Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறக்க முடியா மனிதர் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2011 | , , ,

‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது!

‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை (அக்டோபர் 2ம் தேதி) ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன்.


“The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த சிறந்த மனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக்கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ்வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்!


60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது!

அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் பள்ளிவாசல்களில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடுநிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.

காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது! S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.


கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன்முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார்!

1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம்! அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன! பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது! 

தொடரும்...

ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்


13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார்!///

தாளாளர் அவர்கள் என்றுமே தளராதவராகவே இருந்தார்கள் !

இன்றைய இளையவர்களுக்கும் அதிரை கல்வித் தந்தையின் வரலாற்றினை திரும்பிப் பார்க்க வைக்கும் நிகழ்வுகளை பகிர்ந்திட மற்றும்மொரு குறுந்தொடர் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம்மூரின் மகத்துவத்திற்குரிய கல்விஅறக்கட்டளை,மற்றும் அதன் மாவளர்ச்சியின் வித்தகர் மாமனிதர் SMS அவர்கள் பற்றிய நல்ல நினைவூட்டல்.

இன்று சேர்மன்கள் போட்டியென்று வந்து பலர் வந்தாலும் என்றுமே பெயர்பெற்ற நிரந்தர சேர்மன்வீடு என்ற பெருமை மாமனிதர் S.M.S. அவர்கள் வீட்டையே சாரும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு அசாத்திய மனிதரைப்பற்றி தொடர். இக்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ளக்கூடியது அவசியம். ஹாஜாமொய்தீன் சார் அவர்களின் கைவண்ணத்தில் ,கண்ணிய எண்ணத்தில் மிளிரபோகும் காவியம் இது.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

இவ்வளவுக்கும் பின்னால் இருந்தது, S.M. முகம்மது ஃபாரூக் என்ற செயல் இயந்திரம்! அது ஒரு மாய மந்திரம்! காந்தமாய் இழுக்கும் காந்தார ஓவியம்! சாந்தமாய்ப் பேசும் சந்தனப் பேழை! கல்லூரியின் காசுப் பெட்டி! தாம்பூலத்தைச் சிவக்க வைக்கும் காசுக் கட்டி! கணக்கைச் சுமந்தும் கணம் ஏறாத தலை! பிணக்கைப் போக்கும் குணம் மாறாத கலை! தமிழ் இணைய அறிஞரின் மச்சான் ஆவார்! எங்கள் குடும்பத்தின் அச்சாணி ஆவார்! செயல் வீரத் தாளாளரின் பிளஸ் பாயின்ட் அவர்! எஸ், சார்! அவர் கல்லூரியின் பர்சார்!

-வாவன்னா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரை கல்வி தந்தை SMS அவர்களின் கல்வி சேவையை ஞாபகப்படுத்தி எல்லோரும் கல்வி சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது இந்த பதிவு.

இந்த நல்ல மனிதரை மீண்டும் நினைவுபடுத்திய ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T., அவர்களுக்கு மிக்க நன்றி.

மீண்டும் ஒரு SMS அதிரைக்கு தேவை..

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

நன்றி மறப்பது நன்றன்று !

-வாவன்னா

Yasir said...

மறக்கமுடியாத மனிதர் ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் அவர்களுக்கும்
மறுக்கமுடியாத மனிதர் S.M. முகம்மது ஃபாரூக் அவர்களுக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தை கபூல் ஆக்குவானக ஆமீன்

sabeer.abushahruk said...

//நன்றி மறப்பது நன்றன்று !//
ஆமாம் சார்.

KALAM SHAICK ABDUL KADER said...

மூன்றெழுத்துக்குச் சொந்தாமான்வர் SMS அவர்களைப் பற்றிய நினைவலைகளை எழுப்பிய என் மரியாதைக்குரிய ஆசான் அவர்களும் மூன்றெழுத்துக்குச் சொந்தக்காரர் SKM. தேசத் தந்தை பிறந்த நாளில் இந்த கல்வித் தந்தையின் நினைவு நாளும்; கல்விக் கண் திறந்த காமராஜர் நினைவு நாளில் இந்தக் கல்வித் தந்தை அவர்களை நினைவு கூர்வதும் ஆகப் பொருத்தம். 1974ல் அடியேன் மாணவர்த் தலைவனாகப் பொறுப்பேற்ற வேளையில் (கா.மு.உ.பள்ளியில்) அன்னாரை அடிக்கடிச் சந்தித்து உரையாடும் வாய்ப்புகள் பல ஏற்பட்டன. அவர்களின் அமைதி, அன்பு, ப்ரச்னைகளை உள்வாங்கிக் தீர்வு காணும் பக்குவம் யாவும் இன்றும் என் நினைவலைகளில் ஓடுகின்றன. “சேர்மன்” வாடி என்ற பெயர் நிரந்தரமாக இருக்க அவர்களின் வாரிசுகளில் யாரேனும் உள்ளாட்சித் தேர்தலில் சேர்மன் பதவிக்கு நின்றிருக்கலாம்.

அதிரை என்.ஷஃபாத் said...

அரிய புகைப்படங்களைப் பதிந்தமைக்கு ஆயிரம் நன்றிகள்!!

அப்துல்மாலிக் said...

அரிய புகைப்படங்கள், இவையனைத்தையும் ஃபிரேம் போட்டு வருங்கால சந்ததியினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும், மேலும் பள்ளிப்பாட புத்தகத்தில் இவர்களின் வரலாறு இடம்பெற ஆவனம் செய்யவேண்டும்..

அதிரை என்.ஷஃபாத் said...

"தொடரும்." - என்ற வார்த்தையைப் பார்த்ததும் சந்தோஷம் தொற்றியது.. தொடரட்டும். காத்திருக்கின்றோம் "பாடம்" படிக்க.

KALAM SHAICK ABDUL KADER said...

//இவ்வளவுக்கும் பின்னால் இருந்தது, S.M. முகம்மது ஃபாரூக் என்ற செயல் இயந்திரம்! அது ஒரு மாய மந்திரம்! காந்தமாய் இழுக்கும் காந்தார ஓவியம்! சாந்தமாய்ப் பேசும் சந்தனப் பேழை! கல்லூரியின் காசுப் பெட்டி! தாம்பூலத்தைச் சிவக்க வைக்கும் காசுக் கட்டி! கணக்கைச் சுமந்தும் கணம் ஏறாத தலை! பிணக்கைப் போக்கும் குணம் மாறாத கலை! தமிழ் இணைய அறிஞரின் மச்சான் ஆவார்! எங்கள் குடும்பத்தின் அச்சாணி ஆவார்! செயல் வீரத் தாளாளரின் பிளஸ் பாயின்ட் அவர்! எஸ், சார்! அவர் கல்லூரியின் பர்சார்!//

ஓவியம் தீட்டும் கரங்களின்
காவியம் படைக்கும் வரிகள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.