Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அலைபேசியும் ஆடை அலங்காரமும்! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 08, 2011 | , , ,


என்னதான் சொல்லுங்கள், இந்த ஸெல்ஃபோன், மொபைல் ஃபோன் இப்படியெல்லாம் அழைப்பதைவிட "அலைபேசி" என்று அழைக்கும்போதுதான் தமிழை ஏன் செம்மொழி என்று பெருமைப் படுகிறோம் என்று விளங்குகிறது.

பலர் தத்தமது அலைபேசிகளை சீவி சிங்காரித்து பூவும் பொட்டும் வைப்பதில்லையே தவிர மற்றபடி அதற்கு அழகழகா உடுத்திப்பார்ப்பதில் எந்த குறையும் வைப்பதில்லை.

இந்த மொபைல் ஃபோனை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று பல வித்தியாசமானவர்கள் படுத்துகிற பாடு சொல்லி மாலாது.

ரேடியம் ரேஞ்சுக்கு ஜொளிக்கும் கிளிப்பச்சைக்கலர் ப்ளாஸ்டிக் கவர் போட்டிருந்தவரைப் பார்த்து, "என்ன ஃபோனுக்கு பாபாஷூட் போட்டு வச்சிருக்கிய"என்று கேட்டார் என் நண்பர் ஒருவரின் மச்சான்.

ஊரில் பச்சை வெல்வெட்டில் ப்ரஸ் பட்டன் எல்லாம் வைத்துத் தைத்த அலைபேசி உறை நான் பார்த்திருக்கிறேன்.தர்கா பார்ட்டிகள் ஊதுவர்த்தி கொளுத்தி பரவசப்படும் அளவுக்கு படு விமரிசையாக அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த ஃபோன்.

சிலர் ஃபோனை இடுப்பு பெல்ட்டில் ரிவால்வார் ரேஞ்சுக்கு சோப்புப் பெட்டி போன்றதொரு கடினமான உறைக்குள் வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ ஃபோன் அடிக்க ஆரம்பித்ததும் அதை எடுப்பதற்குள்ளே கதகளி துவங்கி களரி வரைக்கூட அபிநயம் பிடித்து முடிப்பார்கள். அத்தகைய இடத்தில் பதுக்கி இருப்பார்கள்.

இன்னொரு பார்ட்டி உறைக்கு ஜிப்பு வைத்து தைத்து இருந்ததால் அந்த ஜிப்பின் அச்சு அப்படியே ஃபோனின் பக்கங்களில் பதிந்து ஏதோ மேஜர் அறுவை சிகிச்சை முடிந்து தையல் போட்ட இடம்போல பளிச்சென்று தெரியும். அதிலும் அவர் திறந்து மூடும்போது ஜிப்பின் ரன்னர் சிக்கிச்சிக்கி இரண்டு இடங்களில் ஃபோன் கன்டிப்போன மாதிரி இருக்கும்.

என் நண்பர் ஒருவர் ஃபோன வந்ததும் இடுப்பில் உள்ள போச்சிலிருந்து எடுத்து பேசிவிட்டு வைக்க, திரும்ப உடனே ஃபோனடிக்க மீண்டும் பேசிவிட்டு வைக்க, இப்படியே எடுப்பதும் பேசுவதும் வைப்பதும் என ரொம்ப அவதிப்பட்டார். இது இப்படியே பழக்கமாகி பல சமையங்களில் ஃபோன் அடிக்காமலேயே அனிச்ச்சியாக கை 'போச்' பக்கம் போனதை பார்த்து மிரண்டுபோய்,"ஃபோன் பேசாத நேரங்களில் இந்த கையை வைத்து வேறு ஏதாவது வேலைகூட செய்வீர்களா?" என்று கேட்டு வைத்தேன்.

துபை தமிழ் பஜாரில் நேரில் கண்டது: "புலி வருகுது புலி வருகுது"என்ற கருத்தாழம் மிக்க சினிமாப் பாட்டின் ரிங் டோன் அடிக்க ஒருவர் கிணற்றில் தண்ணீர் கேந்தும் லாவகத்தோடு இடுப்புக்கருகில் ஒரு நூலைப் பிடித்து இழுத்தார். மூன்றாவது இழுவையில் நூலின் முடிவில் புலி வரவில்லை என்றாலும் மெலிந்த பொற்கிளியைப் போன்றதொரு அழகான சுருக்குப்பை மேலே வந்தது. அதை எடுத்து சுருக்கை அகட்டி கவிழ்த்தார். கையில் ஃபோன் விழுந்தது. எடுத்து, "ஹலோ... ஹலோ..."என்று இரண்டு முறையல்ல மூன்றுமுறை சொல்லிவிட்டு "வச்சிட்டான்" என்று தன் நண்பரிடம் வறுத்தப் பட்டார். ஃபோன் செய்தவருக்கு எப்படித்தெரியும் பார்ட்டியோட பந்தோபஸ்த் மேட்டரெல்லாம்.

நானும்தான் சட்டென்று ஃபோனை எடுத்துவிடமாட்டேன். ஆனால், மேற்சொன்ன காரணங்கள் ஏதுமில்லை, இது வேறு, உங்களிடம் சொல்வதெற்கென்ன. நான் ஃபோனை எப்பவும் வைப்ரேஷன் மோட்லேயே வைத்திருப்பேனா, ரிங் அடிக்கும்போது கூடவே வைப்ரேட் ஆகுமா, அந்த வைப்ரேஷன் என் ஃபோன் இருக்கும் இடத்தில் கிர்கிர்னு கூச்சம் காட்டுமா அதை அப்படியே அனுபவிச்சிட்டு அப்புறம்தான் ஃபோனை எடுப்பேனாக்கும்.

உங்களுக்கு நம்பிக்கை வரனும்னா 00......என்கிற என் அலைபேசிக்கு ஃபோன் பண்ணிப் பாருங்களேன், கொஞ்ச நேரம் உங்களை கூச்சம் காட்டவிட்டுத்தான் ஃபோனை எடுப்பேன்.

இந்த ஆய்வுக்கட்டுரை(?) எழுதிக் கொண்டிருக்கும்போது என் அலைபேசி "பறவை முனியம்மா காலிங்" என்று ரிங் டோனியது. நான் குழம்பி புருவம் உயர்த்தவம் என் மகள் சட்டென வந்து ஃபோனைப் பிடுங்கி, "அது என் ஃபிரென்டுக்கு நான் வைத்த காலர் ஐ டி டாடி" என்று சொன்னது.

ஆஹா அடுத்து ஆய்வு "ரிங் டோன் மற்றும் காலர் ஐ டி" பற்றியதாக இருக்கட்டுமே என்று செய்தி சேகரிக்க துவங்கினேன்.

சபீர்
-Sabeer

18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என் அலுவலக பாஸுக்கு ரிங்க் டோன் ஃபைர் அலாரம்தான் ! அழைப்பை எடுத்த பின்னர்தான் தெரியும் ஃபைரிங்கா / இல்லே நைஸ் ஹியரிங்கான்னு !

---------------------

இன்றைக்கு அத்தியாவசியமாகிவிட்ட செல்போன் எல்லோர் கைகளிலும் தவழ்வது குறித்து நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால், முக்கியமான வேலையை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, அயர்ந்திருக்கும்போது, யார் பேச்சையாவது கவனித்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது, பஸ் மற்றும் ரயில் பயணங்களில் மெள்ள தூக்கத்தை எட்டிப் பிடிக்கும்போது சத்தமான ரிங் டோன் மூலமும், அதைவிட சத்தமாகப் பேசுவதன் மூலமும் பிறத்தியாரைத் தொந்தரவு செய்யும் நபர்களிடம் இருந்து செல்போனை மட்டும் அல்லாது, அவர்களின் ரேஷன் கார்டையும் அரசு பிடுங்கிவிட வேண்டும்.

முன்பெல்லாம் எல்லா தொலைபேசி எண்களையும் ஒரு சின்ன டைரியில் எழுதி பாக்கெட்டில் வைத்திருப்போம். தெரிந்த நாண்பர்கள் போன் பண்ண வேண்டியனின் பேரைச் சொல்லி தொலைபேசி எண் கேட்டால், டைரியைப் பார்க்காமலேயே சொல்வேன். 'எதுக்கும் சரியா பார்த்துச் சொல்லுடான்னு’ என்பர். அதற்கு அவசியமே இல்லாமல் உறுதியாகச் சொல்லும் அளவுக்கு மனப் பாடமாக அறுபதுக்கும் மேற்பட்ட எண்கள் வரை நினைவில் இருந்தன. சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு கூட்டுக் காரன் என் அலைபேசி எண்ணைக் கேட்டார். 'ஒரு நிமிஷம்’ என்று சொல்லிவிட்டு, என் TOUCHPAD அலைபேசியில் முதலில் என்-ஐ அழுத்தி போட்டு, நான் பதிவு செய்துவைத்து இருக்கும் என்னுடைய எண்ணைத் தடவித் தேடினேன் (எந்த நம்பரைச் சொல்வதென்று தினறலாக)...

ROYAL SON 4 said...

அஸ்ஸலாமு அலைக்கும் 3 வருடமுன் நான் எழுதிய நாட்டுபுறகவிதை இது.
Thursday, August 7, 2008
இனி ஒரு விதி செய்வோம்
ஆத்தா தவறிட்டா!
அய்யப்பனுக்கு காதுகுத்து!
டூரிங் டாக்ஸீயிலெ புதுபடம்!பலான,பலான இத்தியாதிகள்!
(எத்தன வித தகவல் ,பேச்சு,காட்டு கத்தல்)
எப்படா ஒளியும் இந்த செல்லு போனு?
இனி எம் மவன் காலதிலேயாவது இத ஒளிக்க விதி செய்வோம்!
விஞ்சான ராசாகளா ஏதாவது செய்யுங்களே.
அளவுக்கு மிஞ்சினா அமுதமும் விசதாங்கோ!
விஞ்சான வீரிய வளர்ச்சி இப்ப காதுகுள்ள ஓனான்.
------தபால் காரன்
crown.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மேஜர் ஆப்ரெசன் செய்த தழும்பு மாதிரி அலைபேசி,
கண்டிப்போன காய்பழம் ஒத்த அலைபேசி,
அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அலைபேசி
கிர்கிர்னு கூச்சம் காட்டுர வைப்ரேசன் குஜாலா
---------------வர்ணனை இதெல்லாம் பார்த்தா வெந்நீர் ஒத்தடத்தை ஒத்து போகுது.0097150க்கு அப்பரம் தெரிந்தால் நாங்களும் குஜாலா கொஞ்சம் பண்ணலாமே! ஆக அவசியபேசி குசும்புக்கும் உதவுதூன்டு சொல்ல வந்திருக்கியோ!

ZAKIR HUSSAIN said...

பூட்டியிருந்த என் பக்கத்து வீட்டில் திருட்டு போய்விட்டதை வீட்டு உரிமையாளர் மகனுக்கு நான் தெரிவிக்க அழைக்கும்போது ஒலித்த காலர் ரிங் டோன் " மாப்பு...மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு"

என்னே ஒரு சிட்சுவேசனுக்கு தகுந்த ரிங் டோன்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அலைந்து கொண்டு பேசுவதால் “அலை பேசி”யாக இருக்குமோ?

அலைபேசிப் பைகளுக்கு கட்டப்பட்ட குஞ்சங்களைவிட, சபீர் கட்டுரைக்குக் கட்டிய குஞ்சங்கள் கொஞ்சம் அதிகம்.

உமர்தம்பிஅண்ணன் (வாவன்னா)

Yasir said...

அலைபேசியை இப்படி அநியாயத்திற்க்கி வறுத்து எடுத்துட்டீங்களா....சூப்பர் விகட காக்கா

Yasir said...

///காலர் ரிங் டோன் " மாப்பு...மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு" //// ஹாஹாஹா சூப்பர்

ஜாகிர் ஹீசைன் said...

//உங்களுக்கு நம்பிக்கை வரனும்னா 00......என்கிற என் அலைபேசிக்கு ஃபோன் பண்ணிப் பாருங்களேன், கொஞ்ச நேரம் உங்களை கூச்சம் காட்டவிட்டுத்தான் ஃபோனை எடுப்பேன்.//

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அழகான அலைப்பேசி கட்டுரைதான் இருந்தாலும் அனியாயத்திற்கு உங்கள் நண்பர்களை திக்குமுக்காடவைக்கக்கூடாது காரணம் தாங்களை அழைக்கும்போது அவசரமாக இருக்கலாம் அல்லது முக்கிய செய்தியாக இருக்கலாம் இன்னும் எடுக்கவில்லையே என்று நினைத்து திட்டவும் செய்யலாம் ஆதலால் திட்டுவாங்காதீர்கள் உடனே எடுக்கவும்,கூச்சம் காட்டாதீர்கள் கூசுது அன்புடன்

Ahamed irshad said...

சூப்ப‌ர் க‌ட்டுரை காக்கா.. அருமை அருமை..

Shameed said...

இன்னும் ஒருசிலர் பச்சை பட்டன் மற்றும் சிவப்பு பட்டன் இது இரண்டையும் தவிர வேறு எந்த பட்டனையும் பயன்படுத்துவதில்லை.

sabeer.abushahruk said...

என் நண்பர் பத்குதினின் வாப்பா மறைவு எனக்கு என் வாப்பாவை நினைவுபடுத்த அந்த தருணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன் ( அவர்கள் குடும்பத்திற்கு இந்த வலியைத் தாங்கும் பொறுமையை அல்லா தருவானாக. இன்னா லில்லாஹி வ இன்ன அலைய்ஹி ராஜிஊன்.)

 தருணங்கள்...!

வாப்பா,
போய்ட்டீங்க...
மீண்டும் போய்ட்டீங்க...
எங்களை தவிக்க விட்டுட்டு
போய்ட்டீங்க...
இம்முறை-
எத்தனை முயன்றாலும்
மீட்க முடியாத இடம்...
எவ்வளவு நடந்தாலும்
தொடர முடியாத தூரம்!

அழுவது ஆணுக்கு அழகல்ல-
அழுவது நானல்ல...
என் உயிர்!

எத்தனை கனவுகள்
தேங்கிய கண்களை...
அத்தனை அருகில் தேடியும்-
வெற்றுப் பார்வையோடு
ஒற்றையாய் நீங்கள்!

சற்றேனும் கவனமின்றி
சிறு பிரயாசையுமில்லாத
அனிச்சை சுவாசம்
எங்கோ பிழைத்து
மூச்சு
இழுத்து விடுவது
இத்தனை சிரமாக
மாறிப்போயதா?

ஆவி பிறிவதை - மிக
அருகில் பார்த்தேன் - உங்கள்
ஜில்லிட்ட விரல்கள்
பற்றிக்கொண்டே...!

வாழ்வியல் தத்துவத்தின்
தவிர்க்க முடியா தருணங்களை
இத்தனை விளக்கமாய்...
இதுவறை கற்றதில்லை!

உங்கள்...
இறுதி மூச்சுக்காற்றை
என் -
சுவாசமாய் இழுக்க...
அசைவற்றுப் போனீர்கள்!

போய்ட்டீங்க என
கதறிய
சொந்த பந்தங்களின்
சப்தங்களினூடே...
கேட்டதா உஙகள்
மகனின்
உயிர் அழும் ஓசை?!

உங்கள்
மரணம் சகித்து...
குளிப்பாட்டி...
நறுமணமூட்டி...
கோடித்துணி போர்த்தி...
கட்டிலிலிட்டு...
காண விரும்பாத காட்சியாய்-
உஙகள் கோலம் கண்டு...
போய்ட்டீங்களே வாப்பா!

நீங்கள் போட மறந்த
உங்கள் செறுப்பணிந்து...
நீங்கள் நடக்க மறந்த
நடை நடக்கிறேன்...
உங்களுக்கு மிக அருகில்...
இறுதி ஊர்வலத்தில்!

அடக்கம் செய்து
அடக்க முடியாத
அழுகையோடு
திரும்பி நடக்கிறேன்...
மயானம் விட்டு...
போய்ட்டீங்களே வாப்பா!

வந்தது வாழ்ந்தது...
தொட்டது விட்டது...
எல்லாம் அற்றுப்போய்
காற்றுக் குமிழியென...
வெடித்துப் போயிற்று உயிர்!

மயாணத்தில்
கற்றுக்கொண்ட பாடத்தோடு
எஞ்சிய நாட்களை வாழ
இதோ நான்!
                                                                             -பாவா சாகிப் சபீர் அகமது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

|||| இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.. |||

கவிக் காக்கா:

உணர்வுகளின் வலி..
உசுப்பிவிட்டால் மட்டும் தெரியாது..

உசுரை விட்டவங்களுக்கும் தெரியாது..
உசுரோடிப்பவங்களால் மட்டுமே விம்ம முடியும்.. !

//உங்கள்...
இறுதி மூச்சுக்காற்றை
என் -
சுவாசமாய் இழுக்க...
அசைவற்றுப் போனீர்கள்!//

உணர்வை தொட்டதோடு மட்டுமல்ல உசுப்பி விட்டுடுச்சு வப்பாவின் நெனப்பு!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உருக்கமான கவிமூலம் எல்லாரையும் உருக்கவைத்துவிட்டீர்கள்.நாயன் உங்களுக்கும் குறிப்பாக உங்க நண்பர் குடும்பத்திற்கும் சபூர் செய்யும் மனதை கொடுத்து அவனிடம் சேர்ந்துவிட்ட அன்னாருக்காக இறைஞ்சுவோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

ஒரு சிலர் அலைப்பேசியில் அறுத்தெடுப்பார்கள். ஆனால் அறுத்தெடுக்கும் அலைப்பேசியை வறுத்தேடுத்திட்டியலே.

சூப்பர் காக்கா...

காலர் ரிங் டோன் காமெடி அருமை ஜாஹிர் காக்கா...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சபீர் காக்கா...

தொடர்ந்த பின்னூட்டத்தில் உருக்கமான வரிகளால் எல்லோரையும் சில நிமிடங்கள் உருகவைத்துவிட்டீர்கள். உங்கள் நண்பரின் தகப்பனார் அவர்களின் ஆஹிரத்து நல்வாழ்வுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

ஸாதிகா said...

அலைபேசியைப்பற்றிய அலசல் அருமை.

sabeer.abushahruk said...

சார், அப்படீன்னா இந்த அலைபேசி மற்றும் உள்ளங்கையில் உலகம் எல்லாம் ஒரு காலக்கட்டத்தில் "தொலை"த்துவிடும் என்பதால்தான் டெலிஃபோன் "தொலை"பேசியானதோ?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் அவசியம் படிக்க சமூக எல்லை தாண்டும் பயங்கரவா(வியா)திகள்.
http://adiraixpress.blogspot.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு