Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு” 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2011 | , , , ,

கிசு….. கிசு…..  இது உங்கள் காதுகளுக்கு மட்டுமே இந்த பிசு பிசு...!

'அழுக்கு' நல்லது !

உங்களில் எத்தனை பேர், பட்ஸ் அல்லது பின்னைக் கொண்டு காதில் உள்ள அழுக்கை எடுத்து சுத்தப்படுத்துகிறீர்கள்? அல்லது நம்மூரில் அந்தக் காலத்தில் செய்வதுபோல கோழி இறகை விட்டுக் கண்கள் சிறுக சொக்கிப்போய் குடய்கிறீர்கள்?

'நான்.. நான்...' என்று உற்சாகமாக யாரெல்லாம் காது குத்துக்கிறீர்களோ ஸாரி.. .கைதூக்குகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு குட்டு, சுத்தம் என்ற பெயரில் காதுக்குள் நீங்கள் செய்யும் கலவரத்தால் சேதாராம்தான் ஏற்படுமே தவிர, உங்களின் நோக்கம் நிறைவேறாது.

அப்படியானால் காதுக்குள் இருக்கும் அழுக்கை எப்படி வெளியேற்றுவது? முதலில் அதை அழுக்கு என்று சொல்வதே தவறு. குரும்பி என்று பொதுஜன வழக்கில் அழைக்கப்படும் அந்தப் பொருள், ஒருவகையான மெழுகு போன்றது. அழுக்கு என்று நாம் நினைக்கும் இந்த மெழுகுதான் காதின் அரோக்கியத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, செவிப்பறையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம்போல் இது செயல்படுகிறது.

காது மடலில் இருந்து செவிப்பறை நோக்கி நீளும் பாதையில் சில தனித்தன்மை வாய்ந்த சுரப்பிகள் உள்ளன. அவைதான் காது மெழுகை உருவாக்குகின்றன. காதுக்குள் நுழையும் தூசிகளையும், அழுக்குகளையும் இந்த மெழுகு தன்னிடம் உள்ள ஈரப்பசையின் மூலமாக, தன்னுள் ஒட்டவைத்துக் கொள்கிறது. அதாவது, செவிப்பறையைத் தூசுகள் எட்டிவிடாமல் மெழுகு பாதுகாக்கிறது.

அது மட்டுமல்ல, காதுக்குள் இந்த மெழுகுப் படலம் பரவி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது. அதாவது, எண்ணெய்ப் படலத்தின் மீது தண்ணீர் ஒட்டாது இல்லையா? அதுபோல், மெழுகின் மீதும் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. மெழுகு இல்லாமல் போனால், காதுக்குள் உள்ளதோல் பகுதியில் தண்ணீர் பட்டுப் பட்டு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக, ஓரளவு மெழுகு உருவானவுடனேயே அது உலர்ந்து தானாக வெளியே வந்து விடும். கூடவே, தூசிகளும் அழுக்குகளும்கூட அதனுடன் ஒட்டிக் கொண்டு வெளியேறிவிடும். காதுக்குள் இருந்து வெளிப்புறம் நோக்கி மெழுகு நகர்வதற்கான அமைப்பு இயல்பாக இருக்கிறது.

ஆனால், இது தெரியாமல், காதை சுத்தப்படுத்த நாம் முயற்சி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. சுருளாக்கப்பட்ட துணி அல்லது பேப்பரை காதுக்குள் செருகிக் குடையும்போது மெழுகு வெளியேறுவதற்குப் பதிலாக உள்புறம் சென்றுவிட நிறைய வாய்ப்பு உண்டு. இதனால், காது அடைத்துக் கொள்ளலாம். நாளடைவில், இந்த மெழுகு மிகவும் இறுகிப் போகும்போது காது கேட்கும் தன்மைகூட பாதிக்கப்படலாம். அப்புறம், ஏழு கட்டை இ.எம்.ஹனீஃபாகூட பாடினால், பஸ்ஸில் பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் புது மனைவியின் கிசுகிசுப்புப் போல்தான் கேட்கும்.
மெழுகினால் காது எப்படி அடைபடும் என்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியல் இடலாம்.
  • மடிக்கப்பட்ட துணி, மெல்லிய குச்சி போன்றவற்றால் நாமே மெழுகை நீக்க முயற்சிப்பது.
  • சில சமயம், தானாக மெழுகு மிக அதிகமாக உருவாவது.
  • வெளிக் காதின் பாதை குறுகிவிடுவதன் காரணமாக மெழுகு வெளிப்படுவதில் தடை ஏற்படுவது.
  • மெழுகின் அசாதாரண பண்பு காரணமாக, காதின் துவாரச் சுவர்களில் வந்து ஒட்டிக் கொள்வது.

செவித் துவாரத்தின் சுவருக்கும் மெழுகுக்கும் நடுவே மிக மெல்லிய இடைவெளி இருந்தால் கூட கேட்கும் சக்தி குறைந்துவிடாது. ஆனால், குளியல் அல்லது முகம் கழுவுதல் காரணமாக தண்ணீர் உள்ளே சென்றால் அது அந்த மெழுகை வீங்கச் செய்துவிடலாம் அல்லது எஞ்சியிருக்கும் கொஞ்சம் இடைவெளியை அந்தத் தண்ணீர் அடைத்துக் கொண்டுவிடலாம்.

இந்த நிலையில், அந்தக் காதின் சொந்தக்காரருக்கு அவரது குரலே எதிரொலிபோல் கேட்கும். காதுகளில் ஒருவித ரீங்கார ஒலி கேட்கும்.

வெளிக்காதில் உள்ள அழுக்கை, சுத்தமான துணியில் ஒருவிரலை நுழைத்துக் கொண்டு சுத்தம் செய்யலாம். மாறாக, காதுக் குழாய்க்குள் எதையும் நுழைக்க வேண்டாம்.

காது மெழுகு தானாகவே வெளியேறிவிடும் என்றோம். ஆனால், அபூர்வமாக சிலசமயம் அது கட்டிதட்டிப் போகலாம்.

அப்போது டாக்டரிடம் சென்றால் சொட்டு மருந்தை உள்ளே செலுத்துவதன் மூலம் உலர்ந்த மெழுகைக் கரைத்த பிறகு, கருவிகளின் மூலம் மெழுகை எடுத்துவிடுவார்.

சிரிஞ்ச் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சியும் எடுப்பது உண்டு. ஆனால், செவிப்பறையில் சிறிய ஓட்டை விழுந்திருந்தாலும் டாக்டர் இந்த முறையைப் பயன்படுத்தமாட்டார். மெழுகும் அழுக்கும் செவிப்பறைக்குள் சென்றுவிட வாய்ப்பு உண்டே!.

காதுக்குள் அளவுக்கு அதிகமாக மெழுகு அடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

  • காதுகளில் சத்தம் கேட்கும். சத்தம் கேட்டாத்தானே காது என்றெல்லாம் வியாக்கியானம் பேசக்கூடாது. இது வேறுவிதமான சத்தம்
  • காதுகளில் அதீத வலி
  • கேட்கும் சக்தி குறைவதுடன், இந்தக் குறைபாடு அதிகமாகிக் கொண்டே இருப்பது.
  • காது முழுவதும் அடைத்துக் கொண்டது போன்ற உணர்வு தொடர்ந்து ஏற்படுவது.

இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், இங்கே முன்பே குறிப்பிட்டதுபோல், காதை மெழுகு நன்றாக அடைத்துக் கொண்டு, காது கேட்காத தன்மையை உருவாக்கி விடும்.

என்ன?  சொன்னதெல்லாம் காதில் விழுந்ததா?

இப்படிக்கு,
முற்போக்கு கூட்டணி

- அபுஇபுறாஹிம்

17 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கிசு கிசுவின் பிசு பிசு தெரிந்துக் கொள்வது புதுசு புதுசு .நம் இப்றாஹீம் மருத்துவருக்கு பதிலாக .அபூ இப்றாஹிம்.மருத்துவர் வருகைக்கு மிக்க நன்றி. நல்ல வேலை சொரங்கத்திலிருந்து குடைந்து எடுக்கும்
பழக்கம் நமக்கில்லை என்றாலும்.படத்தில் பென்சிலை வைத்திருப்பதை பார்த்ததும்.என் காதில் கொடைவது போல் ஒரு உணர்வு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உட் கட்சிப் பிரிவெல்லாம் உள்ளாட்சித்தேர்த்லில் உருவாகப்போவதை முற்போக்காய்ச்சொல்லிவிட்டீர்கள்.பார்ப்போம் நடப்பதை.

காது அது செயல்படும் விதம் சுபுஹானல்லாஹ்!
காது அது இயங்கும் முறையை எடிடராக்காவாகிய தாங்கள் மருத்துவராக்காவாகி தெளிவாக தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ்!

டவுட்டு! அது என்ன ஏழு கட்டை? எட்டுஎட்டா வாழ்க்கையை பிரிப்பதுபோல் நீங்கள் எதுவும் மனிதனின் தன்மையை வகுத்து வைத்திருகிறீரோ!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அது என்ன ஏழு கட்டை? //

பாட்டுப் படிப்பவர்கள் வந்து பதில் தரட்டுமென்றும் சொல்லி மேடையருகே(கீழே) அமர்ந்து கொள்கிறேன் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அது என்ன ஏழு கட்டை?
பாட்டுப் படிப்பவர்கள் வந்து பதில் தரட்டுமென்றும் சொல்லி மேடையருகே(கீழே) அமர்ந்து கொள்கிறேன் !//

அப்ப சபீர் காக்கா தான் மேடை ஏறனும் என்று மனதில் சொன்னதை நானும் வெளிப்படையாக சொல்லி வழி மொழிகிறேன்

Yasir said...

காதை பற்றி கே(ள்விபடாத)ட்காத பல விசயங்கள்....நான் பட்ஸ் யூஸ் பண்ணியதே இல்லை...காது குடையும் பழக்கமும் இல்லை...

அது சரி கா.மூ.தொ.மருத்துவராக்கா அவர்களே...ஆசிரியர்களும் இன்னும் சிலரும் கண்டிக்கும்போது காதை பிடித்து திருவுவது ஏன் ??

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//காதை பிடித்து திருவுவது ஏன் ??///

காதோடு காதாக பேசாதேன்னு சொல்லாமல் சொல்லும் கிள்ளல் அது !

இப்படியிருக்கலாமோ !

காது கொடுத்துக் கேட்காததினால் காதைக் கேட்டு பிடிச்சு இழுப்பாங்களோ !?

ZAKIR HUSSAIN said...

//குளியல் அல்லது முகம் கழுவுதல் காரணமாக தண்ணீர் உள்ளே சென்றால் அது அந்த மெழுகை வீங்கச் செய்துவிடலாம் அல்லது எஞ்சியிருக்கும் கொஞ்சம் இடைவெளியை அந்தத் தண்ணீர் அடைத்துக் கொண்டுவிடலாம்.//

This is called Fungal infections. நேரம் ஆக ஆக யாரோ காதுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடுகிற மாதிரி விட்டு விட்டு வலிக்கும்.

//சிரிஞ்ச் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சியும் எடுப்பது உண்டு.//

Now a days these methods are not used. They examine with otoscope then thy vacume it if they found any foreign bodies or infectious disposals.


// ஆனால், செவிப்பறையில் சிறிய ஓட்டை விழுந்திருந்தாலும் டாக்டர் இந்த முறையைப் பயன்படுத்தமாட்டார். மெழுகும் அழுக்கும் செவிப்பறைக்குள் சென்றுவிட வாய்ப்பு உண்டே!.//

நிச்சயம் உண்டு என துண்டு போட்டு தாண்டலாம்.

ZAKIR HUSSAIN said...

காதுக்குள் ஊற்றும் ஆன்டிபயோடிக் சொட்டு மருந்துகள் 7 நாட்களுக்கு பிறகும் [ மூடியை முதன் முதலில் திறந்த பிறகு ] பயன்படுத்தினால் மறுபடியும் பிரச்சினை வர வாய்ப்பு அதிகம்.

பிரச்சினை வந்த பிறகு தாமதமாக மருத்துவரை பார்த்தால் அவர் பேசுவது கூட உங்கல் காதில் விழாது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காது கொடையுறதே ஒரு அலாதிதான்னு சொல்றவங்களும் இருக்காங்களே !

என் அலுவலகத்தில் டிரைவர் ஒருவர் அவரது ட்ரக்கின் சாவி உள்ளிட்டு குடைவார் ! கேட்டால் தினமும் ட்ரக் ஓட்டி ஒட்டி அந்தச் சத்ததிற்கு இது சொரிஞ்சு விடுவது மாதிரி இருக்குமாம் !??

இன்னும் சிலர் காதில் விரலை விட்டு மணி அடிப்பார்கள் !

இதெல்லாம் விடுங்க.... இன்னும் என் காதுல ஒரே கொடைச்சல்தாங்க ! டெலிபோனில் கேட்டும் பாஸ் குரல் இருக்கே.... ஆஸ்ஸ்ஸ்ஸ் சரியான கொடைச்சல்... முன்னே ஒரு காலத்தில டி.வி.யை ஆஃப் பன்னா ராஜீவ்காந்தி முகம்தான் தெரியுதுன்னு ஜோக் வந்தது அதேபோல்தான் எங்க பாஸ் பேசுவது தூங்கச் சென்றாலும் கர கர கர தாங்க !

அங்கே எப்படிங்க ?

sabeer.abushahruk said...

ஏழு கட்டை என்றால் என்ன?

ஸ்ருதி, லயம், தாளம், சரிகமபதநி என்றெல்லாம் விளக்கமாச் சொன்னா, ஹதீஸும் கையுமா ரெடியா இருக்கும்  அலாவுதீனிடமிருந்து தப்ப முடியாது. எனவே சுருக்கமா...

ஒலியை டெஸிபலில் அளப்பதுபோல, ஒலியின் உட்பிரிவான இசையை 'கட்டை' என்று குறிப்பர். ஆர்மோனியத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை கட்டைகளுக்கு அளவுண்டு. அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை.

ஈ எம் ஹனீஃபாவின் " திக்குத்திகழ்ந்தமுன் கொண்டாடியே வந்து தீஈஈஈஈன்கூறி நிற்பர் கோடீஈஈஈஈ" ஏழு கட்டை எனில், "பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை கூறுவேன் இதோ" ஒன்றரை ரெண்டு கட்டைத்தான் வரும் என்றால் கட்டை என்றால் என்ன என்று படம் வரைந்து பாகங்கள் குறித்தமாதிரி விளங்கனுமே.

(அபு இபுறாகீம், காத குடுங்க. எனக்கும் ரொம்பவெல்லாம் தெரியாது)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

காது குத்துறது நம்ம பழக்கமில்லைதான்... இருந்தாலும் காது குடையிறவங்க நிறைந்த உலகத்தில்... (குச்சியை விட்டோ அலல்து குத்தும் வார்த்தைகளை விட்டோ)... குடையாதீங்கன்னு சொன்னா யார்தான் கேட்பாங்கன்னு ஊரில் ஒருத்தங்க கேட்டாங்க !

நான் என்ன சொல்ல !?

sabeer.abushahruk said...

மற்ற உட்கட்சிப் பிரிவுகளைப் பற்றி, அதாங்க மூக்கு தொண்டை பற்றியும் விவரமா எழுதலாம்ல?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதாங்க மூக்கு தொண்டை பற்றியும் விவரமா //

ஆமா காக்கா அவங்கள கண்டுக்காம உட்டுட்டா தனித்து கட்சி ஆரம்பிச்சுடுவாங்க... கண்டிப்பாக அவங்களை பற்றியும் எழுதியே ஆகனும் அதுக்கு முன்னாடி ஒரு முக்கிய அறிவிப்பு மு.போ.கூ.யிலிருந்து வர இருக்கிறது காத்திருக்கவும் ! :)

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// எம். ஹெச்.சொன்னது
அப்ப சபீர் காக்கா தான் மேடை ஏறனும் என்று மனதில் சொன்னதை நானும் வெளிப்படையாக சொல்லி வழி மொழிகிறேன். //

என்று சொன்னவுடன்.சிறந்த மேடை பேச்சை கேட்கலாம் என்று ஆவலாய் இருந்தேன்.ஆனால் சபீர் காக்கா அவர்களுக்கு அபூ இபுறாஹிம்அவர்கள் மேடை அருகே அமர்ந்தது வசதியாபோச்சு .காதை கொடுங்க என்று சொல்லி எங்களுக்கு காது குத்திட்டு போறத்துக்கு.

Shameed said...

தம்பிகளுக்கேல்லாம் தம்பியாம் நெய்னாதம்பி காது சம்பந்தமாக காதும் காதும் வைத்தாற்போல் அம்சமாக ஒரு கட்டுரையை போட்டுள்ளார் ,அனைவரும் காது கொடுத்து கேட்கவேண்டிய விஷயம்

அப்துல்மாலிக் said...

ரொம்ப ரொம்ப மிகமுக்கியமான தகவல் பகிர்வுக்கு நன்றி காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு