Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 22, 2012 | ,

அன்புப் பெட்டகமும் ஆசை ஒட்டகமும்: 

வ’ அக்ராஹ்! வ’ நகத்தாஹ்! (ஓ. என் செல்லமே! என் ஆசை ஒட்டகமே!)

நாடோடிகளின் தூதுவர் அலறிப்புடைத்துக்கொண்டு வந்த வழியே திரும்பி ஓடினார்.

ஓ. மதீனா வாசிகளே! என் செல்லமான ஒட்டகம் பலியாக்கப்பட்டுவிட்டது. இனி நான் என்ன செய்வேன் என்று அலறினார்.

இறையில்லத்தில் இருந்து இறங்கி வந்த வேகத்தில், அவரை இதமாய் அணைத்தது ஒரு கரம். அது அண்ணலின் திருக்கரம்! ஆறுதல் தரும் கரம்.

அந்த அருட்கரம் தொட்டதுமே அவர் அமைதியானார். அது எப்படி சாத்தியம்? அந்த கரத்தில் அப்படி என்னதான் இருந்தது?

அந்த இனிய கரம், சாதாரண கரமல்ல! மனித மனங்களையும் மனதின் உணர்வுகளையும் துல்லியமாக நாடிபிடித்துப் பார்க்கத் தெரிந்த உளவியல் மருத்துவரான உண்மைத் தூதரின் கரம்! 

அந்தக்கை, வெருங்கையல்ல! அருள் நிறைந்த கை. அறிவுப் பாதையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய்விட்ட, அறியாமை அந்தகாரம் எனும் அடிப்பாகமே இல்லாத, ஆழ்கிணற்றில் வீழ்ந்து கிடந்த விலங்குகளான அராபியர்களை, ஏகத்துவம் என்ற ஏணி மரம் கொண்டு கரைசேர்த்த கருணை மனிதரின் கை! இம்மையிலும் மறுமையிலும் அனைத்து முஃமின்களுக்கும் ஆதரவான ஒரே நம்பிக்கை!

இந்த இனிய கரங்களுக்குச் சொந்தமானவர் பற்றியே, தூயோன் அல்லாஹ் (ஜல்), உங்கள் தூதர் இடத்தில் "உஸ்வத்துல் ஹஸனா" இருக்கிறது! என்கின்றான். 

ஒரு மனிதன் யாராக இருந்தாலும் சரியே! எத்தகைய சூழலில் அவன் இருந்தாலும் சரியே! எப்படிப்பட்ட தொல்லைகளால் தொடரப்பட்டவனாகவும் சோதனைகளால் சூழப்பட்டவனாகவும் வேதனைகளால் விரக்தியானவனாகவும் இருந்தாலும் சரியே! அந்த சூழ்நிலைகேற்ற "அழகிய முன்மாதிரி"யும் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய பயிற்சி முறையும் அல்லாஹ்வின் அருட்சுடராம் அண்ணல் நபி(ஸல்)யிடம் இருக்கவே செய்தது. இன்றும் வரலாற்றில் அது வாழ்கிறது!

இந்த மகோன்னதமான மாமனிதரின் வாழ்வு,

எடுத்த எடுப்பிலேயே தாயும் தந்தையுமற்ற அனாதையாகவே ஆரம்பமாகியது!

பிறகு, ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீல் முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக, 

நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, எல்லாவற்றுக்கும் மேலாக, தன் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, அத்துடன் "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!

அந்தி மயங்கும் சூரியன் அடிவானில் தஞ்சமடையும் நேரம்.

நாடோடிகளின் தூதுவர், தன் கொழுத்த இளம் ஒட்டகையிலிருந்து இறங்குவதையும் ஒட்டகையை மஸ்ஜிதுன் நபவீக்கு வெளியில் தனியே விட்டபின், அல்லாஹ்வின் தூதரிடம் அரசியல் உரையாட அவர் உள்ளே சென்றுவிட்டதையும் சில கண்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தன. அவை பசியால் பஞ்சடைந்த கண்கள்!

தூக்கிவிட்டால் சுமப்பவர் எவரோ, தூண்டிவிட்டால் துள்ளி ஆடுபவர் எவரோ, அதே அந்-நுஐமான் (ரலி) அப்போது சரியாக வந்து ஆஜரானார்!

நண்பா! நாம் ஒட்டகக் கறி உண்டு எவ்வளவு காலமாகிவிட்டது கண்டாயா? ஒருவர் அங்கலாய்த்தார்!

அந்-நுஐமான் மனது வைத்தால், நாம் இப்போதே அறுத்துப் பொறித்து சுவைத்து உண்ணலாமே என்று உசுப்பேத்தினார் இன்னொருவர். இதோ என்னை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லாமல் சொல்லி அழகாய் அமர்ந்திருக்கிறதே! என்றார் பிரிதொருவர். என்னையும் கொஞ்சம் சேர்த்துக்கொள் தோழா! என்று கெஞ்சினார் மற்றொருவர்!

அர்த்தம் புரிந்துபோனது அந்-நுஐமானுக்கு. நகைச்சுவை நாயகருக்குக் கொஞ்சம் யோசனைதான். இலேசாகத் தயங்கினார்! எனினும் என்ன நினைத்தாரோ, உடனே செயல்பட்டார். கூட்டாளிகள் என்னால்தான் முடியும் என்று இவ்வளவு கெஞ்சுகிறார்கள். இதுகூட செய்யாவிட்டால், நட்புக்கு என்னதான் அர்த்தம் இருக்கிறது! என்று அந்த ஒட்டகையை உடனே போட்டுத் தள்ளிவிட்டார்!

குர்பானி கொடுத்தாச்சி!

நாடோடிகளின் தூதுவர், அரசியல் ஆலோசனை முடித்துக் கொண்டு வெளியே வந்தால், ஒட்டகை நின்ற இடத்தில், அதன் தும்புக் கயிறுதான் கிடந்தது. சற்று தூரத்தில் புத்தம் புது இறைச்சி பொறிக்கப்படும் சுவையான வாசனை மூக்கைத் துளைத்தது.

நாடோடி அரபிக்கு சட்டென்று புரிந்து போனது!

கிளர்ச்சி பொங்க அரற்றி நின்ற அவர் மீது தன் அருட்கரத்தை வைத்த அண்ணலார், அவரை அமைதிப் படுத்திவிட்டு கூட்டத்தைப் பார்த்து கேட்ட கேள்வி!

இதைச் செய்தது யார்?

சப்தம் அடங்கிய சபையிலிருந்து ஒரு குரல் "அந்-நுஐமான்" என்றது. 

எங்கே அந்-நுஐமான்? 

உறவுகளைப் பேணுவதில் அவர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் வேறு எவருமில்லை என்பதாக விளங்கினர் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

தன் அரைச்சோதரியான உம்முஹானி பின்த் அபீதாலிப் (*) மீதும் இன்னொரு அரைச்சோதரியான துபாஹ் பின்த் ஜுபைர் மீதும் தந்தை வழியில் மாமியும் தாய் வழியில் அரைச்சோதரியுமான ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிஃப் மீதும் மிகுந்த சகோதர பாசம் கொண்டிருந்தார்கள்.

அங்கே அந்-நுஐமான் (ரலி) உற்சாகமிகுதியால் ஒட்டகத்தை அறுத்துப் போட்டுவிட்டு, பிறகுதான் அதை உணர்ந்தவராக, இந்த தவறுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற உதறலில் எங்கு போய் ஒளிவது என்று யோசித்துப்பார்க்காமல், கண்ணுக்குக் கிடைத்த ஒரு வாகான தோட்டத்தில் உள்ள பொந்துக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார்.

அந்நியரின் வாகனத்தை அனுமதியின்றி அறுத்துவிட்டோமே! இத்தகு செயலுக்கு என்ன தண்டனையோ என்று உள்ளுக்குள் உதறலெடுத்துக் கொண்டிருந்தது அவருக்கு!

அது அண்ணலாரின் அரைச்சோதரி துபாஹ் பின்த் ஜுபைர் அவர்களுக்குச் சொந்தமான வீட்டைச் சுற்றியுள்ள ஒரு சிறிய தோட்டம்.

பள்ளத்தில் பதுங்கிக் கிடக்கும் அந்-நுஐமான் (ரலி), சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடிவிடக்கூடும் என்ற சந்தேகத்தில், நான் அந்-நுஐமானைப் பார்க்கவே இல்லையே! அல்லாஹ்வின் தூதரே, என்று நயமாக வாயால் சொல்லிக்கொண்டே, கையால் அவர் ஒளிந்து கொண்டிருக்கும் சாக்கடைப் புதரைச் சுட்டிக்காட்டினார் துபாஹ் பின்த் ஜுபைரின் விவேகமான அண்டை வீட்டுக்காரர்.

தன் அரைச் சோதரி துபாஹ் வின் தோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட இடத்துக்குச் சென்று, பேரீத்த ஓலை, இலை தழைகளையெல்லாம் பரபரவென்று அப்புறப்படுத்தித் தோண்டிப்பார்த்தால், கல்லறைப் பிணத்துக்கு உயிர்வந்துவிட்டதுபோல், பயத்தில் முகமெல்லாம் வெளிறிபோய், அந்தக் குறுகிய பள்ளத்திலிருந்து வெளியானார் அந்-நுஐமான் (ரலி). 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒன்றும் முன்கர்’ ருமல்ல! நக்கீர்’ ருமல்லவே!

மனித நெஞ்சங்களிலேயே, பரிவுடன் துடித்த கனிவு மிகு இதயங்களில் தலையாயது அல்லவா நமக்கெல்லாம் நேர்வழி காட்டிய, நானிலம் போற்றும் அந்த நாயகத்தின் உள்ளம்!

உனக்கு ஏன் இந்தப் பரிதாப நிலை அந்-நுஐமான்? அவர் முகத்தை மூடியிருந்த புழுதி, இலைதழை தூசுகளை எல்லாம் துடைத்து விட்டுக் கொண்டே பரிவுடன் கேட்டார்கள் அமைதியின் ஜோதி அண்ணல் நபி(ஸல்)அவர்கள். 

எந்த மனிதர்கள் உங்களை என்னிடம் ஆள்காட்டி அனுப்பி வைத்தார்களோ, அதே ஆட்கள்தாம் என்னை, ஒட்டகையை ஒரு கை பார்க்கச் சொன்னார்கள் யா ரசூலல்லாஹ், என்றார் வெகுளித்தனமாக!

காண்போரின் 'கல்பை'யும் குளிரச்செய்யும் அந்த மதி முகத்தின் மந்தகாசப் புன்னகை மாறாமல், அந்-நுஐமானை மன்னர் நபி (ஸல்)அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அழைத்து வந்தார்கள். 

பாலைவன நாடோடிகளின் தூதுவருக்கு ஆறுதல் சொன்னது மட்டுமன்றி, அவர் இழந்ததைவிட சிறந்த  ஒன்றைப் பகரமாக அளித்தார்கள் 'அன்புப்பெட்டகம்' அண்ணல் நபி(ஸல்)அவர்கள்.

மனமகிழ்ச்சி கொண்டார் அந்த நாடோடிகளின் தூதுவர். இனிமை மிகு மொழியில், அழகுமிகு நடையில், பெருமானாரின் ஈகையை, இரக்கத்தை, ராஜரீகப் பெருந்தன்மையை, தயாள குணத்தை, வீரத்தை, விவேகத்தைப் புகழ்ந்து போற்றினார்!

அந்-நுஐமான்(ரலி)யின் கை பிடித்து, அவரையும் நாடோடி அரபியையும் ஒட்டகைக் கறி விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள் ஓங்குபுகழ் நபிகளார்(ஸல்). தோழர்களுடன் அனைவருக்கும் களிப்புடன் சேர்த்துக் கல்யாண விருந்துபோல் அமைந்தது அன்று! 

ஒட்டகத்தை இழந்தவரும் ஒட்டகத்தை அறுத்தவரும் ஒன்றாய் அமர்ந்து ஒரே மரவையில் உணவுண்ணுவதை ரசித்துப் பார்த்து நின்ற அண்ணலார் அவர்கள், அல்லாஹ்வின் கருணை எண்ணி அர்த்தத்துடன் சிரித்தார்கள்.(**) அதைவிட அதிஅழகு வேறு எங்கு நோக்கினும் இல்லவே இல்லை!

ஆம்! 'அழகின் சிரிப்பு' என்றாலும் 'சிரிப்பின் அழகு' என்றாலும் இந்த இரண்டுமே அந்த ஒருவரையே சுட்டி நிற்கும்!

அவர்தாம் 'அன்புப் பெட்டகம்' அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!

**************************************************************

(*)  உம்மு ஹானி: அலீய் (ரலி) யின் சகோதரியான, மக்காவிலுள்ள இவர் வீட்டில் விருந்து உண்டு தங்கி இருந்த அன்று இரவுதான் அண்ணல் நபிக்கு வியத்தகு விண்ணுலகப் பயணம் (மிஃராஜ்) நிகழ்ந்தது.

(**) உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் . நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்’களை (வசனங்களை) உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (அல்-குர்ஆன் 3:103)

தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

20 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ் !

வியாழக்கிழமை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அற்புதமான தொடர்.

இந்த கட்டுரையே புதுமை அதிலிருப்பதும் எனக்கு புத்தம் புதுசாக இருக்கிறது.

Yasir said...

மன அமைதியும்,மகிழ்ச்சியும் தரும் தொடர் இத்தொடர்,பொருத்தமான வர்ணனைகளும்,வண்ணங்களும் நம் இறுதி நபி(ஸல்)க்கு அணிவித்து அழகு பார்க்கும் வித்தியாசமான எழுத்து நடை...வாழ்த்துக்கள் காக்கா..தொடருங்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரிய அழகு வாழ்க்கை முறைகள்!
ஜஷாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

////ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீல் முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக,

நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, எல்லாவற்றுக்கும் மேலாக, தன் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, அத்துடன் "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!////
************************************************************

நமது தலைவர் நபி(ஸல்) அவர்களின் குணாதியசங்களைப் பற்றிய உண்மையான வர்ணணைகள்:

மாஷா அல்லாஹ்!
மன மகிழ்வைத் தரும்
அழகிய எழுத்து நடை!
வாழ்த்துக்கள் சகோ. இக்பால்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்காவின் எழுத்து நடை எங்களுக்கு பயிற்சி மட்டுமல்ல பாடமும் இருக்கு !

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

அலாவுதீன் காக்கா தாங்கள் சுட்டிக்காட்டியதை நானும் திரும்பத் திரும்ப வாசித்தேன் ரசித்தேன் ! அருமை !

Unknown said...

மாமனிதர், உலகம் போற்றும் உத்தம நபியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை வாரம்,, வாரம் படிப்பது மனதுக்கு நிம்மதியை தருகிறது.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

sabeer.abushahruk said...

இதோ இன்னுமொரு அத்தியாயம். எல்லாம் வித்தியாசம்.
ஆட்டயப்போட்ட அந்நுஐமன் (ரலி) அவர்களின் பயத்தைச் சொல்லும்போதும் அவர்கள் மறைந்திருந்த விதத்தைச் சொல்லும்போதும் துள்ளிசெல்லும் மொழி அண்ணலாரைப்பற்றிச் சொல்லும்போதெல்லாம் செம்மொழியாகிப்போகிறது.

தமிழறிஞர்களும் கலைஞர்களும் தத்தமது எண்ணங்களை அலங்கரிக்க மொழியின் உதவியை நாடுவர். நீயோ தமிழ் மொழியானது தன்னை அலங்கரித்துக்கொள்ள உன் எண்ணங்களைத் தந்துதவுகிறாய்.

நன்பா
என்னிடம் ஏதும்
சொல்ல நினைத்தால்
இனி
என்னுடன் பேசாதே
என்னுடன் எழுது!

sabeer.abushahruk said...

//நன்பா//

ஒற்றைச்சுழிக்காரன் உனக்கு
தவறுதலாக
ரெட்டைச்சுழி போட்டுவிட்டேன்
அதை
மூன்று சுழுயாக்கி
நண்பன் என்று திருத்திக்கொள்

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//நன்பா//

ஒற்றைச்சுழிக்காரன் உனக்கு
தவறுதலாக
ரெட்டைச்சுழி போட்டுவிட்டேன்
அதை
மூன்று சுழுயாக்கி
நண்பன் என்று திருத்திக்கொள்.
--------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆறுஓடயில்(ஓடை=ஆறு)
வருமே சுழி!அந்த ஆறு ஆழியில் சேர்ந்ததும் பெறும்,பெரும் சுழி!இப்படி எழுத்து ஆறாகி பின் ஆழியில் அடங்கினாலும் அழியாத சுழியாக இருப்பது உங்கள் இருவரின் நட்பும்,எழுத்தின் சுவையும்.மனதுக்கு ''ஆறு'தல்.




crown said...

நன்பா
என்னிடம் ஏதும்
சொல்ல நினைத்தால்
இனி
என்னுடன் பேசாதே
என்னுடன் எழுது!
--------------------------------------------------------------
கவியரசே!எளிதாக உங்கள் பலமான நட்பை கவிதையாகவே சொல்லிவிட்டீரே! சில வார்தை சொன்னால் காற்றில் போய்விடும்,எழுதினால் மனதில் பதிந்திடும்.அவரின் ஆற்றலையும், நட்பின் ஆழத்தையும் சும்மா இலகு வரி கொண்டு எழுதிய அழகு கவிதை மேற்கண்டவை!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இக்பால் காக்கா இந்த ஆக்கத்தின் மூல புத்தகம் ஆங்கிலத்தில் இருப்பதை என்னிடம் காட்டினார்கள் . அதிலிருந்து மொழி மாற்றம் செய்து எழுதினாலும்,ஆங்கிலத்தையும்,தமிழையும் இப்படி அழகுற ஆளத்தெரிந்திருப்பதாலேயே இந்த தொடர் மேலும் அழகாய் இருக்கிறது. நம் தலைவர்(ஸல்)அவர்களைப்பற்றி எழுதும் போது அது தானாகவே அமைந்துவிடும் சிறப்பு ஒரு வரம்

sabeer.abushahruk said...

//அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆறுஓடயில்(ஓடை=ஆறு)
வருமே சுழி!அந்த ஆறு ஆழியில் சேர்ந்ததும் பெறும்,பெரும் சுழி!இப்படி எழுத்து ஆறாகி பின் ஆழியில் அடங்கினாலும் அழியாத சுழியாக இருப்பது உங்கள் இருவரின் நட்பும்,எழுத்தின் சுவையும்.மனதுக்கு ''ஆறு'தல்.//

வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன். நலம்தானே?

சின்ன 'ன' பெரிய 'ண'வில் உள்ள சுழிகளைப்பற்றிப் பேசினேன், ரெண்டு சுழி, மூன்று சுழி என்று. நீங்களோ நாலாவது சுழியாக நட்பைச் சொல்கிறீர்கள்.

இனி, "நண்பா" என்று யாரையும் விளிக்க, நான் மூனு சுழி "ண்" எழுதனுமா நாலு சுழி "n" எழுதனுமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"N" ன்னிடமா சொல்றீங்க ?

N ன்னின் விருமினாலுமா ?

இப்னு அப்துல் ரஜாக் said...

மாமனிதர், உலகம் போற்றும் உத்தம நபியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை வாரம்,, வாரம் படிப்பது மனதுக்கு நிம்மதியை தருகிறது.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

KALAM SHAICK ABDUL KADER said...

//இந்த மகோன்னதமான மாமனிதரின் வாழ்வு,

எடுத்த எடுப்பிலேயே தாயும் தந்தையுமற்ற அனாதையாகவே ஆரம்பமாகியது!

பிறகு, ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீல் முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக,

நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, எல்லாவற்றுக்கும் மேலாக, தன் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, அத்துடன் "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!//
ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

Canada. Maan. A. Shaikh said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ்..


உலகம் போற்றும் உத்தம நபியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை வாரம்,, வாரம் படிப்பது மனதுக்கு நிம்மதியை தருகிறது.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.. தாங்கல் பனி தொய்வின்ட்ரி தொடர எல்லம் வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக ஆமின்.

மான்.A.ஷேக்

Unknown said...

இந்த மகோன்னதமான மாமனிதரின் வாழ்வு,


எடுத்த எடுப்பிலேயே தாயும் தந்தையுமற்ற அனாதையாகவே ஆரம்பமாகியது!


பிறகு, ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீல் முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக,


நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, எல்லாவற்றுக்கும் மேலாக, தன் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, அத்துடன் "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!

----------------------------------------------------------------
நபி (ஸல் ) அவர்களின் எண்ணிலடங்கா ஆளுமையை அடிப் பிறழாமல் மேற்சொன்ன அழகு வரிசையின் வசீகரம் மிகவும் கவர்ந்தது .

Iqbal M. Salih said...

பின்னூட்டத்தில் கருத்திட்ட அன்புச் சகோதரி அவர்களுக்கும்,

அன்பான சகோதரர்கள்: அலாவுதீன்,அபுஇப்றாஹீம்,அப்துர்ரஹ்மான், அப்துல்லத்தீஃப், இம்ரான், கவியன்பன் கலாம், கனடா ஷைக் ஜலாலுத்தீன், சபீர், தஸ்தகீர், ஜஃபர் ஸாதிக், யாசிர் ஆகியோருக்கும் நன்றிகள்.

சகோ. யாசிர்: சமீபத்தில் நமது பிலால் இப்னு ரபாஹ்(ரலி) அவர்களின் நாடு சென்று வந்தீர்களே! பிலால்(ரலி) அவர்களைப்பற்றி அங்கு ஏதும், இன்னும் நினைவுகூறப்படுகின்றதா?

Yasir said...

//பிலால்(ரலி) அவர்களைப்பற்றி அங்கு ஏதும், இன்னும் நினைவுகூறப்படுகின்றதா?// நிச்சயமாக காக்கா...ஹஜரத் பிலால் அவர்களின் பெயரில் பெரிய பள்ளி கட்டப்பட்டு இருக்கின்றது.....மக்கள் அவரகளை பெருமையாக பேசுகின்றார்கள்....காலனி ஆதிக்கதிற்க்கு உட்படாத அரிய ஆப்பிரிக்க நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று விரைவில் தொடராக காணலாம்

Iqbal M. Salih said...

தாராளமாக எழுதுங்கள்.
ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.

All the Best.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு