Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 5 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 02, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சென்ற வாரத் தொடரில் நபி(ஸல்) அவர்களின் வாழ்நாட்களில் பேருதவியாக இருந்த அபூதாலிப், அவர்கள் மரணிக்கும் நிலையில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை சொல்ல மறுத்தார். இதற்காக நபி(ஸல்) அவர்கள் அழுதார்கள். இணை வைப்பாளர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதை அல்லாஹ் அல்குர்ஆன் (9:113) வசனத்தின் மூலம் உறுதி செய்தான் என்பதுடன் சேர்த்து அழுத்தமான மற்றொரு வரலாற்று சம்வத்தையும் பார்த்தோம்.

குர்ஆனை ஒரு மனிதன் ஓதாவிட்டால் அவன் வாழ்வில் ஏற்படுகிற இழப்பு மிகப்பெரியது. இந்த இழப்புக்கு சொந்தக்காரர்களாக நாம் இருந்தால் இனியாவது நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். 

நபி(ஸல்) அவர்கள் இறுதியாக தொழுகையில் ஓதிய அத்தியாத்தை நினைத்து அழுதுள்ளார்கள் அவர்களோடு வாழ்ந்த சத்திய சஹாபாக்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.

நான் 'வல்முர்ஸலாதி உர்பன்' என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு(ரலி), 'அருமை மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, மக்ரிப் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஓதியதன் மூலம் எனக்கு நினைவுபடுத்திவிட்டாய்' என்று கூறினார். புகாரி 763, volume 1 book 10.

மற்றுமொரு வரலாற்று தொகுப்பில், இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் வல்முர்ஸலாதி உர்பன் என்ற அத்தியாத்தை ஓதும்போது என்னுடைய தாய் உம்முல் ஃபழ்லு(ரழி) அவர்கள் அழுதுவிட்டார்கள், ஏன் தாயே அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்பு இறுதியாக அவர்கள் ஒரு மகரிப் தொழுகையில் ஓதியது அந்த வசனம், நீங்கள் அந்த வசனத்தை ஓதியவுடன் எனக்கு அந்த சம்வத்தை நீ ஞாபகத்திற்கு வந்துவிட்டது, அதை நினைத்து அழுகிறேன் அருமை மகனே என்று கூறினார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது. நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் என்ன திருக்குர்ஆன் வசனங்கள் ஓதினார்கள் என்பதை நினைவில் வைத்திருந்தார்கள் அந்த உத்தம நபியின் உன்னத சஹாபி பெண்கள் என்பதை எண்ணும் போது திருக்குர்ஆனோடு எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் உணரலாம்.

நபி(ஸல்) அவர்களுடைய சபையில் வஹி எழுதுவதற்காக உள்ள தோழர்களில் உபை இப்னு கஃஅப் என்கிற நபி தோழர் மிகவும் முக்கியமானவர். பின்வரும் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள் இவ்வுலகில் யாருக்கும் கிடைக்காத பாக்கியத்தை அல்லாஹ் அந்த நபித் தோழருக்கு கொடுத்துள்ளான்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்கு 'லம் யகுனில்லஃதீன கஃபரூ' எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்' என்று கூறினார்கள். உபை இப்னு கஃஅப்(ரலி), 'அல்லாஹ் என் பெயரைச் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை இப்னு கஃஅப்(ரலி)அழுதார்கள். புகாரி: 4959 - Volume :5 Book :65

நபி(ஸல்) அவர்களுடைய சபையில் அவர்கள் முன்னால், திருக்குர் ஆனை ஓதுவதே மிகப்பெரிய பாக்கியம், அதைவிட மிகப்பெரிய பாக்கியம், இதற்கும் மேலாக அல்லாஹ், குறிப்பிட்ட என் பெயரை சொல்லி ஓத கட்டளையிடுகிறான்  என்பதை கேட்டு உத்தம நபியின் உன்னத தோழர் உபை இப்னு கஃஅப் (ரழி) அவர்கள் தேம்பி தேம்பி ஆனந்தத்தில் அழுதுள்ளார்கள் என்றால், திருக்குர்ஆனோடு அந்த மக்களுக்கு இருந்த தொடர்பு எவ்வளவு நெருக்கமானது என்பதை நாம் உணரலாம்.

நபி(ஸல்) அவர்கள் தம்முடைய இறுதி காலங்களில் கடும் நோயினால் அவதியுற்றார்கள், தொழுகைக்குக்கூட செல்ல முடியாத நிலை, இஷா தொழுகை நேரம் நம்மால் எழுந்து செல்ல முடியவில்லை, நின்றால் மயக்கம் வந்துவிடுகிற நிலைமை அவர்களுக்கு. உடனே தம் அருமை மனைவி ஆயிசா அவர்களை அழைத்து உன் தந்தை அபூபக்கரை இமாமாக நின்று தொழ வைக்கச் சொல் என்றார்கள். 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால்(ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன் போன்றே கூறினேன். நானும் முன் போன்றே கூறினேன். மூன்றாவது அல்லது நான்காவது முறை 'நீங்கள் யூஸுஃப் நபியின்தோழியராக இருக்கிறீர்கள். அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றனர். (அதன்பின்னர்) அபூ பக்ர் தொழுகை நடத்தினார். நபி(ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியவகளாக (பள்ளிக்குச்) சென்றனர். அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி)யின் வலப்புறமாக நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூ பக்ர்(ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள்.  - புகாரி 712 Volume :1 Book :10

இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அல்லாஹ்வுடைய ரசூல் நின்ற முசல்லாவில், அவர்கள் உயிரோடு இருக்கும் போது, பல கோடி நன்மைகள் பெற்று தரும் அந்த இமாமத்து செய்யும் பொறுப்புடன் மக்களுக்கு தொழுகை நடத்தும் ஒரு வாய்ப்பு தன்னுடைய தந்தை அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு கிடைத்திருக்கும் அந்த சந்தோசமான தருணத்தில், திருக்குர்ஆன் வசனங்களை ஓதினால் அழுதுவிடுவார்கள் யா ரசூலுல்லாஹ் என்று தன் தந்தை திருக்குர்ஆனோடு எப்படி தொடர்புடையவர்கள் என்று அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு நற்சான்றிதழ் அன்னை ஆயிசா(ரழி) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸின் மூலம் நாம் காணலாம்.

மேலே சொல்லப்பட்ட மூன்று சம்பவங்களிலிருந்து நாம் பெரும் படிப்பினைகள் ஏராளம்.

நம்மில் எத்தனை பேர் எனக்கு திருக்குர்ஆன் ஓதத்தெரியவில்லையே என்று அழுதிருக்கிறோம்?

என் தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரில் பலருக்கு திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தும் ஓதுவதில்லையே அல்லது ஓதத்தெரியவில்லை என்று என்றைக்காவது வருத்தப்பட்டதுண்டா? அழுததுண்டா?

என் தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி, சகோதர்கள், சகோதரிகள், சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் திருக்குர்ஆனை ஓதினால் அழுவார்கள் என்று என்றைக்காவது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறோமா?

திருக்குர்ஆனோடு நம்முடைய தொடர்பு எப்படி உள்ளது என்பதை என்றைக்காவது, இது போன்ற கண்ணீர் சம்வங்களை வைத்து ஒப்பீடு செய்திருக்கிறோமா?

வல் முர்ஸலாதி உர்பன் என்ற அத்தியாயம் ஓதக்கேட்டால், நபி(ஸல்) அவர்கள் இறுதியாக ஓதிய அத்தியாம் என்ற நினைப்பு நமக்கு வரவேண்டும்.

அல்லாஹ் தான் விரும்பிய நபித்தோழர் உபை இப்னு கஃஅப்(ரழி) அவர்களின் பெயரைச் சொல்லி 'லம் யகுனில்லஃதீன கஃபரூ' எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதச்சொல்லி நபியவர்களுக்கு கட்டளையிட்டானே, அது போல் ஸாலிஹீன்களாக,முத்தகீன்களாக வாழ்ந்தால் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாமே என்று நினைத்து நாம் கண்ணீர் சிந்த வேண்டும்.

இந்த வார உறுதி மொழி:

திருக்குர்ஆனோடு நம்முடைய தொடர்பை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். திருகுர்ஆனில் ஒரு பக்கமாவது பொருளுணர்ந்து அதன் வரலாற்று சம்வங்களுடன் படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.

M தாஜுதீன்

9 Responses So Far:

Unknown said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களுக்கு,

என்ன எழுதுவது என்று தெரியவில்லை. கண்ணீர் சிந்த வைக்கும் தொடர்.

இளம் வயதில் உலகக் கல்வியின் மேல செலுத்திய அக்கறை போல மார்க்கக் கல்வியின் மேல செலுத்தாத காரணம் - மார்க்கக் கல்வி பெற முடியாத சூழ்நிலைகள் ஆகியவற்றை வயதான நேரங்களில் எண்ணிப் பார்க்கும் நிலமைகள். இன்று எழுத்து முதலிய சில நோக்கங்களுக்காக ஆழப் படிக்க வேண்டிய விஷயங்களைப் படித்து அறிந்து கொள்ள தேடியும் கேட்டும் அறிந்து கொள்ளவும் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது.

விதைக்கிற நாளில் வெட்டியாய் ஊர் சுற்றிவிட்டு அறுவடை நாளில் அரிவாள் கொண்டுபோன கதையாக - என்னையும் சேர்த்தே சொல்கிறேன்- இருக்கிறது.

இருந்தாலும் Better late than never என்கிற அளவில் இனியாவது முயன்று இவற்றை அறிந்துகொள்ள முயல்வோமாக!

உங்களின் மூலமாக பலரும் அறிந்துகொள்ளும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தங்களுக்கு அல்லாஹ் துணையிருப்பானாக தம்பி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவசியம் அறிய வேண்டிய அம்சங்கள்!

திருக்குர்ஆனோடு நம் தொடர்பை நெருக்கமாக்கி தினமும் ஒரு பக்கமாவது பொருளுணர்ந்து அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி வியந்து, சிந்தித்து, அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நிறைய தொடர்கள், பதிவுகள் என்று ஆன்லைனில் ஆஃப்லைனிலும் வாசித்தாலும்... சற்றே ஸ்தம்பிக்க வைத்தது இந்த அத்தியாயம் !

அல்குர்ஆனை (சரளமாக உச்சரிப்போடு) ஓதத் தெரிந்தும், தொடர்ந்து அடிக்கடி அர்த்தததுடன் முழுமையாக தொடர்பிலில்லாமல் இருப்பதை எண்ணி !

வருந்தவேண்டும் !

Ebrahim Ansari said...

ஒரு கேள்வி. வேண்டுமானால் யோசனை என்றும் எடுக்கலாம்.

பஜ்ர் தொழுதுவிட்டு தக்லீம் படிப்பது பெரும்பாலும் சஹாபாக்கள் சரிதை , சதக்காவின் சிறப்புகள்,ஆகியவைதான்.

இப்படிப் படிப்பதைவிட அன்றைய பஜ்ர் தொழுகையில் இரண்டு ரக்காத்துகளில் ஓதப்பட்ட ஆயத்துக்களின் மொழிபெயர்ப்பை படித்தால் என்ன? ( பார்க்கலாம் எத்தனை பேர் என்னை அடிக்க கம்பை எடுப்பீர்கள் என்று?)

Unknown said...

சகோ, தாஜுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அவர்கள் கண்ணீர் சிந்திய கணங்களை அழகுற எங்களை கண்ணீர் சிந்த வைக்கும் அளவுக்கு தந்து கொண்டிரிக்கின்றீர்கள் குரான், ஹதீஸ் ஆதாரங்களின் மூலம்.

இத்தொடரை படிக்கின்ற ஈமான் பிடிப்புள்ள ஒவ்வருவரும் குறைந்த பட்சம்
ஒரு சொட்டு கண்ணீராவது தரையில் சிந்தவேனும் அல்லது.கண்கள் கண்ணீரில் நனைந்தே ஆகணும். இல்லையெனில் , இத்தொடருக்குண்டான நோக்கமே நிறைவேரியதாகாது.

திருக்குரானை ஓதத்தெரியவில்லையே என ஏங்கி அழுபவர்கள் நம் சமுதாயத்தில் மிக மிக சொற்பமே. ஆனா என் குழந்தைகளுக்கு இவ்வுலகக்கல்வியை ஒழுங்காகக் கொடுக்கவில்லையே என அழுபவர்களும், ஏங்குபவர்களும் தான் அதிகம். சுவனத்தின் அந்த நீரோடைகளும், அழகிய ஹூருல் ஈன் என்னும் கன்னிகளும் , திராத்சைக்குலைகள் காய்த்துத்தொங்குகின்ற அந்த அழகிய இடங்களும், நீர்த்தடாகங்களும், நாளை அல்லாஹ் தரப்போகின்ற நி'மத் என்பதை நம்ப மறுக்கின்ற வர்களுக்கு அழுகை வர வாய்ப்பே இல்லை.

மறுமையின் தண்டனையையும், அதற்க்கு மாற்றாக அல்லாஹ் தருகின்ற அருட்கொடைகளையும் நூற்றுக்கு நூறு ஈமான் கொண்டவர்கள் நெஞ்சினில் மட்டும் தான் அழுகை வரும்.

மற்றவர்களுக்கு, இது ஒரு கற்பனை , ஜோடனை என்ற மாத்திரத்திலேயே , ஈமானில் மிகவும் அடி மட்டத்தில் உள்ளவர்களுக்கு, அல்லாஹ்வை நம்ப மறுப்பவர்களுக்கு அழுகை வர வாய்ப்பே இல்லை.

ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும் ,ஈமான் இழக்கமாட்டோம் என்று
உதட்டளவில் சொல்பவர்களுக்கு அழுகை வர வாய்ப்பே இல்லை. ஏழ்மையிலும், செம்மையிலும், உயர்விலும், தாழ்விலும், பசியிலும், பகட்டாக இருக்கும்பொழுதும், பதவியிலும், பணிவிலும், உள்ளத்தில் ஈமான் ஒளி வீசினால் ஒழிய , அழுகை வர வாய்ப்பே இல்லை.

யா அல்லா எங்களை, எல்லாநிலையிலும் உன்னை நினைத்து உருகி, உன் தண்டனைக்கு அஞ்சி ,இரகசியத்திலும், வெளிப்படையாகவும் அழும் உள்ளம் கொண்ட நன் மக்களாக மாற்றுவாயாக!

உன் அருட்கொடைகளை எங்கள் மீது பொழிவாயாக!
எங்கள் தவறுக்காக எங்களை பிடித்துவிடாதே இறைவா !
எங்கள் துஆவை ஏற்றுக்கொள்,
உன்னளவில் சேரும்போது, வீரிய ஈமானுடன் உன்னை நினைத்து அழுதவர்களாக எங்கள் உயிரை கைப்பற்றிக்கொள்.

ஆமீன்.
யாரப்பல் ஆலமீன்.

அபு ஆசிப்.

Meerashah Rafia said...

நன்கு படித்தேன்..
நல்லபடிப்பினை...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்த மற்றும் வாசித்து கருத்திட்ட அனைவரும், மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைர்...

திருக்குர்ஆனோடு நம்முடைய தொடர்பை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். திருகுர்ஆனில் ஒரு பக்கமாவது பொருளுணர்ந்து அதன் வரலாற்று சம்வங்களுடன் படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ebrahim Ansari சொன்னது… அன்றைய பஜ்ர் தொழுகையில் இரண்டு ரக்காத்துகளில் ஓதப்பட்ட ஆயத்துக்களின் மொழிபெயர்ப்பை படித்தால் என்ன? //

அஸ்ஸலாமு அலைக்கும் இ அ காக்கா, நல்ல யோசனை. திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்புகளுக்கு அதிரையில் தொழுகை நடக்கும் இடங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது வேதனையே.

பெரும்பாலும் நம்மூர்களில் தொழுகைகளில் ஓதப்படுவது சிறிய சூராக்களே, அநேகருக்கு நன்கு மனப்பட்டமான சூரக்களே ஓதப்படுகிறது. குறிப்பாக திருக்குர்ஆனில் உள்ள இறுதி 25 அத்தியாங்களின் அர்த்தங்களையாவது படித்து உணர்ந்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். நிச்சயம் நம்முடைய தொழுகையில் நல்ல கவனம் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு