனைவியை கண்டித்து ஒழுங்காக தலைதுணியை போடச்சொல்ல முடியும்.

அரபு நாட்டு பெண்கள் வேலை செய்யும் இடங்களில் மற்ற ஆண்களுக்கு நடுவில் அடிக்கடி தலைதுணியை பிரித்து சரிசெய்து கொள்கிறார்கள். அப்பொழுது அவர்களின் தலை திறந்திருப்பதை காண முடிகிறது. (நான் தொலைபேசி அலுவலகத்தில் கண்ட காட்சி) தனி இடத்திற்கு சென்று அவர்கள் சரி செய்து கொள்ளலாம் அல்லது ஹிஜாபிற்கு பின் போட்டு விட்டால் இப்படி சரி செய்ய வேண்டியதில்லை. யாரை குறை சொல்வது?

ஒரு பெண் எப்பொழுதும் தன்மானத்தோடும், கௌரவத்தோடும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப்பை பேணச் சொல்லி வலியுறுத்துகிறது.

ஹிஜாப் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, எந்த நிறத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

வல்ல அல்லாஹ் என்ன கூறுகிறான்:

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)

இந்த வசனத்தில் இருந்து பெண்கள் புர்க்கா அணியும்பொழுது முகம், கை தவிர அவர்களின் தலைதுணி தலை மார்பு பகுதி வரை மூடியிருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது வரும் தலை துணிகள் தலையை மறைக்கவே போதாத அளவுக்கு மிக மெல்லியதாக வருகிறது. அதனால் புர்க்கா அணிந்திருந்தாலும் தலை, மார்பு பகுதியை மறைக்கும் அளவுக்கு கனமான துணிகளை பெண்கள் வாங்கி அணிந்து கொள்வது மிகச் சிறந்த நன்மையை பெற்றுத்தரும். புர்க்கா போட்டுள்ளோம் மார்பு பகுதியை மறைக்க வேண்டியதில்லை என்பது சிறந்த பண்பாக இருக்காது.

ஹிஜாபின் வரையறைகள்:

1) பெண்களின் முகம், மணிக்கட்டு தவிர முழு உடம்பையும் மறைக்க வேண்டும்.

2) புர்க்கா, தலைதுணி கனமானதாக இருக்க வேண்டும்.

3) பெண்களின் உடம்பை இறுக்கி பிடிப்பது போல் இருக்க கூடாது.

4) புர்க்கா தளர்வாக இருக்க வேண்டும் (இறுக்கமாக இருக்கக்கூடாது).

நிகாப் - முகத்திரை

நிகாப் என்பது கண்கள் இரண்டும் தெரியுமாறு முகத்தில் தொங்க விடும் துணிக்கு பெயர். நிகாப் கண்டிப்பாக போட வேண்டும், பேடாமல் இருக்கலாம் என்ற விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதோடு கையுறை, காலுறையும் அணிந்து செல்கிறார்கள். (இந்த நிகாப்தான் பிரான்ஸில் தற்பொழுது பிரச்சனையானது. நிகாப் போடக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். முஸ்லிம்களுக்கே பிரச்சனை வந்தது போல் சிலர் மெயில் குழுமங்களில் மெயிலை அனுப்பி கொண்டு இருந்தார்கள்).

ஆணாயினும், பெண்ணாயினும் சொந்த ஊரில் தவறு செய்ய தயங்க காரணம் சுற்றியுள்ள தெரிந்தவர்கள் முன்னால் தன் கண்ணியம் பறிபோய் விடும் என்ற அச்சத்தால்தான் (அல்லாஹ்வின் அச்சத்தில் அல்ல). தான் யார் என்று தெரியாத இடங்களில்தான் தவறிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் (விதிவிலக்கை மட்டுமே கூறுகிறேன்).

வெளியூர்களில் எந்த ஆணுடனும் நிகாப்புடன் (முகத்திரையுடன்) ஒரு பெண் சென்றால் அவனின் மனைவி என்று அறியப்படுவாள். முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தினால் விபரீதங்களுக்கு வழி வகுத்து விட காரணமாக அமைந்து விடும்.

முகத்தை மறைக்க கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்கள் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட முகம் மறைத்து தவறுகளைச் செய்யக் கூடிய நிலைமையும் ஏற்படலாம்.

சின்னத்திரை முதல் தவறு செய்யும் பெண்கள் வரை தவறிழைத்து விட்டு கைது செய்யப்படும்பொழுது - புர்க்கா அணிந்து (நிகாப்) முகத்திரையோடு வருவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.

முகத்திரை அணிந்த பெண்கள் கடைத்தெருவில் நடமாடும்பொழுது மட்டும் பின்பற்றுகிறார்கள். கடைகளுக்கு உள்ளே சென்று விட்டால் முகத்திரையை அகற்றி விடுகிறார்கள். நானே நேரில் கண்ட காட்சி இது. கடைகளுக்கு உள்ளேயும் ஆண்கள்தான் இருக்கிறார்கள். பின் இந்த முகத்திரை யாருக்காக போடுகிறார்கள். கணவருக்காகவா? அல்லது இஸ்லாத்திற்காகவா? இல்லாத ஒன்றை கடைபிடித்தால் இந்த நிலைதான் ஏற்படும்.

பெண்கள் கடைவீதிகளுக்குச் செல்லும்பொழுதும் மற்ற நேரங்களிலும் கொடுக்கல், வாங்கல் மற்ற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட முடியாது. அதனால் முகம், கை தவிர்த்து மணிக்கட்டு வரை மறைத்திருப்பது போதுமானது.

ஆண்களின் ஹிஜாப்:

பெண்களுக்கு மட்டும்தான் ஹிஜாப் ஆண்களுக்கு ஹிஜாப் இல்லை எப்படியும் இருக்கலாம் என்று நினைத்து வாழும் ஆண்களுக்கு வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை கவனமாக படித்து மனதில் வைத்துக்கொள்வது நன்மையளிக்கும்.

(முஹம்மதே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 24:30)

ஒரு ஆண் ஒரு பெண்னை பார்த்தவுடன் அவனது மனதில் வெட்கமற்ற தவறான எண்ணம் தோன்றாமல் இருக்கவே பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறு வல்ல அல்லாஹ் கூறுகிறான். (இதுவே ஆண்களுக்கான ஹிஜாப்)

முதல் பார்வை சாதாரண பார்வை, இரண்டாவது பார்வை ஷைத்தானின் பார்வை ஆகவே மீண்டும் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்பது நபிமொழி.

ஆகவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! தங்களின் ஹிஜாபை முழுமையாக அழகான முறையில் பேணி வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்று இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அடையுங்கள்.


- S.அலாவுதீன்

26 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஹிஜாப் பற்றிய இஸ்லாமிய சட்டங்கள் முதல் பிரான்ஸ் நாட்டு சட்டம் வரை மிகத்தெளிவான விளக்கம்.
ஜஜாக்கல்லாஹ் ஹைர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அவசியமான ரத்தினச் சுருக்கமாக எளிய நடையில் எங்களுக்கு புரியும் வண்ணம் தெளிவான விளக்கம் தந்த அலாவுதீன் காக்கா அவர்களுக்கு ஜஸாகல்லாஹ் ஹைர்...

ஹிஜாப் பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல ஆணுக்கும் பொருந்தும் என்று விளக்கிய விதமும் தெளிவு !

தொடர்ந்திடுங்கள் இன்னும் நம் யாவரின் நலன் வேண்டியே !

sabeer.abushahruk said...

மிக்க நன்றி அலாவுதீன். இதைவிடத் தெளிவாக விளக்கிச் சொல்லமுடியாது. எனக்குக் கொஞ்சம் ஆசுவாசமாகக்கூட இருந்தது. காரணம், நீ சொல்வதுபோல்தான் விளங்கி பின்பற்ற வைத்திருக்கிறேன் என் வீட்டுப் பெண்க்களை.

ஆயினும், முகமும் கைகளும் மறைத்தேத் தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று எல்லோரும் விளங்கிக்கொண்டால் போதுமானது.

ஜசாக்கல்லாஹூ ஹைரா! அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

Meerashah Rafia said...

பெண்கள் ஹிஜாப் பற்றி சில மாற்று மதத்தவரிடம் கேட்டால் கூட தெளிவாக கூறுவார்கள். ஆனால் ஆண்கள் ஹிஜாப், இஸ்லாமிய மதத்தவர்கலாகிய நாமே நம்மையும், பிற மதத்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டுல்லோம்..

உதாரணம்:
1) கால்பந்து/கூடைபந்து போன்ற விளையாட்டுக்களில் நாம் முட்டிக்கு மேல் போடுகின்றோம்..இது நமதூரில் மட்டும் இல்லை, மாற்று மதத்தவர்கள்கூட ஹிஜாப் அணிய வேண்டும் என்று சட்டம் இட்டுள்ள சவூதி அரேபியாவில்கூட ஒரு தெருவிற்கு இரெண்டு குழு கால்பந்து வீரர்கள் இரவு பகலாக விளையாடுவதை காணும் நாம் ஆண்கள் ஹிஜாப் இல்லாமல் (முட்டிக்கு மேல்) இருப்பதை காணலாம்..

2)உடல் தடினமாக இருப்பவர்கள் கூட வேண்டுமென்றே இறுக்கமான(short shirt/tight shirt-T) மேலாடை அணிந்து தன் வீரதீர உடலை ரோட்டோரம் காண்பித்து பெருமை படுவதை பார்க்கத்தான் செய்கின்றோம். 
3)நமதூர் தோப்பில் தொப்பு தொப்பாக தொப்புளுக்கு கீழிருந்து, தொடை வரை மட்டும் வேட்டியோடு குளித்துகொண்டிருக்கும் அருங்காட்சியையும் அவ்வப்போது ஆர்குட்டிலும், பேஷ்புக்கிலும் காணத்தான் செய்கின்றோம்.


வருத்தப்பட கூடிய செய்தி என்னவெனில் ஆண்களாகிய நாமும் நம் தமையன்மார்களிடமோ, சொந்தக்காரகளிடமோ இதை எடுத்துச்சொல்ல நம்மை அறியாது தவறி விடுகின்றோம்..

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து..
---------------------------------

Mohamed Abubucker சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. அலாவுதீன் அவர்களின் ஹிஜாப் என்ற கட்டுரையை படித்தவுடன். என் மனதிற்கே ஹிஜாப் அணிந்ததுபோல் உணர்ந்தேன்.

ஆம் ஹிஜாபுடைய உள் நோக்கம் தெரியாத காரணத்தினால். தன் கணவர்க்கு முன் கண்ணியமாகவும் அடக்கமாகவும் முக்காடு போடக்கூடிய சில பெண்கள். அந்நிய ஆடவர்க்கு முன் குறிப்பாக மாற்று மத ஆண்களாகி பால்காரன், காய்கறிகாரன், போன்றவர்களுக்கு முன். வெக்கத்தை இழந்து உணர்ச்சியற்றவர்களாக நிற்ப்பதை நாம் கண்கூடாக பார்கிறோம்.

அல்லாஹ் இவர்களுக்கு மார்க்க விளக்கத்தை கொடுத்து.ஹிஜாப் விசயத்தில் பேணுதலாக நடப்பதற்கு தவ்பிஃக் செய்வானாக!ஆமீன்.

Mohamed Abubucker

Yasir said...

அஸ்ஸாமு அலைக்கும் அலாவுதீன் காக்கா...ஹிஜாபை பற்றி அருமையான , எளிதில் புரியக்கூடிய வகையில் உள்ள விளக்கங்கள்...தெரிந்திராத பல தகவல்கள்...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்...

சும்மாதப்பா நினைக்ககூடாது :) “ இதனை “ நோட்டீசாக அடித்து வெளியிடுவது நமது சமுதாயக்கடமை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சும்மாதப்பா நினைக்ககூடாது :) “ இதனை “ நோட்டீசாக அடித்து வெளியிடுவது நமது சமுதாயக்கடமை//

ஆதேதான் நானும் நினைக்கிறேன் (தாப்பாவல்ல)... வழக்கமாக அச்சடித்து வெளியிட்டுடலாமே ! கவிக் காக்கா ஊரில் இருக்கும் தருனம் தானே !

ZAKIR HUSSAIN said...

சமீபத்தில் ஒருவர் [ முஸ்லீம் பெண்மனி- 70 வயது இருக்கும்] இறந்து விட்டார். பக்கத்து வீட்டில் உள்ள முஸ்லீம் அல்லாதவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை

முஸ்லீம் அல்லாதவர்கள் முஸ்லிமான பெண்ணின் ஜனாசாவை பார்க்க கூடாது என சொல்கிறார்கள், இது உண்மையா?.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். சகோ. கட்டுரை போலி முஸ்லிம்களின் முகத்திரையை கிழிப்பதாக உள்ளது. முக்காடு போடாத அரவேக்காடு பெண்களுக்கு வெக்கக்கேடான சம்பவம் எளிதில் நடக்கும். தன்னை காத்து கொள்ள ஹிஜாப் அவசியம்.அல்லாஹ் எல்லாரையும் நேர்வழிப்படுத்துவானாக ஆமின்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் உதவியால், தாயகத்திலிருந்து திரும்பி, இன்று அமீரகம் வந்து சேர்ந்துவிட்டேன். இறைவனுக்கே எல்லா புகழும்.

அலாவுதீன் காக்கா... வந்தவுடனே தங்களின் இந்த பதிவை தான் முதன் முதலில் படித்தேன்.

மிக அருமையான விளக்கம், ஆண்களுக்கு ஹிஜாப் என்று திருக்குர்ஆன் வசனத்தையும் நபிமொழியையும் போட்டு எல்லோருக்கு நற்சிந்தனை ஊட்டியுள்ளீர்கள்.

அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்.

sabeer.abushahruk said...

//அல்லாஹ்வின் உதவியால், தாயகத்திலிருந்து திரும்பி, இன்று அமீரகம் வந்து சேர்ந்துவிட்டேன். இறைவனுக்கே எல்லா புகழும்.//

அல்லாஹ்வின் உதவியால் நான் உல்ட்டாவாகி ஊரில் இருக்கிறேன்.

அதிரை நிருபர்களே நலமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரை நிருபர்களே நலமா? //

அல்ஹம்துலில்லாஹ் ! அங்கே எப்படி !?

வாசக நேசங்களையும் சேர்த்துதானே !?

sabeer.abushahruk said...

//வாசக நேசங்களையும் சேர்த்துதானே !? //

ஏன்? நீங்களும் அதிரை நிருபர்களே" மறந்து போனதா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதெப்படி கவிக் காக்கா ? ஏன் நீங்கள்(தான்) அதிரைநிருபர்கள்னு சொல்லிருக்கீங்க" :): ஆனால் அது "இவர்களும் அதிரைநிருபர்களே....." சுட்டியிங்கே : மலரும் நினைவுகள் மாலைநேர அதிரையில் !

http://adirainirubar.blogspot.com/2011/02/blog-post_9382.html

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஹிஜாப், நமது ஊரில் ஒரு கையில் குமிஸலாக சுருட்டி வெள்ளைத் துப்பட்டியை பிடித்து நமது பெண்டிர் அணிந்து செல்லும் ஆடைதானே !?

sabeer.abushahruk said...

//ஹிஜாப், நமது ஊரில் ஒரு கையில் குமிஸலாக சுருட்டி வெள்ளைத் துப்பட்டியை பிடித்து நமது பெண்டிர் அணிந்து செல்லும் ஆடைதானே !? //

அப்பெவெல்லாம் எனக்கு 25 /26 வயசு, ரொம்ப அழகான ஹிஜாப் இந்த முறையில் அணியும் துப்பட்டிதான் அபு இப்றாகீம். உண்மையைச் சொல்லுங்கள் என்னதான் இக்காலப் பெண்டிர் தமது அபாயாவை எம்ப்ராய்டரி செய்து அணிந்தாலும் அந்த் வெளிர்நீல வெள்ளைத் துப்பட்டியின் அழகு வருமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அந்த வெளிர்நீல வெள்ளைத் துப்பட்டியின் அழகு வருமா? //

ஆம் ! அதன் அழகே தனிதான் அப்படின்னா "துப்பட்டி" கவிதை தைக்கப்படுகிறது ! சரி சரி ok ok !

வென்மையின் பன்மை
நமது பெண்டிரின் தன்மை !
கோத்திரம் சொல்லும் !
அவர்கள் அணியும்
துப்பட்டியின் பளீச்ச்ச்ச் !

அப்துல்மாலிக் said...

மாற்று மதத்தவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும்விததில் தெளிவான பகிர்வு

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சகோதரார்கள் M.H. ஜஹபர் சாதிக்,அபுஇபுறாஹீம், சபீர் தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

///meerashah சொன்னது…வருத்தப்பட கூடிய செய்தி என்னவெனில் ஆண்களாகிய நாமும் நம் தமையன்மார்களிடமோ, சொந்தக்காரகளிடமோ இதை எடுத்துச்சொல்ல நம்மை அறியாது தவறி விடுகின்றோம்..///

சகோ. மீராஷா அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தங்களின் கருத்துக்கள் உண்மையே! வெட்கம் ஆணுக்கும் உண்டு என்பதை அறியாத காரணத்தால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். நிச்சயம் வெட்கம் உயர்ந்த பண்பு என்பதை இவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள் : யாசிர், தஸ்தகீர், அப்துல் மாலிக்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

///ZAKIR HUSSAIN சொன்னது… முஸ்லீம் அல்லாதவர்கள் முஸ்லிமான பெண்ணின் ஜனாசாவை பார்க்க கூடாது என சொல்கிறார்கள், இது உண்மையா?.///

சகோ. ஜாகிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பார்க்கக் கூடாது என்பது உண்மையா? என்பதை விசாரித்து தெரியப்படுத்துகிறேன்.

அலாவுதீன்.S. said...

சகோ. தாஜுதீனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// அல்லாஹ்வின் உதவியால், தாயகத்திலிருந்து திரும்பி, இன்று அமீரகம் வந்து சேர்ந்துவிட்டேன். இறைவனுக்கே எல்லா புகழும். /// அல்ஹம்துலில்லாஹ்!

தங்களின் கருத்திற்கு நன்றி!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------


உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ! (அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்.)

எனது உடன்பிறவா சகோதரர்களில் ஒருவர் இங்கு வெளியாகியிருந்த ஹிஜாப் பற்றிய அருமையான கட்டுரையை ஈமெயிலில் அனுப்பியிருந்தார்கள் நிறைய ஹிஜாப் பற்றி நான் படித்திருந்தாலும் இங்கு எனது கருத்தைப் பதியக் காரணங்கள் உண்டு.

அதில் ஒன்று இதனை அனுப்பிய சகோதரர், மற்றொன்று ஹிஜாப் அதன் பாதுகாப்பு.

இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது அறியாமைக் காலத்திலிருந்த எனது ஆடையின் அலங்கோலத்தால் பதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இதனை அனுப்பிய சகோதரரும் அவரது நண்பர்களும் என்னை பாகாப்பாக எந்த வித அசம்பாவிதமில்லாமல் என் வீட்டில் சேர்த்தார்கள் (அல்ஹம்துலில்லாஹ்).

அவர்கள் என்னை வீட்டில் விட்டுச் செல்லும்போது "உடுத்தியிருக்கும் ஆடை முழுமையாக இருந்தால் நிச்சயம் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது"ன்னு சொல்லிக் கொண்டார்கள்.

அதன் பின்னர் எனக்கும் எனது நண்பர்களுக்கு அவர்கள் நல்ல நண்பர்களாக பழகிய நேரங்களில் அவர்களின் நேர்மையும் எங்களை நல்ல முறையில் நடத்தும் பழக்கமும் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது அதோடில்லாமல் அவர்களோடு பழகியதில் அவர்கள் எல்லோருமே இறைநம்பிக்கையில் அழுத்தமாக இருப்பதை உணர்ந்தேன் அந்த சமயங்களில்தான் தூய மார்க்கம் பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய அரம்பித்தது.

அவர்களிடம் எனக்குள் எழும் எல்லா வகையான சந்தேகங்களையும் கேட்பேன் வாக்குவாதம் செய்வேன் எந்தச் சூழலிலும் முகம் சுளிக்காமல் பதில் தருவார்கள் நிறைய புத்தகங்களை எனக்காக வாங்கி வந்து தருவார்கள் என்னுடன் இருந்த தோழிகள் ஒவ்வொருவராக என்னை விட்டு பிரிந்தனர் அவர்கள் என்னை எதோ மாதிரி பார்க்க ஆரம்பித்தனர்.

அல்லாஹ் எனக்கு ஹிதாயத்தை நாடினான் என்னையும் முழுமையாக அல்லாஹ்வின் மார்க்கத்தை தழுவிக் கொண்டேன் (அல்ஹம்துலில்லாஹ்), அந்த சமயத்தில் அருகில் பேசிக் கொண்டிருந்த நண்பர்களை கண்டது எனக்குள் கூச்சமாக இருந்தது. நண்பர்களில் ஒருவர் அவரது சகோதரியுடன் என்னை அனுப்பிவைத்து எப்படி ஹிஜாப் அனிவது என்று சொல்லிக் கொடுத்ததும் உடணே போட்டு கொண்டேன் அன்று உணர்ந்தேன் அல்லாஹ் என்னை முழுமையாக பாதுகாத்து விட்டான், எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே.

ஹிஜாப் வெளியில் செல்லும்போது இருக்கும் தன்னம்பிக்கை, அறியாமைக் காலத்தில் அலங்கோலமான ஆடையில் ஒருவித பயமிருந்தது அல்லாஹ் அதனைப் போக்கினான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு முஃமீனான சகோதரிகளை மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைத்து பெண்களையும் அவனது அழகிய ஆடைகளைக் கொண்டு பாதுகாப்பானாக.

அல்குர்ஆன் உலக மாந்தர்களுக்கு அருளப்பட்ட அருட்கொடை அதனைக் கொண்டும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழியினை இருக்கிப் பிடிப்போம் ஒற்றுமையாக மற்ற சகோதரர்களுக்கும் வழிகாட்டுவோம் இன்ஷா அல்லாஹ்..

சகோதரி,
ஆமினா அப்துல்லாஹ்

அலாவுதீன்.S. said...

சகோதரி ஆமினா அப்துல்லாஹ் அவர்களுக்கு வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)

தங்களுக்கு ஹிதாயத் வழங்கிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!
அல்ஹம்துலில்லாஹ்!

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு