Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 15 தொடர்கிறது...! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | November 09, 2012 | , , ,

(2) 3.1 பெயர்ப் பகுபதங்கள்
பெயர்ப் பகுபதங்கள் என்பன (1)பொருள், (2)இடம், (3)காலம், (4)சினை/உறுப்பு, (5)குணம், (6)தொழில் ஆகிய ஆறு வகைகளை உள்ளடக்கியதாகும்:

(2) 3.1.(1) பொருட்பெயர்ப் பகுபதம்
ஒரு பொருளை அடிச்சொல்லாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம், பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும்.
காட்டுகள் :
முத்து, மணி, பொன், அமுது ஆகியன பொருள்களின் பெயர்களாகும். பகுதிகளான இவற்றோடு விகுதிகள் சேர்ந்து வரும்போது,
முத்து+அன் = முத்தன் என்றும்
மணி+அன் = மணியன் என்றும்
பொன்+அன் = பொன்னன் / பொன்+னி = பொன்னி என்றும்
அமுது+அன் = அமுதன் என்றும்
பொருட்பெயர்களாக மாற்றம் பெறுகின்றன. இவை பகுத்தக்கனவாக இருப்பதால் பொருட்பெயர்ப் பகுபதங்களாகும்.

(2) 3.1.(2) இடப்பெயர்ப் பகுபதம்
இடத்தைப் பகுதியாகக் கொண்டவை இடப்பெயர்ப் பகுபதம் ஆகும்.
காட்டுகள் :
கருவூர்+ஆர் = கருவூரார்;
உறையூர்+ஆன் = உறையூரான்;
நாஞ்சில்+அன்= நாஞ்சிலன்;
பட்டினம்+ஆர் = பட்டினத்தார்;
உலகு+ஓர் = உலகோர்

(2) 3.1.(3) காலப்பெயர்ப் பகுபதம்
நாள், திங்கள், ஆண்டு ஆகிய காலப்பெயர்களோடு விகுதி இணைந்திருப்பின் அவை காலப்பெயர்ப் பகுபதங்கள் ஆகும். காலப்பெயர்ப் பதங்கள் அரிதாகவே வழக்கிலிருக்கின்றன.
காட்டுகள் :
கார்த்திகை+அன் = கார்த்திகையன் (கார்த்திகேயன்);
ஆதிரை+ஆள் = ஆதிரையாள் (திருவாதிரையில் பிறந்தவள்).

(2) 3.1.(4) சினைப்பெயர்ப் பகுபதம்
உறுப்புகளின் பெயரோடு வருபவை சினை(உறுப்பு)ப்பெயர்ப் பகுபதங்களாகும். இவையும் அரிதானவையே.
காட்டுகள் :
கண்+அன் = கண்ணன்;
குழல்+இ = குழலி (குழல் என்பது இங்குக் கூந்தலைக் குறிக்கும்).

(2) 3.1.(5) குணப்பெயர்ப் பகுபதம்
ஒரு பண்பைப் பகுதியாகக் கொண்டு, அத்துடன் விகுதி இணைந்து வருவது குண(பண்பு)ப்பெயர்ப் பகுபதம் எனப்படும்.
காட்டுகள் :
முருகு+அன் = முருகன் / அழகு+அன் = அழகன்;
கருப்பு+அன் = கருப்பன்;
வெள்ளை+அன் = வெள்ளையன்

(2) 3.1.(6) தொழிற்பெயர்ப் பகுபதம்
தொழிற்பெயரோடு விகுதி சேர்ந்து வருபவை தொழிற்பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.
காட்டுகள் :
கொத்து+அன் = கொத்தன்;
தச்சு+அன் = தச்சன்;
உழவு+அன் = உழவன்.
தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
ஜமீல் M.ஸாலிஹ்

8 Responses So Far:

Unknown said...

பதிவுக்கு நன்றி
பழகு மொழியின் ஆக்கம் பண் மொழியின் ஊக்கம், இலக்கணம் என்றாலே ஏடுகளை எறிந்ததினால் எழுதுவதற்கு எழுத்தில்லை ஏங்குகிறேன். இன்றைய நிலையில் அதிரையில் கவிஞர்கள்,கட்டுரையாசிரியர்கள்,பதிப்பாளர் மற்றும் பண்பட்ட எழுத்தாளர்கள் பெருகி வரும் சுழலில் இவ்வாக்கம் அவசியம் பதிப்புகள் பல பெறவேண்டும்
பண்புகள் படைத்திட வேண்டும்
,,,,,,,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

sabeer.abushahruk said...

வகுப்பு நடந்திட்டிருக்கும்போதே சீக்கிரம் பெல்லடிச்சமாதிரி பாடம் ரொம்பக் குறைவாக இருக்கு.

முடிவில் கேட்கப்படும் கேள்வியையும் காணோம்?

இருப்பினும் வாத்தியாருக்கும் வகுப்புக்கும் நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பள்ளிக்கூடத்துல புதுசா நிறைய வகுப்புகள் ஆரம்பிச்சதால, இலக்கண வகுப்பு பக்கம் யாரையும் கூட்டிகிட்டு போக முடியலை அதான் லேட்டு....

இப்போ அவசியமாகவும் பட்டது, மவுனமாக வாசிக்கு சிலரின் அன்பு கலந்த கண்டிப்பான வேண்டுகோளும் பழகு மொழிக்கு ஒரு பிரியட் ஒதுக்கியே ஆகனும்னு ஹெட்மாஸ்டர் சொல்லிட்டாரு...

இனி தொடரும் இன்ஷா அல்லாஹ் !

Iqbal M. Salih said...

//தன்னிலை விளக்கம் எனபதில், தன்+நிலை புணர்ந்து= தன்னிலை என்று வருவது போல், உன்+நிலை புணர்ந்து உன்னிலை என்று வ்ரலாம் அல்லவா?
இலக்கண அறிஞர்கள் இந்நேரம் உறக்கத்திலிருப்பதால், இனஷா அல்லாஹ் நாளை காலையில் விடைகள் கிடைக்கலாம்//

கவியன்பனின் கட்டுரையிலிருந்து மீராசாவின் கேள்விக்கு, இந்தப் பழகுமொழியின் பகுபதம் மூலம் விடை கிடைத்து இருக்கலாம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

பழகு மொழி பழக பழக அழகாய் இருக்கிறது

Shameed said...

வெள்ளிகிழமையும் அதுவுமா ஒரு ஸ்பெசல் கிளாஸ் நடந்தது போல் உள்ளது

அலாவுதீன்.S. said...

படிக்க இலகுவாக இருந்ததால்
தூங்காமல் படித்து விட்டேன்!
பழகு மொழி - அழகு மொழியே!

عبد الرحيم بن جميل said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

தமிழில் பெயர் எழுதும் பொழுது ஏன் இனிஷியல் மட்டும் ஆங்கிலத்தில்?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு